தீராத விளையாட்டு பிள்ளை
 
 
            	    
                #தீராத விளையாட்டு பிள்ளை 
மாயக்கண்ணன் ஜாலங்களை 
என்ன சொல்வது - முகுந்தனை 
என்ன சொல்வது..! 
மண்ணில் உதித்த நாள் முதலாய் 
சேட்டைகள் பெரிது - கண்ணன் 
சேட்டைகள் பெரிது..!
எதனை எடுத்து சொல்வதுவோ 
சேட்டையும் அழகு - அவன் 
சேட்டையும் அழகு..!
தொட்டிலிட்ட போதுமவன்
உறங்கவுமில்லை - மாலவன் 
உறங்கவுமில்லை..!
உதைத்து தொட்டில் கிழிப்பானே 
தொல்லையோ தொல்லை - நித்தம் 
தொல்லையோ தொல்லை..!
ஆயர்பாடி வீடுகளில் 
ஓடியாடுவான் - அஜயன் 
ஓடியாடுவான்..!
அயர்ந்திருந்த நேரமதில் 
வெண்ணை திருடுவான் - பானை 
வெண்ணை திருடுவான்..!
கையும்களவு மாகமாட்டி 
கெஞ்சி கொஞ்சுவான் - கள்ளன் 
கெஞ்சி கொஞ்சுவான்..!
விரலசைவில் குழலூதி 
கானம் பாடுவான் - வேணுகோபன் 
கானம் பாடுவான்..!
குழலினிலே வசியம் வைத்து 
கட்டியே இழுப்பான் - கோபியரை 
கட்டியே இழுப்பான்..!
அன்ன நடை நடந்திடுவார்
பின்னலை இழுப்பான் - கண்ணன் 
பின்னலை இழுப்பான்..!
ஆவென்று அவர் அலற 
கைகொட்டி சிரிப்பான் - மாதவன் 
கைகொட்டி சிரிப்பான்..!
கேணியிலே இறைத்த நீரை 
பானையில் சுமப்பார் - கோபியர் 
பானையில் சுமப்பார்..!
கல்லெடுத்து வீசி அந்த 
பானை உடைப்பான் - கண்ணன் 
பானை உடைப்பான்..!
நீரூற்று தலையில் சிதற 
கண்டுமே ரசிப்பான் - மயூரன் 
கண்டுமே ரசிப்பான் ..! 
கோபியர்கள் விரட்டிடவே 
ஓடியே மறைவான் - மாயவன் 
ஓடியே மறைவான்..!
திண்ணக்கனி தருவானே
அன்பு மிகுந்திட - மதனன் 
அன்பு மிகுந்திட..!
எட்டி தட்டி பறிப்பானே
சினமும் கொண்டிட - எவரும் 
சினமும் கொண்டிட..!
கோபியரும் குளித்திருக்க 
ஆடை திருடுவான் - அவர் 
ஆடை திருடுவான்..!
கூப்பாடு போட்டிடவே 
ஆனந்தம் கொள்வான் - அனந்தன் 
ஆனந்தம் கொள்வான்..!
கண்ணனவன் ஆட்டங்களோ 
எண்ணிக்கையில்லை - அதனை 
எண்ணுதற்கோ கைவிரல்கள்
போதவுமில்லை..! 
என்றுமவன் தீராத 
விளை யாட்டுப்பிள்ளை 
இதயமெல்லாம் வீற்றிருப்பான் - அவனை 
தூற்றுவோர் இல்லை..!
#சொ. சாந்தி
 
                     
	    
                
