சிம்லா அருகே உள்ள ஃபகு அருகே உள்ள பனி என்னும் ஊருக்கு -----இமையத் தனிமை -1 2--ஜெயமோகன்

மார்ச் மூன்றாம்தேதி சென்னைக்குச் செல்லும்போது அங்கிருந்து எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருக்கவில்லை. ஒருநாளில் திரும்பி வரவேண்டும் என்னும் கணிப்புதான். வழக்கமாக ஒருநாளுக்கு என்றால் இரண்டுநாளுக்கான ஆடைகள் எடுத்துக்கொள்வது என் இயல்பு., நீண்டகால அனுபவத்தால் அமைந்த நடைமுறையறிவு.

ஆனால் ரயில் கிளம்பியபோது எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றியது. ரயிலில் அமர்ந்திருப்பதே ஒரு பெரிய சுமையுடன் இருப்பதுபோல திணறவைத்தது. நிர்மால்யாவைக் கூப்பிட்டு ஊட்டிக்கு வருகிறேன், குருகுலத்தில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று சொன்னேன். சென்னை சென்றபின் மனம் மாறிவிட்டது. ஊட்டியில் எல்லா இடங்களும் தெரிந்தவை. தெரிந்த முகங்கள் வேறு. தொலைந்துபோய்விடவேண்டும் என்று எண்ணினேன். இமையமலைப்பக்கம் சென்றுவிடலாம் என்று தோன்றியது. தொலைந்துபோய்விட ஏற்ற இடம் இமையமலைதான்.

சிம்லா அருகே உள்ள ஃபகு அருகே உள்ள பனி என்னும் ஊருக்கு நான் 1986 ல் சென்று அங்கு ஒர் இல்லத்தில் தங்கியிருந்தேன். ஆகவே ஃபகுவுக்குச் செல்வதாக முடிவெடுத்தேன். நான்காம் தேதி காலையில் டிஸ்கவரி நூல்மையத்தில் வெய்யிலின் கவிதைநூல் வெளியீட்டு விழா. இளங்கோ கிருஷ்ணன், சச்சின், மண்குதிரை என இளம் இலக்கியவாதிகள். அரங்கு சற்று சிறிது, பாதிப்பேருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகவே சுருக்கமாகவே பேசினேன்.

.




அன்றே மதிய உணவுக்குப்பின் சௌந்தரின் சத்யானந்த யோக மையத்தில் வெண்முரசு வாசகர்கள் வந்திருந்தனர். குருதிச்சாரலின் இறுதி பகுதியின் தத்துவப்போர் குறித்து பேசினேன். அதன் தத்துவஉள்ளடக்கம் இலக்கியத்தின் படிமமொழியில் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதைப்பற்றி. அன்றிரவு வரை நண்பர்கள் உடனிருந்தனர்.

நான்காம் தேதிதான் விமானச்சீட்டு போட்டேன். ஃபகுவில் தங்க ஒர் இல்லத்தையும் முன்பதிவுசெய்தேன். ஐந்தாம்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம். நான் மதியமே கிளம்பி விமானநிலையம் சென்று வெறுமே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கே.பி.வினோத் தன் காரில் கொண்டுசென்றுவிட்டார். செல்வதைப்பற்றி சென்னை நண்பர்கள் தவிர எவரிடமும் சொல்லவில்லை. என் உளநிலையை விளக்கிச் சொல்ல முடியாது என்பதனால்தான். சொல்கூட்டிப் பேசுவதே கடினமாக இருந்தது.

இரவு எட்டு மணிக்கு டெல்லியில் இறங்கியபோது நண்பர் தனாவின் உறவினராகிய சோழன் விமானநிலையம் வந்திருந்தார்.வாடகைக் காரில் டெல்லியின் வண்டிநெரிசல் நடுவே ஊர்ந்து சென்று இரவு பத்துமணிக்கு சிம்லா செல்லும் பேருந்தில் ஏறினேன். ஒரு பெரிய விடுதலையுணர்ச்சி உருவானது, இனி எவரிடமும் பேசவே வேண்டியதில்லை என. விமானத்தில் ஒரு இத்தாலிய நாவல் வாசித்தேன்.






சிம்லாவில் பேருந்து நிற்கும்வரை நான் துயிலவேயில்லை. வெளியே முதலில் விளக்குகள் செறிந்த நகரச்சாலை, பின்னர் விளக்கொளித்துளிகள் சிதறிப்பரவிய சிற்றூர்கள், பின்னர் இருளே அலையலையாக எழுந்து மலைகளாகத்தெரிந்த இமைய அடிவாரம். மலைகளை அடைந்தபோது பேருந்தின் எதிரொலி எழுந்து மலைகளை செவிக்கும் காட்டிக்கொண்டிருந்தது. எழுதிய சொற்கள், எழுதவிருக்கும் சொற்கள் என எனக்குள் கொந்தளித்துக்கொண்டே இருந்தது.

குளிரத்தொடங்கியதும் தனாவிடம் கடனாகப்பெற்ற குளிருடையை அணிந்துகொண்டேன். விமானத்தில் இருக்கும்போதுகூட நான் ஊரில் இருப்பதாகவே தோன்றியது. ஊரிலிருந்து ஒவ்வொன்றையாக உதறிக்கொண்டிருந்தேன். சிம்லா பேருந்தில் அமர்ந்தபோதே சிம்லா சென்றுவிட்டேன். ஊர் நெடுந்தொலைவில் எங்கோ இருந்தது. எண்ணங்கள் கூட ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து பார்த்துக் கைவிடும் செயல்தான்.

சிம்லாவில் இறங்கியதுமே வாடகைக்கார் ஓட்டுநர்கள் சூழ்ந்துகொண்டனர். கோட் போட்ட எழுபதுவயதுக்காரர் பொதுவாக வாடகைக்கார்களை நிர்வாகம் செய்தார். என்னிடம் எங்கே செல்லவேண்டும் என்று ஆங்கிலத்தில் கேட்டார். ஃபகு என்றதும் “விலாசம் கொடு” என்றார். அதை காட்டியதும் திரும்பி ஒர் ஓட்டுநரிடம் இந்தியில் “இவரை கூட்டிக்கொண்டு செல். ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்” என்றார். என்னிடம் “ஆயிரம் ரூபாய்” என்றார்.



நான் “ஆயிரம் ரூபாய் கூடுதல்” என்றேன். “இங்கே பேரம் கிடையாது. ரேட்டை எவரும் கூட்டி வாங்கவும் விடமாட்டோம். ஃபகுவுக்கு ஆயிரம் ரூபாய். இங்கிருந்து ஃபகு 25 கிமீ தொலைவு. நீங்கள் செல்லவேண்டியது பனி, அங்கிருந்து ஏழு கிமீ மேலும் செல்லவேண்டும். சென்று வருவதற்குத்தான் கட்டணம் வசூலிப்போம், அங்கிருந்து எங்களுக்கு வாடிக்கை கிடைக்காது” என்றார்.

சிரித்தபடி என் தோளில் தட்டி “நம்பு சகோதரா, அங்கே செல்லும்வழியில் நீயே உணர்வாய், ஆயிரம் அதிகமில்லை என்று. இங்கே எங்களுக்கு நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி நான்கு மாதங்களும் வருமானமே இல்லை. எஞ்சிய மாதங்களில் சம்பாதித்து வாழ்கிறோம். ஆனாலும் டெல்லியை விட இங்கே வாடகை குறைவுதான்” நான் சிரித்துக்கொண்டு சரி என்றேன். டெல்லியில் இருபது கிலோமீட்டருக்கு ஆயிரம் கொடுத்திருந்தேன்.




ஃபகு செல்லும்பாதை ஒரு மாபெரும் ரங்கராட்டினம். நல்ல சாலைதான், ஆனால் சுற்றிச்சுற்றி மலையிறங்கி பின்பு மேலும் ஏறிச் சென்றது. ஃபகு சிம்லாவை விட உயரமானது. அந்த கோட்டுபோட்ட மனிதர் யார் என்று கேட்டேன். “பண்டிட்ஜி” என்றார். அவரை புரோக்கர் என முதலில் நினைத்தேன். ஆனால் அத்தனை ஓட்டுநர்களும் அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவதைக் கண்டு கார் உடைமையாளர் என நினைத்தேன். பின்னர்தான் புரிந்தது அவர் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர், பிராமணர் என.

விடியற்காலையின் ஒளியில் கண்ட சிம்லா ஏமாற்றமூட்டியது. எங்கு பார்த்தாலும் இடைவெளியே இல்லாமல் கட்டிடங்கள். அம்மை வந்த உடல் போல. பின்னர் ஒரு குழந்தையை என்னுள் இருந்து எடுத்துக்கொண்டேன். குன்றுகள் முழுக்க கட்டிடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக. கட்டிடங்களின் வானளாவிய குவியல்கள். கட்டிடங்களால் ஆன மலைகள். ஒரு நோக்கில் பலநூறு கிளைகள் கொண்ட மாபெரும் மாடிக்கட்டிடம்!




நான் தங்கியிருந்த ஸ்னோவியூ தங்குமிடம்


ஃபகுவைச் சென்றடைய ஒன்றரை மணிநேரம் ஆகியது. என் இல்லத்தங்கல் உரிமையாளரை செல்பேசியில் அழைத்து வழிகேட்டுக்கொண்டு சென்றேன். சுற்றிலும் ஊசியிலைமரங்கள் செறிந்த மலைச்சரிவில் தனியாக இருந்தது ராகேஷ் டாக்கூரின் இல்லம். முப்பத்தைந்து வயதான உற்சாகமான இளைஞர். முட்டிமோதி ஆங்கிலம் பேசுவார். ஹிமாச்சலப்பிரதேசமே இந்தியாவிலேயே நட்பான மாநிலம் என்பது என் எண்ணம் [கேரளத்திற்குக் கடைசி இடம், அதற்கு முன்பாக தமிழகம்] அந்த எண்ணம் அவரால் மேலும் வலுப்பெற்றது. முதல் பார்வையிலேயே பிடித்துவிடும் எளிய இனிய மனிதர்

ஸ்னோலைன் இல்லத்தங்கல் . நான்கு அறைகளை வந்து தங்கும் விருந்தினருக்காகக் கட்டியிருந்தார் ராகேஷ் டாக்கூர். வசதியான நல்ல அறைகள். ஒரு உணவுக்கூடம். கீழே ஒருபகுதியில் அவருடைய இல்லம் . அவருடன் அவர் அம்மா, அப்பா, மனைவி இரு பெண்குழந்தைகள் வாழ்ந்தனர். பரீணிதி தாகூர் எல்கேஜி. அவள் தங்கை சுஜாதா தாகூர் நடைபழக ஆரம்பித்திருந்தாள். உணவு அவர் வீட்டில்தான். அவர் அப்பா ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ராகேஷ் அங்கே ஏழு ஏக்கரில் ஆப்பிள் பயிரிடுகிறார். நான்கு எருமைகள். கீழே மேலும் ஏழு ஏக்கரில் உருளைக்கிழங்கு, பெரும்பயறு ஆகியவை பயிரிடுகிறார்.

பகலில் அதிகபட்சம் 15 பாகை வெப்பம், இரவில் 5 பாகைக்கும் கீழே. ஒருநாள் புலரியில் சுழியம்கூட வந்தது. காலையில் எல்லா புல்நுனிகளிலும் பனிக்கட்டி மணிகள். ஓடைகளின் விளிம்புகளில் பனிக்கட்டி கண்ணாடிச்சில்லு போல கூர் கொண்டு நின்றது. நான் செல்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்புவரை அப்பகுதியை உறைபனி மூடியிருந்தது. நான் அமர்ந்திருந்த மாடியில் இரண்டு அடி உயரத்திற்கு பனி இருந்தது என்றார் ராகேஷ் டாக்கூர்

.



ஆப்பிள்மரங்கள் அனைத்தும் இலைகளை உதிர்த்து குச்சிகளாக நின்றன. அவற்றின் கிளைகள் பனிதாளாமல் ஒடிந்திருந்த வடுக்களில் பச்சைநிறமான ஏதோ பூசியிருந்தார். சிறிய ஆப்பிள் மரங்களுக்கு பாலிதீன் போர்வை இடப்பட்டிருந்தது. ராகேஷ் டாக்கூர் “குளிர்தாளாதவை… இரண்டுநாளில் எடுத்துவிடுவோம்” என்றார்.

என் கால்கள் மரத்து விரல்கள் அசைவிழந்தன. நான் ஷூக்கள் கொண்டுசெல்ல்வில்லை, என் வழக்கமான செருப்பைத்தான் போட்டிருந்தேன். அறைக்குள் சென்று வெந்நீரில் காலை வைத்து இதமாக மீட்டுக்கொண்டேன். பின்னர் வெளியே நடக்கச் சென்றபோது பாலிதீன் கவரை காலுறையாகப் போட்டுக்கொண்டேன். ஃபகு கடைவீதியில் அன்றே ஒரு கம்பிளிக் காலுறையை வாங்கி அணிந்தபின் சமாளிக்கமுடிந்தது.

உள்ளூரில் கிடைக்கும் ஆப்பிள், பைன் மரங்களைக்கொண்டு சுவர்களும் உட்கூரையும் அமைக்கப்பட்ட நவீனமான அறை. தரையில் கம்பளம் ஒட்டப்பட்டிருந்தது. மெத்தை, போர்வை எல்லாமே சுத்தமானவை. தண்ணீரைத் தொடமுடியாது, குளிர். வெந்நீர் எப்போதும் இருந்தது. அறைகளுக்கு முன் பெரிய உப்பரிகைகள்.




கண்ணாடி அறை


அறையை ஒட்டி ஒரு கண்ணாடி அறை.மூன்றுபக்கமும் பார்க்கமுடியும். வெளியே ஐந்து பாகை வரை குளிர் இருந்தபோதிலும் உள்ளே இருபதுதான். காலைவெயிலில் இருபத்தைந்து வரை வந்தது. “உள்ளே மெட்ராஸ் போல இருக்கும்” என்றார் ராகேஷ் டாக்கூர் ”மெட்ராஸ் வந்திருக்கிறீர்களா?” என்றேன். “ஆம், அங்கே ஒரு மாதம் தங்கினேன். தாங்கமுடியாத வெப்பம்….இரவெல்லாம் தூங்கவே முடியாது” என்றார். “எப்போது வந்தீர்கள்?” என்றேன். ”2012 டிசம்பரில்” என்றார்.

நான் பெரும்பாலான நேரம் கண்ணாடி அறையின் உள்ளேயே இருந்தேன். நேர்முன்னால் மலையடுக்குகள் பெரும்சரிவாக இறங்கிச்சென்றன. ஒரே நோக்கில் பல குன்றுகள், அவற்றில் நாடாபோலச் சுற்றியிருந்த சாலைகள், மண்புழுக்களைப்போன்ற ஊர்வழிகள். அவை சென்று சேர்ந்த சிற்றூர்கள். சரடில் பிணைக்கப்பட்ட பட்டங்கள் போல். திராட்சைக்கொடியில் காய்கள் போல். ஒளியில் மின்னும் தகரக்கூரைகள். மிக அரிதாக சிறுபேன் என ஊரும் பேருந்துகள். அவற்றின் முகக்கண்ணாடியின் ஒளி கண்களை வந்து வெட்டிச்செல்லும்.

சுற்றிலும் ஆப்பிள்தோட்டங்கள், ஊசியிலை மரக்காடுகள், மலைமடிப்பின் ஆழங்களில் பனி வழிந்திறங்கிய அருவிகளின் வடுக்கள். அத்தனை விரிவை விழிகளால் நோக்குவதே ஓர் அமைதியை அளித்துவிடுகிறது. இதே விரிவனுபவத்தை பாலைநிலத்தைப் பார்க்கையிலும் அடைந்திருக்கிறேன்.




படுக்கையறை
நேர் முன்னால் மூன்று அலைகளாக பனிமுகடுகள். பதினைந்து நாட்களாகப் பனி உருகிக்கொண்டிருக்கிறது என்று ராகேஷ் சொன்னார். ஆனாலும் அத்தனை முடிகளும் பனிசூடியிருந்தன. அங்கிருந்து வந்த காற்றுதான் அத்தனை குளிரை அளித்தது. மாலை மூன்றுமணிக்கெல்லாம் காற்று வீசத்தொடங்கிவிடும். அதன்பின் வலுத்துக்கொண்டே செல்லும்.

காலையில் கிளம்பி ஒரு நீண்ட நடை. மிகமெல்ல. வெயிலில் மட்டுமே நிற்கமுடியும், கொஞ்சம் நிழல் வந்தாலும் நடுங்கத் தொடங்கிவிடுவோம். அவ்வப்போது தலைக்குமேல் மடிப்புகளாக எழுந்துசென்ற மலையில் இருந்து புழுதி பெரிய அருவி போல இறங்கி வந்து சூழ்ந்து கடந்து கீழிறங்கிச்செல்லும். வெவ்வேறு இடங்களில் நின்று பனிமலையை நோக்கிக்கொண்டிருந்தேன். எண்ணங்கள் ஏதுமில்லை. எந்த திட்டங்களும் ஓடவில்லை. எவரையும் எண்ணிக்கொள்ளவில்லை.

எமர்சன் ஒரு கட்டுரையில் மலைகளுக்குச் செல்லவேண்டாம், அவை செயலின்மையை அளிக்கின்றன. கடலோரம் செல்க, கடலின் அலைகள் ஊக்கமூட்டுபவை என்கிறார். எனக்கு கடலோரம் நெடுநேரம் நிற்கமுடிவதில்லை. மிக அரிதாகவே கடலோர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். கடலோரம் வானில் முகில்திரள்வது பிடிக்கும். ஆனால் மலைப்பகுதி என்னை ஆழ்ந்த அமைதிக்குக் கொண்டுசென்று கனவுகளால் நிறைக்கிறது. குளிர் மிக்க இரவுக்குப்பின் மெல்லிய வெயிலில் கண்மயங்குவது ஒருவகை ஊழ்கநிலை



அந்தக் கண்ணாடியறைக்குள் இருந்தபடி அந்தியையும் பின் காலையையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தி இருள்வது ஐந்துமணிக்கே தொடங்கிவிடும், ஆறுக்கெல்லாம் நல்ல இருள். பனிமலைமுகடுகள் நெடுநேரம் வெண்மையாக தெரியும். மலைகளில் இருந்து பிரிந்து வானில் தனியாக மிதந்து நிலைகொள்வதுபோல. பின்னர் அவை சிவந்து கனன்று வானில் மூழ்கி மறையும்

பிப்ரவரியில் வானில் வானில் முகில்களே இல்லை. இனி ஜூனில்தான் மழைக்காலம். ஆனால் இமையமலையடிவாரத்தில் மழைக்கு அப்படி கறாரான காலக்கணிப்பு இல்லை. நான் செல்வதற்கு முன்பு தொடர்ச்சியாக ஏழுநாட்கள் மழை. சாலைகள் ஈரமாக இருந்தன. காடுகளுக்குள் சிறிய குட்டைகளில் சேறு தெரிந்தது. ஆனால் இமையமலையின் புழுதி மிக எளிதில் காய்ந்து பறக்க ஆரம்பித்துவிடும். மலைச்சரிவுகளில் புழுதி வழிந்தது

முழுநீல வானின் கீழ் மலைகள் என்பது ஒர் ஓவியத்தன்மையைச் சூழலுக்கு அளித்தது. பெரும்பாலான புகைப்படங்கள் தப்பாக எடுக்கப்பட்டவை. சொல்லப்போனால் என் கை குளிரில் நடுங்காமல் ஒரு படம்கூட எடுக்கப்படவில்லை. செல்பேசியில் படம் எடுப்பது எனக்கு வழக்கமும் இல்லை. எப்போதும் பயணங்களில் நான் படம் எடுப்பதில்லை. அது உளப்பதிவை இல்லாமலாக்கிவிடும் என்பது என் எண்ணம். மிக அரிதாக ஒருசில படங்கள் எடுத்தேன். ஆனால் எல்லா படங்களையும் ஓரளவு அழகாக ஆக்கியது நீலவானம்தான்.


கண்ணாடி அறை உட்பக்கம்


இரவெல்லாம் விண்மீன்கள். அவை அக்கண்ணாடி அறையைச் சூழ்ந்து மிக அருகே மிதந்து நிற்பதுபோலத் தோன்றும். கீழே சிற்றூர் விளக்குகளும் மீன்களே. சிலசமயம் நாம் ஒரு விண்கலத்தில் பூமிக்குமேல் மிதப்பதுபோலிருக்கும். நோக்கிக்கொண்டிருந்தால் நாம் ஒழுகிச்செல்வதுபோலக்கூடத் தோன்றும்.

இரவில் கம்பிளிக்குமேல் போர்த்திக்கொள்வதற்கான மென்மெத்தையையும் போட்டு நம்மைச் சுருட்டிக்கொள்ள வேண்டும். வெளியே காற்றின் ஓசை மழைபோல கேட்டது.

இரவில் துயில்கையில் வெளியே கேட்கும் அனைத்து ஒலிகளும் சிறுவயதில் என் வீட்டில் கேட்ட ஓசைகளாக உருமாறிவிட்டிருந்தன. தென்னைமரங்களின் சிறகடிப்பு. திற்பரப்பு அருவியின் ஓசை. இங்கே தென்னை மரங்கள் வளரமுடியாது. ஆனால் நான் உணரும் அனைத்து நிலங்களிலும் விழிமூடினால் தென்னை நின்றிருப்பதை உணரமுடிகிறது.நெடுங்காலத்திற்கு முன் என் முன்னோர் ஒருவர் தன்னை தென்னைவிறகில்தான் எரியூட்டவேண்டும் என இறுதியாகச் சொன்னாராம்

காலையில் ஆறுமணிக்கு ஒலிஎழுப்பியை வைத்து எழுந்துகொண்டேன். கதிரெழுவதைப் பார்ப்பதற்காக. உப்பரிகையில் நிற்க முடியவில்லை. காற்றின் குளிர் நடுக்கியது.கண்ணாடி அறைக்குள் சென்று அமர்ந்து சூரியனுக்காகக் காத்திருந்தேன்.





இமைய மலைமுடிகளில் சூரியன் எழுவது சொல்லும்தோறும் மேலும் விரியும் தருணம். முதற்புலரியில் சற்று மங்கலான வெண்புகையாலானவை போல மலைகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் படிந்து தென்படும். அல்லது வெண்ணிறத் தாளில் எண்ணைக்கறையின் அலைகள் போல. பாலிதீன் தாள்களை மேல் மேலாக அடுக்கியதுபோல. ஒரு மலையை ஊடுருவி அப்பாலிருக்கும் அடுத்த மலையைப் பார்த்துவிடமுடியும் என்றுகூடத் தோன்றும்.

கிழக்கின் அடியிலிருந்து ஒளி எழத்தொடங்கியதும் மென்மையான மலரிதழ்களாக மாறுகின்றன. அடுக்கிதழ் கொண்ட மலர் என்னும் விழிமயக்கில் இருந்து என்னால் விடுபடவே முடிவதில்லை. மலைகள் எப்படி மலரிதழ்களாக முடியும் என வினவுபவர்கள் இமையமலைக்குச் சென்றுதான் பார்க்கவேண்டும். மெதுவாக நீலமலரிதழ் அடுக்குகளாகின்றன. இளநீலம் அடர்நீலமாகிறது. அதன் விளிம்பு என வெண்பனிமுகடுநிரைகள். அவற்றில் ஒரு கூர்முனை மட்டும் சற்றே குருதிபூசிக்கொண்டதுபோல் தோன்றுவது உளம் கிளரவைக்கும் காட்சி. விழிவிலக்கவே கூடாது.




விடுதியின் முகப்பில் இருந்து தெரியும் இமையமுடிகள்…


நோக்கிக்கொண்டிருக்கையிலேயே இன்னொரு மலை செவ்வொளி கொள்ளும். அதற்கு எந்த ஒழுங்குநெறியும் இல்லை. எந்த மலைமுடி அடுத்து என விழி அலைந்துகொண்டே இருக்கையில் ஒரு மலை செம்முனை சூடுவதை தவறவிட்டிருப்போம். பின்னர் அனைத்துமலைகளும் செந்நிறப் பனிக்கூர் கொண்டுவிடுகின்றன. மலைவளைவுக்குமேல் சூரியன் எழுகையில் ஒளிச்சட்டங்கள் விரிந்து வானை தாங்கிநிற்பவை போல விரிகின்றன. சற்றுநேரத்திற்குள் கண்கள் கூச எங்கும் ஒளிப்பெருக்கு. திரும்பிப்பார்த்தால் சுவரில் நம் நிழல் மட்டும் சிவப்பாகத் தெரியும்.

மிகப்பெரும்பாலான நேரம் பனிமலைகளை நோக்கிக்கொண்டு வெறுமே அமர்ந்திருந்தேன். அங்கு சென்ற முதல் நாள் ஊரைப்பற்றிய எண்ணங்கள் இருந்தன. பின்னர் ஒரு சலிப்பான சோர்வு. பின்னர் இனிய சலிப்பு. பின்னர் வெறுமே அமர்ந்திருப்பதன் இனிமை மட்டும்.

[மேலும்]

ஃபகுவுக்குக் கிளம்பும்போது யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை, அருண்மொழி, அரங்கசாமி, கிருஷ்ணன், ராஜமாணிக்கம் எவரிடமும். கிளம்பியபின்னர் குறுஞ்செய்திகள் அனுப்பியதோடு சரி. அந்த உளநிலையை விளக்கமுடியாது என்பதுடன் சொல்ல முயல்வதே ஒவ்வாமையை உருவாக்குவதாகவும் இருந்தது. கிளம்பியது முதல் திரும்பி வருவதுவரை அனேகமாக எதுவுமே பேசவில்லை. ஒரு வரிகூட எழுதவில்லை. எந்தத் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை, பெரும்பாலும் தொலைபேசி அணைந்தே இருந்தது. முழுமையான தனிமையில் இருந்தேன்.

அந்த மனநிலையை இப்போதுகூட விளக்கிவிடமுடியாது. எனக்கே அதைப்பற்றிய தெளிவு இல்லை, ஏனென்றால் அதை வகுத்துக்கொள்ள முடியவில்லை. முழுக்க இறைக்கப்பட்ட கிணறு மேலும் ஊறுவதற்காகக் காத்திருத்தல் எனலாம். வெறுமையுணர்வு, ஆனால் அது துயரமானது அல்ல. இனி எழுதவே முடியாது என்னும் எண்ணம் அவ்வப்போது எழும்போது மட்டும் ஒரு திடுக்கிடலும் ஏக்கமும்.

புறவயமாக விளக்குவதென்றால் இப்படிச் சொல்லலாம், வெண்முரசு போன்ற பெரிய பணிகள் அவ்வப்போது ஆழ்ந்த வெறுமையை அளிக்கின்றன. அதன் பயன் என்ன என்னும் எண்ணம். சூழ இருக்கும் அன்றாடத்தின் எளிமையும் சிறுமையும் உருவாக்கும் வினா அது. இங்கே வாழ்க்கை மிக எளிய தடத்தில் அன்றாடச் சில்லறைச் சிடுக்குகள், எளிய உவகைகள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறது. மிகப்பெரியவை பொருந்தாமல் உயர்ந்து, ஆகவே தனித்து ,அதனாலேயே பயனற்றவை என காட்டி நின்றிருக்கின்றன.

மிகப்பெரும்பாலானவர்களால் பெரியவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாது. அவற்றை சிறிதாக்கி தங்கள் உலகில் பொருத்தவே முயல்வார்கள். அல்லது முழுமையாகப் புறக்கணிப்பார்கள். ஆனால் எப்படியோ அம்முயற்சிகள் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. மானுடனின் மெய்த்தேடலாக இருக்கலாம். வெற்று ஆணவமாகவும் இருக்கலாம்.


நீலவானம்


பெரிய முயற்சிகள் அனைத்தும் எவ்வகையிலோ முழுமைக்குச் சற்றுமுன்னரே நின்றுவிடுகின்றன. எவ்வகையிலோ அவை சிறுமைகளால் ஓரளவு தோற்கடிக்கவும் படுகின்றன. அதைத் தவிர்க்கமுடியாது என்பதே வரலாற்றின் பாடம். ஆயினும் பெரியவை நிகழ்ந்தாகவேண்டும். மீண்டும் மீண்டும் சிறுமைகளில் முட்டி சரிந்தாகவும் வேண்டும்.

அந்த வெறுமைக்கு பதில் என்ன என்றெல்லாம் எனக்கே தெரியும். இதை விட்டுவிடப்போவதில்லை என்றும் உள்ளூர உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் இது இந்தச் செயலின் ஒரு தவிர்க்கவியலாப் பகுதி. முன்னோக்கி முன்னோக்கி என எழும் விசை இல்லாமல் இப்படி தளராமல் பணியாற்ற முடியாது. அந்த விசை நம்முள் இருந்து எழுவது, நாம் தூண்டித்தூண்டிப் பெருக்கிக்கொள்வது. அந்த ஊசல் ஒருகட்டத்தில் அதே விசையில் பின்னுக்கும் வருகிறது

ஒருவகை உளப்பிளவுதான். ஆனால் நோயல்ல இது, ஏனென்றால் இந்த இருநிலையை நானே தெரிந்து திட்டமிட்டு உருவாக்கிக் கொள்வதனால் பெரும்பாலும் கடிவாளம் கையில் இருக்கிறது. ஒரே சமயம் இரு உலகங்களில் இருக்கிறேன். இரண்டையும் துல்லியமாகப் பகுத்துக்கொண்டிருக்கிறேன். இரண்டிலுமே முழுவிசையுடன் இருக்கிறேன். உளப்பிளவு இரண்டு எல்லைகள் கொண்டது. அசாதாரணமான செயல்வேகம், இணையான சோர்வு. சோர்வு தற்காலிகமானது, சிறியது. செயல்வேகமே ஆண்டில் பெரும்பாலும். இச் சோர்வு அச்செயலாற்றலுக்குக் கொடுக்கும் ஒரு விலை.




தளிரிடும் ஆப்பிள்


இதற்கு நான் கண்ட ஒரே வழி பயணம். சிறிய சலிப்புகளுக்கு நண்பர்களுடனான பயணங்கள் நல்ல மாற்று. ஆனால் இந்த உளநிலையை சற்றேனும் புரிந்துகொண்டு உடனிருப்பவர்கள் இல்லாவிட்டால் மேலும் சலிப்புக்குச் சென்றுவிடவேண்டியிருக்கும் என்று படுகிறது. நான் தனியாகப் பயணம் செய்து நெடுநாட்களாகிறது. ஒரு சோதனையாகவே கிளம்பினேன், இதுவே சிறந்தது என இப்போது படுகிறது. அல்லது நண்பர்களுடன் செல்வதாக இருந்தால்கூட மிக அணுக்கமான, இவ்வகநிலையைப் பகிரும் ஓரிரு நண்பர்கள் மட்டும்தான் இனி.

எண்ணும்போது துணுக்குறல்போல வந்து சூழ்பவை வரவிருக்கும் அழிவுகள். களமெழுத்துபாட்டில் விடியற்காலை முதல் வரைந்த மாபெரும் வண்ண ஓவியத்தை மறுநாள் பின்னிரவில் பாட்டு முடிந்ததும் வெறியாட்டெழுந்து கூந்தலால் வீசி அழிக்கும் பாணினியைப்போல நானே வளர்த்தெடுத்த, என் கூறுகளைப் பெய்த, கதாபாத்திரங்களின் இறப்புகள். எல்லாமே கடினமானவை என்றாலும் கர்ணனே மிக அணுக்கமானவனாக இருக்கிறான். குருதிச்சாரலின் இறுதியில் கர்ணன் இருக்கும் உளநிலையிலேயே நான் எஞ்சினேன்.

ஒன்றுமட்டுமே செய்வதற்குள்ளது, வெறுமே அமர்ந்திருப்பது. ஒன்றும் செய்யாமலிருந்தாலே இந்நாட்கள் கடந்துசெல்லும். உளநிலைகள் காலத்தில் மாறியேதீரும். தீவிரங்கள் மழுங்கும். கொந்தளிப்புகள் அணையும், சலிப்பின் பெருவெளியில் உள்ளம் சிறு ஆர்வங்களைக் கண்டடையும். வேறுவழியே இல்லை. அன்றாடத்திற்குள் சிக்கிக்கொள்ளாமலிருந்தால் மட்டும் போதும். எப்படியும் மீண்டுவிடுவோம். எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப்போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.



ஃபகுவின் அந்த பனிமலைகள் என்னை பிறிதொரு உச்சநிலையில் வைத்திருந்தன. அது விழியுணரும் உன்னதம். அதை கருத்துருவ உன்னதமாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது உள்ளம். அங்கிருந்து வெண்முரசுக்குத் திரும்பமுடியும் என்று தோன்றியது. இதை எழுதும்வரை அந்த திரும்புதல் நிகழவில்லை என்றாலும்.

இப்புவியை அளக்கும் முழக்கோல் என்கிறான் காளிதாசன், இமையத்தை. பருவடிவ உவமை அல்ல அது. இங்குள்ள கொந்தளிக்கும் வாழ்க்கையை அங்குள்ள அமைதியால் அளக்கலாம். அது மண்மேல் விழுந்த விண்ணுரு ஒன்றின் மேலாடை என நான் நினைக்கிறேன். சிறுவயதில் அன்னையின் முந்தானை அடைக்கலமளிக்கும் பெருங்காடுபோலத் தோன்றும்.

ஃபகுவில் நான் முன்பு தங்கிய டாக்கூரின் வீட்டை விசாரித்து பார்த்தேன். எவருக்கும் தெரியவில்லை. விரிவாக விசாரிக்கவேண்டும் என்றால் ஏராளமாகப் பேசவேண்டியிருக்கும். என்னால் ஓரிரு சொற்களுக்கு மேல் பேசமுடியவில்லை. ஆகவே தேடுவதைக் கைவிட்டேன்.

ஃபகு முழுமையாக மாறிவிட்டிருந்தது. 1986ல் நான் வந்தபோது இங்கே எல்லா வீடுகளும் கற்பாளங்களால் கூரையிடப்பட்டவை. மிகத்தாழ்ந்து மலைச்சரிவின் நீட்சியாகவே மண்ணில் இருந்து எழாதவண்ணம் அமைந்தவை. நிறைய பைன் மரங்கள் இருந்தன. இப்போது பெரும்பாலும் அனைத்துக் கட்டிடங்களும் கான்கிரீட்டில் கட்டப்பட்டு இறுதியாக தகரக்கூரையிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அடுக்குவீடுகள். மேலும் மேலும் கட்டிடங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஃபகு சிம்லா போல கட்டிடமலையாக ஆகிவிடும்.







ஃபகுவில் பனிதா அம்மன் ஆலயம் உள்ளது. நூறாண்டுகளுக்குள் கட்டப்பட்ட சிறிய ஆலயம். மரச்செதுக்கு வேலைகள் கொண்டது. ஒருநாள் பகல் அங்கே சென்று அமர்ந்திருந்தேன். சுற்றுலாப்பருவம் தொடங்கவில்லை என்பதனால் பயணிகள் எவருமில்லை. நாலைந்து உள்ளூர் பெண்கள் மட்டுமே. ஃப அருகே ஒரு குன்று உண்டு. கடிர் என்று பெயர். சென்றமுறை அங்கே சென்றிருந்தேன். இம்முறை இன்னமும் பனி உருகவில்லை, வண்டிகள் செல்லாது என்றார்கள். ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் வாக்கில் அங்கே திருவிழா நடக்கையில் இரண்டாயிரம்பேர் வரை மலையேறிச்செல்வார்களாம்.

மறுநாள் பேருந்தில் நார்கொண்டா என்னும் ஊருக்குச் சென்றேன். அங்கிருந்து அருகே உள்ள ஹட்டு என்னும் மலைமுகடுக்குச் செல்லவேண்டும் என்பது திட்டம். வாடகை ஓட்டுநர் ஆயிரம் ரூபாய் கேட்டார். பத்து கிலோமீட்டருக்குள்தான். ஆனால் மலைமேல் ஏறிச் செல்லவேண்டும். இன்னொரு ஓட்டுநர் “பனி இன்னமும் உருகவில்லை” என்றார். “இல்லை, சென்றாகவேண்டும்” என்றேன் பனிக்காலத்தில் பனிமேல் செல்லும் நான்குசக்கரத்திலும் இயந்திர இணைப்புள்ள ஜீப்புகள்தான் மேலே செல்லமுடியும். என்றார் ஓட்டுநர்.செல்லும்வரைச் செல்வோம் என்றேன்.

ஆயிரம் ரூபாயால் கவரப்பட்டு அவர் கிளம்பினார். பாதிவழிச் செல்வதற்குள் பனியில் வண்டி நின்றுவிட்டது. இருபக்கங்களிலும் வெண்பொருக்குப் பனி. நான் இறங்கி பனிமேல் கால்வைத்ததும் பரப்பு உடைந்து உள்ளே கால் சென்றுவிட்டது. பனி அடியிலிருந்து உருகி மேல்தகடு வெண்படலமாக நின்றிருந்தது. “என் கையைப் பிடியுங்கள்” என ஓட்டுநர் கூவினார். பாய்ந்து பிடித்து ஒருவழியாக மேலே வந்தால் கால்கள் மரத்துப்போய் இரு ரப்பர் பந்துகளைப் பொருத்தியதுபோல் உணர்ந்தேன்


ஹடு ஆலயம், இணையத்திலிருந்து


“என்னது ஷூ இல்லாமலா வந்தீர்கள்?” என்றார் ஓட்டுநர். நான் செருப்பு போட்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார். உள்ளே கருப்பு காலுறை இருந்தமையால் ஷூ என்றே தோன்றியிருக்கிறது. ”இங்கே மேலே செல்லச்செல்ல மிகவும் குளிரும்… திரும்பிவிடுவோம்” என்றார். திரும்பி நார்கொண்டாவுக்கே வந்தேன். பேருந்தைப் பிடித்து மீண்டும் ஃபகு வந்தேன்.

இங்கே உறைபனியில் எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கனடா போன்ற குளிர்நாடுகளில் இரட்டைச் சன்னல்கண்ணாடிகள், நடுவே வெப்பம்கடத்தாப் பொருள்திணிக்கப்பட்ட மரச் சுவர்கள், எரிவாயுக் கணப்புகள் எல்லாம் உண்டு. இங்கே இந்த பருவத்தில்கூட கான்கிரீட் சுவர்களைத் தொட்டால் மின்னதிர்ச்சிபோலக் குளிர் தாக்குகிறது. சாதாரண கண்ணாடிச் சன்னல்கள். அவற்றிலும் விரிசல்கள், இடைவெளிகள். குளிர்காலத்தில் மின்சாரம் இருக்காதாம். விறகுபோட்டு எரிக்கும் கணப்புதான். அதுவும் அடுப்பும் கணப்பும் ஒன்றேயான ஓர் இரும்புப்பெட்டி. உள்ளே விறகு போட்டு எரித்தால் அலுமினியக்குழாய் வழியாக புகை வெளியே சென்றுவிடும். அதிலெயே சப்பாத்திசுடலாம், வெந்நீர் போடலாம்.

குளிர்காலத்தில் வேறுவகை பயணிகள் வருகிறார்கள் என்றார் ராகேஷ் டாக்கூர். பெரும்பாலும் இஸ்ரேலியர்கள். ஐரோப்பாவுக்குச் செல்வது செலவாகும் என்பதனால் இங்கே பனிவாழ்க்கைக்கு வருபவர்கள் அவர்கள். இங்கு ஒருமாதம் தங்கி பனியாடி செல்வது அவர்களின் பணமதிப்புக்கு மிகமிக லாபமானது.அவர்கள் இமையமலையை வெல்ல வருகிறார்கள். அதன் விரிவில் ஒர் உச்சத்தை மட்டும் தெரிவுசெய்து வென்று திரும்புகிறார்கள். அதன் அமைதியை அவர்கள் உணர்வதேயில்லை.


அறைக்குள் இருந்து


எந்தக்கோணத்திலும் பனிமலை தெரிவது நாம் எப்போதும் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றவைக்கிறது. ஒரு பெரிய சாம்பல்நிறப்பறவை சிறகுவிரித்து வான்நோக்கி வெண்ணிற அலகை நீட்டி அமர்ந்திருப்பதுபோன்ற மலை. இத்தனை உவமைகள் வழியாக இந்த மலைகளை எதுவாக ஆக்கிக்கொள்கிறேன்? நானறிந்தவையாகவா? அல்லது இவ்வொப்புமைகள் வழியாக நான் அறியாத நுண்வடிவ ஒன்றை நோக்கி எழமுயல்கிறேனா?

மூன்றுநாட்கள் இங்கிருந்ததில் ஒன்றை உணர்ந்தேன். செய்திகளை கேட்காமல், பேசாமல் இருந்தால் கூடிப்போனால் 24 மணி நேரத்திற்குள் நாம் உழன்றுகொண்டிருக்கும் வெளியுலகு முழுமையாகவே அகன்றுவிடுகிறது. நாம்தான் அதைக் கவ்விக்கொண்டிருக்கிறோமே ஒழிய அது நம்மை பற்றியிருக்கவில்லை. முழுநாளும் வெறுமே மலைகளை நோக்கிக்கொண்டிருந்தேன். எதையும் எவரையும் நினைக்கவில்லை. அப்போது எனக்கு என் ஊருடன் நண்பர்களுடன் குடும்பத்துடன் தொடர்பே இல்லை. ஒரே ஒருவருக்கு மட்டுமே குறுஞ்செய்திக்கு மறுமொழி அனுப்பினேன், கோபக்காரர்,திமிராகப் புறக்கணிக்கிறேன் என எடுத்துக்கொள்வார் என்பதனால்.

தர்மசாலா செல்லலாம் என்று எண்ணம் வந்தது. ஃபகுவில் தங்குவது செலவேறியது. ஒருநாளுக்கு கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் வரை ஆனது. பேருந்திலேயே தர்மசாலா கிளம்பினேன். தர்மசாலாவின் நினைப்பு வந்ததுமே மனம் கிளம்பிவிட்டது. மலைப்பாதையில் 250 கிமீ. ஆனால் 12 மணிநேரமாகியது. இமையமலையடுக்குகள் வழியாக பருந்து போல வட்டமிட்டுக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.



வழியில் ஒரு பெரிய மலைப்பாறை மேலிருந்து உருண்டு விழுந்துகிடந்தது. அரைமணிநேரம் முன்புதான் விழுந்தது என்றனர். நல்லவேளையாக எந்த வண்டிமேலும் விழவில்லை. அதை ஓட்டுநர்களே புரட்டி அப்பால் தள்ளினர். மிக எளிது. அதன் அடியில் மண்ணை தோண்டி சரிவாக்கி தள்ளி விட்டனர். கீழே மலைச் சரிவில் சென்று தயங்கி நின்றது. அதற்கு அப்பால் மேலும் ஏழெட்டு அடுக்குகளாக சாலை. வண்டி சுற்றி வந்தபோது அந்தப்பாறை தலைக்குமேல் நிற்பதைக் கண்டேன். கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.

செங்குத்தான பாறைவிளிம்புகளில் வரையாடுகள் மேய்வதைக் காணமுடிந்தது. நல்ல வெயில், புழுதி , ஆனால் குளிர். திடீரென்று ஓர் இடத்தில் மழை. மழைக்குள் புகுவதற்கு முன் ஆலங்கட்டிகள் பெய்தன. மேலிருந்து கல்பொழிகிறது என்றுதான் தோன்றியது. மழையில் நனைந்து அப்பால் சென்று கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் வெயில். புழுதி.

நள்ளிரவில் தர்மசாலா சென்றேன். பேருந்துநிலையம் அருகிலேயே ஒரு சிறுவிடுதியில் 600 ரூபாய்க்கு அறைபோட்டு தங்கினேன். காலையில் 6 மணிக்கு எழுந்து தலாய் லாமாவின் மடாலயம் அமைந்துள்ள மெக்லியோட்கஞ்ச் என்னும் குன்றுக்குச் சென்றேன். அங்கிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. ஆட்டோரிக்‌ஷாவில் செல்ல 150 ரூபாய். மேலே செல்லச்செல்ல நல்ல குளிர்.





மெக்லியோட்கஞ்ச் குன்று ஒரு சுற்றுலாமையம். உலகமெங்கிலும் இருந்து பௌத்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளுக்குரிய அனைத்தும் கடைகளில் குவிந்துள்ளன. பலவகையான பொம்மைகள், சிற்பங்கள், திபெத்பாணி போலி டோங்காக்கள், குத்துவாட்கள்,பாரம்பரிய ஆடைகள், கையால்செய்யப்பட்ட காகிதத்தால் ஆன குறிப்பேடுகள். உலகின் அனைத்துநாட்டு உணவுகளும் கிடைக்கும்.

விதவிதமான முகங்கள் . ஏராளமான ஹிப்பிகளைக் காணமுடியும். உள்ளூர்ப்பயணிகள் பெரும்பாலும் திபெத்தியர். அமெரிக்கர், பிரென்சுக்காரர்கள், ஜெர்மானியர் என பேச்சை வைத்துக் கண்டுபிடிக்கலாம். தலாய் லாமா அங்கு இல்லை. நாளாந்தர பூசைக்காக காலையிலேயே பிட்சுக்கள் அமர்ந்திருந்தனர். சற்றுநேரம் உடனிருந்தேன். சுற்றிச்சுற்றி நடந்தேன்.சுற்றிலும் பனிமலைகள். காற்று வீசும்போது குளிராடையையும் மீறி நடுக்கியது

தர்மசாலாவில் சுற்றிக்கொண்டிருந்தேன். மிகக்களைப்பாக உணர்ந்தபின்னர்தான் அது பசி எனத் தெரிந்தது. பசி தாகம் இரண்டையும் நானே உணர்ந்துகொள்வது இளமையிலிருந்தே எனக்குச் சிக்கலானதுதான். கொஞ்சம்கூட நடக்க, சிந்திக்க முடியவில்லை என உணர்ந்தபின்னர்தான் அது பசி அல்லது தாகம் என தெரியவரும். அதன்பின்னரும்கூட சாப்பிடுவதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்பேன்.

என்னை எவரோ பராமரித்துக்கொண்டே இருக்கும்நிலையிலேயே வாழ்ந்திருக்கிறேன் என இப்போது உணர்கிறேன். அதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். எவரையும் சார்ந்தில்லாமல் வாழமுயலவேண்டும். ஆனால் அது ஒரு கனவு என்றும் தோன்றியது.




விடுதி சென்ற டிசம்பரில்
ஒரு பெரிய கேன் பழச்சாறு வாங்கிக்கொண்டு மடாலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தொலைவில் கண்கூச ஒளிவிட்ட பனிமலையை நோக்கிக்கொண்டிருந்தேன். முதலில் அவை திரை ஓவியம்போலிருக்கும். நோக்க நோக்க முப்பரிமாணம் கொண்டு எழுந்து அணுகிவரும். மலைமேல் சமவெளிகளைக்கூடக் காணமுடியும். திடீரென்று குளிர்வந்து நடுக்கியெடுக்கத் தொடங்குவது இமையமலைப் பகுதிகளின் இயல்புகளில் முக்கியமானது

அங்கே அமர்ந்தபடி வெற்று எண்ணங்களில் அமைந்திருந்தேன். என்னைப்பற்றி எப்போதும் ஒரு கணிப்பு உண்டு. நான் ஆணவம் மிக்கவன் என எனக்குத்தெரியும், அது இல்லையேல் என்னால் எழுதமுடியாது. ஆகவே அதைச் சுமந்தேயாகவேண்டும். அவ்வாணவத்தை நிறைவுசெய்யும் பெரியபணிகளைச் செய்தாகவேண்டும். அதற்கு சூழ இருக்கும் அனைத்தையும் வேர்நீட்டி உறிஞ்சிக்கொள்ளவேண்டும். பெரிய மரங்களின் குரூரமான தன்னலம்.

என்னைச்சார்ந்தவர்களுக்கு எப்படி இருக்கிறேன் நான் என எப்போதும் கேட்டுக்கொள்வதுண்டு. கூடுமானவரை இனியவனாக, நம்பகமானவனாக, நலம்நாடுபவனாக. ஆனால் நான் எண்ணும் அளவுக்கு அல்ல. புண்படுத்துபவன், புறக்கணிப்பவன், பொறுப்பற்றவன். எப்போதும் அந்தக்குறையை உணர்வதே என் துயரங்களில் ஒன்று.





நான் எழுதும் இலக்கியத்தின் உச்சங்கள் நான் அல்ல. மீளமீள என் வாசகர்களிடம் அதைச் சொல்லியாகவேண்டும். கீழ்மைகளில் உளம்திளைக்காமல் எவராலும் கீழ்மையை எழுதிவிடமுடியாது. வஞ்சம், சினம், காமம். அவை இல்லாமல் இலக்கியத்தின் நெசவு அமைவதுமில்லை. ஒற்றைப்படையான உளவிசை புனைவெழுத்துக்குரியது அல்ல. ஆகவே எழுதும் உச்சங்களுக்கு நேர் மறு எல்லையில் இருண்ட ஆழங்களிலும் திளைக்கிறது எழுத்தாளனின் உள்ளம்.மெய்ஞானம் இலக்கியத்தின் இலக்கு. ஆனால் இலக்கியவாதி வழிகாட்டிப்பலகைதான். அவன் அங்கே சேரவியலாது

ஆகவே எழுத்தாளன் எவருக்கும் வழிகாட்டி அல்ல. இலக்கியத்திற்கு அப்பால் எவருக்கும் ஆசிரியனும் அல்ல. ஆனால் அதை நாமே உணரும்போது உருவாகும் சோர்வு குரூரமானது. என்றாவது நோயும் முதுமையுமாக, செயலற்றுச் சித்தம் திரிந்து, இன்று வெண்முரசில் கிருஷ்ணன் பேசும் மகத்தான சொற்களை நானே வாசிக்கையில் என்ன உணர்வேன்? அதற்குமுன் சென்றுவிடவேண்டும் என்று வேண்டிக்கொள்வதன்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

[மேலும்]

எழுதியவர் : (20-Mar-18, 9:08 am)
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே