விடியலின் வாழ்த்து

கடிகாரத்தின் இருமுட்களும் உச்சம் காட்டி ,
பிணைந்திருக்க நாட்களும் பிறந்திடும் என்பாய் நீ!

வாழ்த்து ஏற்று அணைத்து வர்த்தி ஏற்றி அணைத்து
நீ உன் பிறப்பைக் களிப்பினும்
என் அழைப்பை எண்ணியே உறங்கி இருப்பாய் !

விண்மீன் வர்த்திகளை மொத்தமாய் அணைத்துவிட்டு
அதை அலைகளின் பிரதிபலிப்பில் ஏற்றிவிட
இதழ் விரித்து மலர்கள் பன்னிறக் கோலமிட
விடியலை வரவேற்கும் உயிர்களோ இன்னிசைக் கூவலிட
யாவும் மினுங்கிட எழும் ஞாயிற்றின் முதற் கதிரில்
புலரும் வைகறை வேளையிலே

உனைக் காணொளியில் அழைத்து
களிப்பு இறைத்து
இன்பக் கணங்கள் நிறைத்து
வாழ்த்து சொல்வேன்

கடிகாரத்தின் இரு முட்களும் கீழ்மேல் காட்டி நம்போல பிரிந்திருக்க
நாட்களும் பிறந்திடுமே அனுதினமும்
நம் காதல் போலவே!

எழுதியவர் : Omkumar (27-Mar-18, 1:17 am)
பார்வை : 169

மேலே