நூலின் பெயர் கவிஞர்இராஇரவியின் ஹைக்கூ உலகம் நூலாசிரியர் கவிஞர்பொன்குமார் நூல்வகை கட்டுரைகள் மதிப்புரை முனைவர் சசந்திரா
நூலின் பெயர் :கவிஞர்.இரா.இரவியின் ஹைக்கூ உலகம்
நூலாசிரியர் :கவிஞர்.பொன்.குமார்
நூல்வகை :கட்டுரைகள்
மதிப்புரை : முனைவர் ச.சந்திரா.
வெளியீடு : வானதி பதிப்பகம்.
23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் :118 விலை : ரூ110.
தொலைபேசி எண்கள் 044 24342810 - 24310769
கோபுர நுழைவாயில் :
ஆசிரியர் பொன்.குமார் அவர்கள் பகுப்பும் தொகுப்புமாய்,விமர்சனமும்,படைப்புமாய்
ஏறக்குறைய 77 நூல்கள் வெளியிட,ஹைக்கூ திலகம் இரா.இரவி நூல்கள் விமர்சனத்
தொகுப்பாக 78-வது நூலை வெளியிட்டிருப்பது வரவேற்கத் தக்க ஒன்று...பொன்.குமார்
அவர்கள் ,தான் ஒருநூலை விமர்சிக்கும் வேளையிலெல்லாம் அந்நூலின் அணிந்துரையில்
இருந்து சில துளி,என்னுரையில் சில துளி,ஹைக்கூ உருவான காலம் முதல் இன்று
வரையிலான உருமாற்றங்கள் கருமாற்றங்கள் குறித்த துளி என மூன்றையும் பாலும் பழமும்
தேனும் விரவிய பழனி பஞ்சாமிர்தமாய் வாசகர் மனதிற்கு விருந்து படைக்கின்ற தன்மை
பாராட்டத் தக்கதாகும்.
கலங்கரை விளக்கம் :
தமிழ்ச்செம்மல் இரா.இரவியின் ஹைக்கூவின் ஒரு வார்த்தைக்கு ஒரு வரியும், ஒரு
வரிக்கு ஒரு வாக்கியமுமாய் மூன்று வரிகளுக்குமே முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாய்
சுழற்றிச் சுழற்றி கப்பலுக்கு கரையைக் காட்டும் கலங்கரை விளக்கமாக பொன்.குமார்
அவர்களின் விமர்சனம் உள்ளது.
திருமணமும் திறனாய்வும் :
பொதுவாக தமிழர் திருமணத்தில் தாம்பூலம் மாற்றி கொள்ளுதலும் மணமகளுக்கு பூ
வைத்து உறுதி செய்தலும்,மணவோலை வாசித்தலும்,பந்தக்கால் நடல்,,திருமாங்கல்ய நாண்
பூட்டுதல் என திருமணம் முறையாக மங்களகரமாக நடத்துதல்
இயல்பு.கன்னிகாதானத்திற்குப் பின் மணமக்கள் மாலை மாற்றி, கரங்கோர்க்க விருந்திற்குப்
பின் ,திருமணம் இனிதே நிறைவேறுகின்றது.
இதே போல்தான் பொன்குமார் அவர்களும் இரவி படைத்த ஹைக்கூ ஜப்பான் ஹைக்கூ
கருவை ஒட்டியதா?ஹைக்கூவா?அல்லது சென்ரியுவா? என உறுதி செய்து,நிச்சியம் இது
தமிழருக்கான ஹைக்கூதான் என முடிவெடுத்து ஹைக்கூ இலக்கணத்தை
நிலைநிறுத்தி,நூலாசிரியர்க்கும் திறனாய்வாளருக்குமான மனஒருங்கிணைப்பில் ,இலக்கிய
உலகிற்கு தானம் புரியும் பொருட்டு விமர்சனம் எழுதி அறுசுவை உணவாய் வாசகர்க்கு
படைக்கின்றார்.
முத்தமிழும் முத்துக்குளித்தலும்:
சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்க தேடுகையில் கண்ணிற்குப் புலப்படுவது
பாசிக்குவியலும்,நீர்வாழ் உயிரினங்களும்,பவளப்பாறைகளும் வெற்றுச் சிப்பிகளும்
தான்.திறனாய்வாளரோ ஹைக்கூ எழுதும்பொழுது அளவுக்கு அதிகமாக எழுதக்கூடாது,குறிப்பிடும்படி 'குறிப்பிட்டு" எழுதவேண்டும்,ஒரே பாடுபொருளைக் கொண்டு
பல்வேறு ஹைக்கூ எழுத வேண்டாம் என கடற்கழிவுகளைத் தவிர்த்துவிட்டு பவழப்பாறை
யைச் செதுக்குவது போல இரவி அவர்கள் ஹைக்கூவைச் செதுக்கி பவள மாலையாய்
ஒழுங்குபடக் கோர்த்துதமிழன்னைக்கு அணிவிக்க வேண்டும் என ஒரு தாயின் கனிவுடனும்,
தந்தையின் கண்டிப்புடனும் விமர்சனத்துகிடையே ஆங்காங்கே சொல்லிச் செல்வது இளம்
படைப்பாளர்க்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
பவழமல்லிகையும் பாரிஜாத மலர்களும்...
ஆசிரியர் , கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ பாடும் திறனை பாராட்டும் தருணங்கள்
பூலோக மலரான பவள மல்லிகையையும் ,தேவலோக மலரான பாரிஜாத மலரையும் நுகர்ந்த
நறுமணத்தைப் பரிமளிப்பதாக உள்ளது.
"இம்"-என்றல் சிறைவாசம்.."ஏன்"-என்றால் வனவாசம்..இரா.இரவியிடம் எப்போதும்
'ஹைக்கூ' வாசம்.
"இரா.இரவியைத் தவிர்த்து தமிழக ஹைக்கூ வரலாறு எழுத முடியாது."
"ஹைக்கூ பல படைப்பாளர்களுக்கு பேச்சு எனில் இரவிக்கு மூச்சு "
என அவர்கள் பாராட்டு மழை பொழிவதிலிருந்து தமிழ்ச்செம்மல் பட்டம் இவருக்கு
தகுதியான ஒன்றுதான் என்பதை வாசகர்கள் உணர முடிகின்றது.
வில்லும் அம்பும்...
கண்ணில் பட்டதையும் மனதிற்குப் பட்டதையும் உடனேயே சொல்லில் வடிப்பது
இரா.இரவிக்கு கைவந்த கலை என்பதை விமர்சனம் வழி அறிய முடிகின்றது.
மின்னல் வெட்டு ஹைக்கூ;
"ஏறும்போது ரூபாயில்
இறங்கும்போது பைசாவில்
பெட்ரோல்"(ப.9)
"பேருந்து நின்றது
பயணி வருந்தினான்
வெள்ளரிச் சிறுவன் மகிழ்ச்சி"(ப.3)
"தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
'அம்மா'. (ப.35)
.மனமார...
தொகுப்பாசிரியர் தன் இலக்கியத்திறனாய்வு வழி பல்துறை இலக்கியவாதிகளை
பண்படச் செய்வது,பசும்பால் நறுமணமும் பொலிவும் மிக்க நெய்யாக உருமாற
பக்குவப்படுதல் போல் தன் போன்ற எழுத்தாளர்களை கவிச் சிற்பிகளாக உருமாற்றுவது
வியக்கத் தக்க ஒன்றே.தன் விமர்சனங்களைஅணிந்துரை,என்னுரை,நூலின் மையக்கரு என
மதுரைக்கதம்பம் போன்று கனகாம்பரம், மல்லிகை,மரிக்கொழுந்து என
வரிசை,வடிவம்,மணம் மாறாது தொடுக்கும் கலை தொடரட்டும் என இலக்கிய வாசகியர்
சார்பில் கவிஞர்.பொன்.குமார் அவர்களை வாழ்த்துகின்றோம்.சீரான நதியோட்டம் போன்ற
தங்கள் விமர்சனத்தால் "துளிப்பாச்சுடர்"இரா.இரவி போன்றோர் மென்மேலும் இலக்கிய
உலகில் பற்பல விருதினைப் பெறுவர் என்பதில் ஐயமுண்டோ?