இன்லைய உைகம் சந்திக்கும் ெிரச்சிலைகளுள் முக்கியமாைலவ என்று நீ கருதுவைவற்லையும் அவற்ைால் ஏற்ெடக்கூடிய ொதிப்புகலையும் விைக்கி எழுதுக

தலைப்பு 1: இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுள் முக்கியமானவை என்று நீ கருதுவனவற்றையும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் விளக்கி எழுதுக

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மனிதன் பல சாதனைகளையும் புரிகிறான், பல சவால்களையும் எதிர்கொள்கிறான். அறிவின் வளர்ச்சி விஞ்ஞான வ‍ளர்ச்சியாக மாறியது. ஆனால் இவ்வளர்ச்சியால் மனிதன் அடைந்துள்ள மேம்பாடு அவனுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறதா என்று சிந்தித்தல் அவசியம். உலகில் பல பிரச்சினைகள் நிகழ்ந்துக்கொண்டு வ‍ருகின்றன. நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்திலிருந்து நம்மை சுற்றியுள்ள நாடுகள் வரை பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ப பிரச்சினைகளும் வ‍ளர்ந்துக்கொண்டே செல்கின்றன. அவ‍ற்றில் ஏற்படக்கூடிய இன்றியமையாதவை யாவை என்பனவற்றையும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.
முதலில், உலகிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கும் பிரச்சினை கலப்படம். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்பதற்கு நேற்மாறாக அல்லவா இக்காலச் சூழல் அமைந்துள்ளது. பண வேட்கையினால் அன்பு இல்லாததனால் ஏற்பட்ட விளைவு இது. குறுகிய காலத்தில் அதிகப்படியான இலாபத்தை ஈட்டுவதற்கு எளிய வழி கலப்படம். சத்துள்ள உணவு பொருட்களுடன் தரம் குறைந்த பொருட்களையோ ரசாயனத்தையோ கலந்து அதனை தூய்மையானது என்று கூவி விற்கின்றன. மைதாவிலிருந்து மாமிசம் வரை அனைத்திலும் கலப்படம். உலகில் வெவ்வேறு பகுதிகளில் அதிகமாக உணணக்கூடிய பொருட்களிலேயே கலப்படம் செய்கின்றன. உதாரணத்திற்கு, இந்தியாவில் தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியான பருகக்கூடிய பசுவின் பாலில் கலப்படம் செய்யபடுகின்றது. இது போன்ற கலப்படங்களால் உடல் நிலை என்ன ஆவது. ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைக் கூட கலப்பட உணவால் பேராபத்துக்கு இழுக்கப்படுகின்றன. மெல்ல கொல்லும் நஞ்சு போல இவ்வுணவு பொருட்கள் மனிதர்களின் உடல் நலத்தைக் குன்ற செய்கின்றன. உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள், நிரந்தரப் பிணிகளால் அவதியுறக் கூடும். அதோடு, நல்லது என நம்பி உண்பவரகள் இதய நோய், இரத்த அழுத்தம் போன்ற உயிர் கொல்லிகளுக்கு எளிதில் ஆளாகிவிடுவர். ஆகையால், கலப்படம் மனிதர்களின் உயிருக்கே நஞ்சு. அதோடு கலப்படம் தற்போது புது வகையில் உருவெடுத்துள்ளது. அது தான் பிளாஸ்டிக் உணவு வகைகள். பிளாஸ்டிக் முட்டை, அரிசி போன்ற அன்றாடம் உண்பவையில் கலப்படம். எதை தான் இனி உண்பது என்ற கேள்வி எழுகிறது. கலப்படத்தால் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்புகுள்ளாகும். ஏற்றுமதிகள் குறையும். நம்பகத்தன்மையை இழந்துவிடக்கூடும். இதனால் நாடுகளுக்கிடையே நேரடி உறவு முறைகள் குன்றி பின்பு அவ்வுறவு போர்க்களமாக மாறலாம். எனவே, கலப்படம் என்ற அன்பற்ற செயலினால், உலகில் அமைதி நிலவாது.

அடுத்த முக்கிய பிரச்சினை, சுற்றுச் சூழல் மாசு. பொங்கி வரும் கடலின் சீற்றம், சுட்டெரிக்கும் வெயில், பழுதாகும் இயற்கைச் சூழல். இதற்கெல்லாம் யார் காரணம். மனிதன் மனிதனேதான். தன்னுடைய செயல்பாடுகளினால் இவ்வையாகமே பாதிப்புகுள்ளாகியுள்ளது. மரமும் செடியும் நட்டு பிழைத்த மனித குலம் இன்று அறிவியல் வளர்ச்சியினால் குருடர்களாக்கப்பட்டனர். பண வேட்கையினால் இவ்வுலகை முழுமையாக மாற்ற எண்ணினான். சொர்க்க பூமிக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் மனிதன் ஈடுபட்டான். உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் கடலில் விடப்பட்டால் பின்பு கடலின் சீற்றத்திற்கு ஆளாகுவோம். நச்சு புகை மனிதர்களின் உடல் நலத்தையும் மட்டுமல்லாமல் இப்புவியுனடத்தையும் பாதிக்கிறது. உலக வெப்பமயமாக்கல் என்னும் கால அசூரனுக்கு இவ்வுலகம் ஆளாகும். இதனால், மக்கள் அனைவரும் அவதிக்கு ஆளாகுவர் என்பது தற்போது நம் வாழ்வின் சம்பவங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டுகின்றன. ‘சுத்தம் சுகம் தரும்’ என்பதை மறந்து மனித குலம் சுற்றுப்புறத்தை அழித்து கொண்டே வருகிறது. வீடுகளுக்காக மரத்தை வெட்டுதல் பணத்திற்காக வசதி குறைந்த நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற ஈவிரக்கமில்லாத காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களெல்லாம் ‘ஒசோன்’ மண்டலமே உடைந்து விழுந்தாலும் திருந்த மாட்டார்கள். சுற்றுப்புற தூய்மைக் கேடு நம் அன்றாட வாழ்வையே பாதித்து வருகிறது. உணவு பஞ்சத்திலிருந்து தண்ணீர் தட்டுப்பாடு வரை மக்கள் அவதியுறுகின்றனர். இதற்கு நிச்சயம் தீர்வு காண வேண்டும். இல்லையேல், இவ்வுலகம் வாழ்வதற்கு ஏற்புடையதாக இருக்காது.

அரசியல் பிரச்சினைகளை அடுத்து காண உள்ளோம். இதனைக் காணும்போது முதலில், அர்சாங்களுக்கிடையே தானே பிரச்சினை. இதனால் நமக்கென்ன விளைவு என எண்ணலாம். உண்மை தான். ஆனால், அவை எடுக்கும் முடிவுகளே பின்பு அந்நாட்டு மக்களையும், பின்பு பிற நாடுகளையும் பாதிக்கும். ஒவ்வொரு அரசியல் தலைவரும் வெவ்வேற முடிவுகளை எடுப்பாரகள். அவர்களின் முடிவுகள், சில நேரங்களில், பிரச்சினகளை ஊதி பெரிதாக்கலாம். இல்லையேல் தீர்வு காண உதவலாம். ஆகையால், அரசியல் சண்டைகள் மிகவும் இன்றியமையாத ஒன்று. தற்போது, அரசியல் தகராறுகள் ஏவுகணைகள் விடும் நிலைக்கு எட்டிவிட்டது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தாயாரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. அதோடு, நாடுகளுக்கிடையே நேரடி உறவு முறைகளை துண்டித்துவிடுகின்றன. உதாரணத்திற்கு. தற்போதிய அமெரிக்க அதிபர், டோனால்ட் டிரம்ப் அவர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையே இருந்த ஒப்பந்தத்தை துண்டித்துவிட்டார். இதனால் வர்த்தகம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு நாடுகள் ஆளாகினர். இது போன்ற முடிவுகள் உலக நாடுகளுக்கிடையே வெறுப்பை உண்டாக்கும். முஸ்லிம்களுக்கு நுழைவுச்சான்றுகள் போன்றவற்றை அவர் மறுத்துள்ளார். இது பயங்கரவாத கும்பல்களுக்கு இடையே மேலும் கோபத்தை தூண்டச் செய்யும். ஆகையால், அரசியல் முடிவுகள், பிரச்சினைகள், நாடுகளில் அமைதி நிலவுமா அல்லது பூகம்பம் வெடிக்குமா என்பதற்கு மிக முக்கிய நிர்ணயிப்பாக விளங்குகின்றன.

வாழ்க்கையே ஒரு போரட்டம் என்று கூறினால் அது மிகையாகாது. உலகத்தில் பல பிரச்சினைகள் நிகழ்கின்றன. அவற்றிற்கு மூலக் காரணம் நாமே தான் என்றால் நாம் தான் காய்களை நகர்த்த வேண்டும். அன்பு என்ற உடைமையை கைபிடித்தால் பின்பு எந்த துயரமும் தங்காது. ஒவ்வொருவரும் சமூக பண்புகளோடு சுய நலமில்லாமல் செயல்பட்டால் இப்புவியின் அகமும் புறமும் சுத்தமாக இருக்கும். இல்லையேல், அழிந்து விடும். பிரச்சினகளுக்கு காரணமும் நாம் தான் அதனை தீர்வு காண முடிபவர்களும் நாம் தான்.

எழுதியவர் : அ முஹம்மது மாதிஹ் (15-Feb-18, 7:08 pm)
சேர்த்தது : மாதிஹ்2000
பார்வை : 277

மேலே