பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி ---------------- தகவல்கள்

இந்தியாவின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு அளவும், 2017 ஆம் ஆண்டு கடைசி காலாண்டில் இந்த வங்கிக்கு கிடைத்த லாபத்தின் 50 மடங்குமாக இந்த தொகை இருப்பது குறிப்பிடத்தக்கது.

சில வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்தும் வகையில் நிதி மோசடி பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக இந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

பிற வங்கிகளையும் இந்த மோசடி பரிமாற்றம் பாதிக்கலாம் என்று கவலைகள் எழுந்துள்ளதால், இந்திய வங்கி வட்டாரத்தில் இது நம்பகதன்மைக்கு இது பேரிடியாகியுள்ளது.

இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய தகவல்கள்

1.கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன் பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக கூறப்படுகிறது.
2.இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம் வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம் (letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
3.இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள் கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப் பணத்தை வங்கி வசூலிக்கும்.
4.ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின் நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும் போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
5.இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு செய்துள்ளன.
6.இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர் விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள் பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான் ஸ்விஃப்ட்.
7.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட் அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக் கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள் சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கடன் அளித்துள்ளன.
8."நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின் வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம் சென்றுள்ளது.
9.இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை மறுசுழற்சி செய்துள்ளனர்.
10.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி, உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே தெரிய வந்தது.
---------------------------------------
வங்கியில் தனக்கு ரூ.5000 கோடி மட்டுமே கடன் உள்ளதாகவும் சொத்துக்களை விற்றாவது அதை திருப்பித்தர தயாராக இருப்பதாகவும் வைர வியாபாரி நிரவ் மோடி கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொண்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டில் இருந்தபடியே சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "பஞ்சாப் நேஷனல் வங்கி நான் தரவேண்டிய கடன் தொகையை தவறாகக் குறிப்பிட்டுள்ளது. எனக்கு ரூ.5000 கோடி மட்டுமே கடன் உள்ளது. வங்கியின் அவசரத்தால் ஊடகங்களில் இது மிகப்பெரிய செய்தியாகி எனது நிறுவனங்களில் தேடுதல் வேட்டை மற்றும் பணி முடக்கம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இதன் காரணமாக வங்கிகளுக்கு நாங்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகையை திருப்பி செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடன் நிலுவைத் தொகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வங்கி காட்டிய கெடுபிடியால் பிப்ரவரி 13-ம் தேதி நான் நடத்திய பேச்சுவார்த்தையைக்கூட நீங்கள் பொருட்படுத்தவில்லை. உங்களது நடவடிக்கையால் எனது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சரிந்துள்ளது.

பிப்ரவரி 13 மற்றும் 15 தேதிகளில் எனது பிரதிநிதிகளும் வங்கிப் பிரதிநிதிகளும், வங்கி அதிகாரிகளும் கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீங்கள் புகார் பதிவு செய்த பின்னரும்கூட எனது ஃபயர்ஸ்டார் நிறுவனம், மற்றும் பிற சொத்துக்களை விற்க அனுமதிக்குமாறு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அதையும் நீங்கள் பொருட்படுத்தவில்லை. நான் வங்கியை மோசடி செய்யவில்லை கடனை திருப்பிச் செலுத்தவும் தயாராக இருக்கிறேன். எனது நிறுவனங்களில் வேலை செய்யும் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் தரவேண்டியுள்ளது. அதை, அனுமதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------
டெல்லி:
எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை அதிரடியாக ரத்து செய்துள்ளது

எழுதியவர் : (20-Mar-18, 1:53 pm)
பார்வை : 28

மேலே