கருப்பு காதலர் தினம்

வரக்கூடிய நாள் வறுமையை குறைக்கக்கூடிய நாளும் அல்ல, வசந்தத்தை கூட்டக்கூடிய நாளும் அல்ல வியாபார உக்திக்கு உங்கள் வக்கிர புத்தியை வருடிவிடும் ஒரு தினம் தான் இந்த காதலர் தினம்.கவனம் சிதறினால் நீ காணாமல் போய்விடுவாய்.பூப்பெய்த்த உன்னை கண்டு பூரிப்படையும் உன் தாய் தந்தையரை விடவா ஒரு கொத்து பூ கொடுப்பவன் உயர்ந்தவன் ஆகின்றான்? . கவனமாய் இரு சகோதரி.எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் எதுவும் செய்ததாக சரித்திரம் இல்லை.ஏமாளிப்பெண்ணே
என்ன சொன்னாலும் காதில் விழவில்லைதானே. ஆதங்கம் !
மனைவியை காதலித்தாலும் சரி மற்றவர் மகளை காதலித்தாலும் சரி, யாரோ ஒருவன் சொல்லும் அந்த ஒரு நாள் மட்டும்தான் காதலிக்கவேண்டுமா? அப்படியானால் மற்ற தினங்கள்?
இங்கு தான் உலகளாவிய ஒரு வர்த்தகம் நடக்கிறது. வீட்டில் வளரும் மல்லியில் தான் வாசமில்லையா?கனகாம்பர பூவில்தான் நிறமில்லையா? காகிதத்தில் சுற்றிய பூவில் அப்படி என்னதான் இருக்கிறது யோசிக்கவேண்டிய தருணமிது.
வாய் ஜாலத்தில் வானத்தையும் வளைத்துக்காட்டும், உன் வறுமைக்கு ஒரு வாடகை நிர்ணயிக்கப்படும்.
வாய்பிளந்து நீ நின்றால். ஆதாரமில்லாமல் சேதாரத்தோடு நீ நிர்ப்பாய். பொழுது விடியும், உனக்கு மட்டும் இருள்தான்.
செடியில் ஒரு பூ வாடிவிட்டால் செடிக்கு ஒரு பாதகமுமில்லை. "செல்லமாய் வளர்த்த மகளே, நீ வாடிவிட்டால், நீ வாடும் முன் செடி அல்லவா பட்டுப்போகிறது"!