எது மகிழ்ச்சி எது துக்கம்
எது மகிழ்ச்சி எது துக்கம்?
மனித சமுதாயத்தில் எதை மகிழ்ச்சியாக கொண்டாடவும், அல்லது எதை துக்கமாக நினைக்கவும் செய்கிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறிதான். காரணம் மகிழ்ச்சி என்பதோ துக்கம் என்பதோ இதுதான் என்று நிர்ணயித்து சொல்ல முடியாத நிலையில் தான் எல்லோருடைய வாழ்க்கையும் சென்று கொண்டு இருக்கிறது.
மகிழ்ச்சியோ, துக்கமோ மனிதர்களிடம் தொடர்ந்து நிலை கொண்டிருப்ப தில்லை, அதே சமயம் அவர்கள் எதை துக்கமாக கருதுகிறார்களோ அதுவே அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை தந்து விட முடியும். இது உங்களுக்கு புரியாவிட்டால் ஒரு உதாரணம், வெளியூர் பிரயாணத்துக்காக பல நாள் திட்டமிட்டு, திடெரென்று ஏற்பட்ட காரணங்களால் பிரயாணம் செய்ய முடியாமல் போகும்போது, அவர்கள் துக்கத்தில் இருக்கிறார்கள். அதே சமயம் அவர்கள் செல்லவிருந்த வாகனமோ ரயிலோ விபத்துக்குள்ளாகியது என்னும் செய்தியோ அல்லது அவர்கள் சென்ற இடம் ஏதோ ஒரு இயற்கை பேரிடரில் சிக்கி கொண்டது என்னும் செய்தியோ அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அவர்கள் மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. “அப்பாடி நல்ல வேளை நாம அங்க போகலை, நாம அதுல போகலை” இப்படி மனம் எண்ணி மகிழ்ச்சி கொள்ளுகிறது.
இதையே மாற்றி பாருங்கள், மிகுந்த சிரமபட்டு இவர்கள் ஏற்பாடு செய்யும் வெளியூர் பயணம் ஒரு சமயம் தவிர்க்கப்பட்டு அதன் காரணமாய் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த துக்கம், அடுத்த நிமிடமே மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வந்து அதே ஊருக்கும் பயணம் செல்கிறார்கள். அப்பொழுது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, மேற்கூறப்பட்ட துயரமாக சம்பவமாக நடக்கும் பொழுது மீண்டும் துக்கத்துக்குத்தான் சென்றுவிடுகிறது.
இதனால் எதை துக்கமாக கொள்வது? எதை மகிழ்ச்சியாக கொள்வது என்று முடிவு செய்ய முடியாத நிலையில்தான் மனிதன் இருக்கிறான்.
இதைவிட ஒரு ‘மகிழ்ச்சி’ கண நேரத்தில் துக்கமாக போகும் ஒரு நிகழ்வு, எனக்கு லாட்டரியில் ஐநூறு ரூபாய் பரிசு விழுகிறது, எனக்கு சந்தோசம் நிலை கொள்ளமுடியாமல் இருக்கிறது (ஓரு சிலர் நினைக்கலாம் ஐநூறு ரூபாய்தானே) என்று என்ன இருந்தாலும் சும்மா வந்த பணம் அல்லவா? இந்த மகிழ்ச்சி ஐந்து நிமிடம் கூட நீடிக்கவில்லை, எனக்கு தெரிந்த அல்லது என் மதிப்பில் அவர் குறைந்தவர், என நான் நினைத்து கொண்டிருப்பவர் அவர் அதே இடத்தில் வந்து தான் கையில் கொண்டு வந்த லாட்டரியில் ரிசல்ட் பார்க்க அவருக்கு ‘பத்தாயிரம் ரூபாய்’ விழுந்திருக்கிறது. அவ்வளவுதான், இது வரை என்னிடம் இருந்த மகிழ்ச்சி கிடைத்த ஐநூறு ரூபாய் என்பது மதிப்பிழந்து அவருக்கு ‘பத்தாயிரம் ரூபாய்’ விழுந்து விட்டதே என்னும் துக்கத்துக்கு சென்று விடுகிறது. இது, என் மனதில் கொண்ட பொறாமையின் காரணமாக நானாக வரவழைத்து கொண்டதுதான், என்றாலும் வந்துவிட்ட துக்கம் என் மகிழ்ச்சியை மாற்றி விட்டதுதானே..!
இதைத்தான் முன்னோர்கள் நமக்கு சொல்லி விட்டது என்னவென்றால் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் சமமாக, அல்லது, அந்த உணர்வை ஒதுக்கி வைத்து விட்டு தொடர்ந்து சென்று கொண்டு இரு என்பதுதான். ஆனால் அது நம்மால் கடைபிடிக்க முடிகிறதா?
நாமே நம்மை துக்கத்தில் ஆட்படுத்தி கொள்வதும், அடுத்த நிமிடமே வேறொரு காரணத்துக்காக மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ளுவோம்.
மகிழ்ச்சியும் கூட எத்தனை எத்தனை வகைகளாக இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் கூட மனிதர்களாய் சந்தோசப்படுத்தி விட முடியும். நீண்ட நேர வரிசையில் நின்று கிடைக்கும், டிககட், அல்லது பொருட்கள், அல்லது எதேனும் உண்ணும் பதார்த்தம், கையில் கிடைத்த உடன் ஏற்படும் மகிழ்ச்சி, குழந்தைக்கு கையில் கிடைக்கும் பொம்மை, நமக்கு அந்த நேரத்தில் கிடைக்கும் பொருள், ஏதேனும் ஒன்று பெற்றவுடன் மகிழ்ந்து போகிறோம்.
துக்கங்களில் கூட சின்ன மகிழ்ச்சி வரும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமக்கும் நணபனுக்கும் ஒரே நேரத்தில் வந்து விட்ட துன்பம், அவனை சிரம்படுத்தும் நேரத்தில் நாம் அதில் இருந்து தப்பித்து கொள்வது, இது நமக்கு மனதுக்குள் மகிழ்ழ்சி கொடுக்கத்தான் செய்கிறது. “அப்பாடி நாம தப்பிச்சோம்” நண்பன் இந்த சிரமத்தில் கஷ்டப்பட போகிறான், என்னும் வருத்தம் ஓரமாய் இருக்கிறான் என்னும் அறிவு தெரிந்தாலும், ‘நாம் தப்பித்ததுதான்’ நமக்கு மகிழ்ச்சிக்குரிய விசயமாக போய்விடுகிறது அப்போது என்ன செய்ய? இது தவறுதான் என்று தெரிந்தாலும்.
மனிதனை விட மற்ற எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி துக்கம் என்பது இரண்டு மூன்று வகைதான் ஒன்று உயிரை பாதுக்காக்க ஓடி கொண்டே இருப்பது, இது துக்கம், அல்லது கூடப்பிறந்த குட்டிகளுடன், அல்லது தோழமை உயிர்களுடன் விளையாடுவது, இது மகிழ்ச்சி, ஆனாலும் முக்கிய சிக்கல் உயிர் தப்பித்தால் மகிழ்ச்சி, இல்லையென்றால் மரணத்தின் துக்கம், அடுத்து உணவு பிரச்சினை கிடைத்தால் அன்றைய உணவு, மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் துக்கம், இப்படித்தான் அதனதன் வாழ்க்கை செல்கிறது.
மனிதனுக்கு மட்டும் அவன் வாழ்க்கையில் ஓராயிரம் துக்கங்கள், மகிழ்ச்சிகள். பிறக்கும் போது தாயை துன்பபடுத்தி, (மகிழ்ச்சி கலந்த துக்கம்) வெளியே வந்தவுடன் முதல் அழுகையில் ஆரம்பிக்கிறது, இது துக்கத்தில் வந்ததா, மகிழ்ச்சியில் வந்ததா, நமக்கு பதில் சொல்லும் அளவில் மருத்துவ அறிவு இல்லை, ஆனாலும் பிறந்த குழந்தையை சுற்றி இருப்பவர்களுக்கு ஏற்படுவது மகிழ்ச்சி. இப்படித்தான் வாழ்க்கை ஒரு மனிதனிடம், துக்கம், மகிழ்ச்சி இரண்டிலும் இருந்து தொடங்குகிறது.
சின்ன சின்ன மகிழ்ச்சிகள், துக்கங்கள், என்பது சிறுவயதில் பள்ளியில் பிரம்பால், ஸ்கேலால் அடிக்கும் ஆசிரியர், அன்று வகுப்புக்கு வந்தால் துக்கம், வராவிட்டால் மகிழ்ச்சி, இதுவே வளர வளர பல பல வகையான துக்கங்களும், மகிழ்ச்சிகளும் மனிதனிர்களிடையே வந்து வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுது நாம் கவனிப்போம் எது துக்கம், எது மகிழ்ச்சி? நிமிடத்தில் மகிழ்ச்சி துக்கமாகிவிடவும், துக்கம் மகிழ்ச்சியாகிவிடவும், கால சூழ்நிலைகள் மாற்றி விடும்போது நம்மால் எதை துக்கம், மகிழ்ச்சி என்று முடிவு செய்வது.
காலங்கள் மட்டுமே மனித உயிர்களை துக்கத்தில் ஆழ்த்தவும், மகிழ்ச்சியில் திளைக்கவும் வைக்கிறது என்பதை அறிய முடிகிறது.
என்றாலும் மனித வாழ்க்கை என்பது துக்கம் வந்தவுடன் சோம்பி கொள்வதும், மகிழ்ச்சி வந்த போது எழுச்சி கொள்வதும் மனித உயிர்கள் தோன்றியபொழுதில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
மகிழ்ழ்சியை துக்கமாக்கவும், துக்கத்தை மகிழ்ச்சிக்குரியதாக்குவதும், கூட காலம் தொடர்ந்து நடத்தி கொண்டுதான் இருக்கிறது, அதையும் மனித உயிர்கள் சந்தித்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்