பாலசுப்ரமணியனும் bet மேட்சும்

பாலசுப்ரமணியன் இயற்கையாகவே கிரிக்கெட் ரசிகன் மற்றும் விளையாட்டு பிரியன் என்று நான் பார்த்திருக்கிறேன் , அவன் அப்பா கிரிக்கெட் பேட் வாங்கி தரவில்லை என்று ஒரு தோசை கம்மியாக சாப்பிட்டிருக்கிறான்.. அதன் பிறகு பேட் வாங்கியபின்னர் அந்த தோசையை ஈடு கட்டிவிட்டான்..அதன் பிறகு படிப்பு மற்றும் கல்யாணம் என்று அவன் வழக்கை பௌண்டரி லைனுக்கு வெளியேவே சென்று கொண்டிருந்தது ..அப்படியே போயிருக்கும் அந்த சம்பவம் நடக்காமல் போயிருந்தால்

பாசு என்கிற பாலசுப்ரமணியன் அன்று எல்லா நாள்களை போலவும் JV மற்றும் GL போன்றவற்றுடன் போராடிக்கொண்டிருந்த பொழுது சிஸ்டம் மைண்டெனன்ஸ் துறையின் பிரேம் என்கிற பிரேம்குமார் அவன் பக்கத்தில் வந்து " டேய் பாசு ..இந்த சண்டே நம்ம அக்சன்ஸா கம்பெனி பசங்களோட பெட் மேட்ச் இருக்கு வரியா" என்றான் .. பாசு " என்னது நானா டேய் நான் பேட் தொட்டே பலவருஷம் ஆயிடுத்து .. அதோட சண்டே கிளம்பினா என் வீட்டுக்காரி மண்டைய உடைச்சுடுவா .. போ காத்து வரட்டும் " என்று வேலையில் ஆழ்ந்து விட்டான் .. ஆனால் அவன் விதி வலியது எனவே அன்று சாப்பிடும் பொழுது அவன் நண்பர் குழாம் எல்லாம் சேர்ந்து அவனை சம்மதிக்க வைத்து 150 ரூபாய்கள் அவன் பங்காக வாங்கி விட்டார்கள் .. " டேய் 2000 ரூபாய் பெட் மேட்ச் டா .. உன் கிட்ட கம்மியா வாங்கிருக்கோம் " என்று சமாதானம் வேறு சொன்னார்கள்

வீட்டிற்கு வந்து காபி குடிக்கும் போது அவன் மனைவி " அப்பாக்கு சண்டே பொறந்த நாள் ..ஆயுஷுஹோமம் எல்லாம் பண்றா .. சாப்பிட வர சொல்லிருக்கா காபி சாப்பிட்டுட்டு கார்த்தாலேயே போய்டலாம்" என்றாள் ..திருடனுக்கு தேள் கொட்டியதை போல் இருந்தது பாசுவுக்கு .. " அது வந்து உஷா .. அன்னிக்கு கம்பெனியிலே ஒரு கிரிக்கட் மேட்ச் இருக்கு .. 20 ஓவர்தான் .. 10 மணிக்கு எல்லாம் முடிஞ்சுடும் நான் அங்கேர்ந்து நேர உங்க வீட்டுக்கு வரேன்" என்று கிளைமாக்ஸில் சண்டை முடிந்து அடிபட்ட வில்லன் உண்மையை சொல்வது போல் கொஞ்சம் தீனமான குரலில் சொன்னான் ..

உஷா 150 கிலோமீட்டர் வேகத்தில் பால் போட்டு அதில் எட்ஜ் வாங்கி கேட்சை விட்ட ஸ்லிப் பீல்டரை பௌலர் முறைப்பது போல் நெருப்பு காக்கும் கண்களினால் பார்த்தாள் ..

"எல்லா ஞாயித்துகிழமையும் டிவி பாத்துண்டு உக்காந்துண்டு இருப்பேள் .. எங்காத்துலே ஒண்ணுன்னாதான் உங்களுக்கு எல்லாமே வரும் .. இதெல்லாம் வேணும்னே செய்யறது" .. என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் விட்டாள் ..

"நான் வரலேன்னு சொல்லலையே ... மேட்ச் முடிஞ்சுஎவ்வளவு நேர அங்கேதான்" என்று எவ்வளவு சொல்லிப்பார்த்தாலும் எதிர் கட்சி தலைவரை போல் முறைத்துக்கொண்டு இருந்தாள்.. சொந்த செலவில் சூனியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இதை விட சிறந்த உதாரணம் இல்லை என்று யோசித்துக்கொண்டே .. உப்பில்லாத சட்னியையும் , சற்றே தீய்ந்து போன தோசையையும் சாப்பிட்டு படுத்துவிட்டான் ..

அடுத்த நாள் டீமுக்கு பெயர் சூட்டப்பட்டது "பாயும் XI " என்று .. பிரேம் மறுபடி அவன் முன் தோன்றி " நாளைலேந்து காலைல 7 மணிக்கு நுங்கம்பாக்கம் கிரௌண்ட்ல ப்ராக்டிஸ்டா .. வந்துரு" என்று சொல்லிவிட்டு மறைந்து போனான் ..இதை வீட்டில் எப்படி சொல்வது என்று யோசித்தே நிறைய தவறுகள் செய்தான் .. எதற்கும் எல்லா கனமான பொருட்களையும் மறைத்து வைப்பது என்று தீர்மானித்தான் .. அவன் மகன் அஸ்வத் காலையில் எழுந்து ஸ்கூல் செல்லும் வரை அவன் பொறுப்பு என்று இருவரும் தொகுதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் அதை மீறுவதற்கான தைரியம் அவனுக்கில்லை ...

( வரும்)

எழுதியவர் : (18-Dec-17, 3:01 pm)
சேர்த்தது : Suresh
பார்வை : 118

மேலே