இழக்கோ நறுமாவின் கொய்தளிரன்ன நிறம் - முத்தொள்ளாயிரம் 56

இன்னிசை வெண்பா

களியானைத் தென்னன் இளங்கோஎன்(று) எள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க - அணியாகம்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம். 56 முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

வெற்றிக் களிப்புடைய யானைப் படையைக் கொண்ட பாண்டியன் இளவரசன்தானே என்று ஏளனம் செய்த பகைமன்னர்கள் அவனுக்குப் பணியவில்லை;

அவர்களுடன் போரிட்டு வென்றதனால், அவர்கள் தங்கள் நாடுகளை இழந்தனர்.

அத்தகைய பாண்டிய இளவரசனின் அணிகள் பூண்ட உடலைக் கைகளால் தொழுதவளாகிய (தலைவியாகிய) நானும் நறுமணம் பொருந்திய கொய்த மாந்தளிர் போன்ற என் அழகிய உடலின் நிறத்தை இழக்க வேண்டுமோ?

களியானை – கள் குடித்த களிப்புடைய யானை; மதம் பிடித்த யானை; போரில் வெல்லும் களிப்புடைய யானை,

தென்னன் – பாண்டியன், இளங்கோ – இளவரசன்; வயதில் இளையவன்,

எள்ளி – ஏளனம் செய்து, பணியார் – பாண்டியனைப் பணியாத பகை மன்னர்கள்,

தம்பார் – தங்களுடைய நாடுகள்,

அணி ஆகம் – அணிகலன்கள் பூண்ட பாண்டியன் உடல்,

கைதொழுதேனும் – கைகளால் தொழுதவளாகிய நானும்,

இழக்கோ – இழக்க வேண்டுமோ?, நறுமாவின் கொய்தளிர் – நறுமணம் பொருந்திய மாமரத்தின் கொய்த இளந்தளிர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-18, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே