மண்ணில் வந்த தேவதைக்கு எங்கள் வாழ்த்து

மண்ணில் வந்த தேவதைக்கு எங்கள் வாழ்த்து!

என்னதவம் செய்திருப்பேன் எங்கள் மகளே! - உன்னை
என்வயிற்றில் சுமப்பதற்கு என்றன் மலரே!!

முன்பிறவி பலவற்றில் தாயாகப் பிறந்தேனோ?
மூவுலகும் பாராட்டப் புண்ணியங்கள் செய்தேனோ?,
என்பிறவி நாள்முழுதும் ஏழைகட்கு உழைத்தேனோ?
வன்பசியைத் தீர்ப்பதற்கு வாய்க்குணவு ஈந்தேனோ?
அன்னையிலாக் குழந்தைகட்கு ஆரமுதைத் தந்தேனோ?
என்னதவம் செய்தேனோ என்னமுதே வாழியவே!!

என்னதவம் செதிருப்பேன் எங்கள் மகளே! - உன்னை
என்மகளாய்ப் வெறுவதற்கு என்றன் சுடரே!!

பலபிறவிக் காலத்தில் பசுவினத்தைக் காத்தேனோ?
பசுமரங்கள் பழமரங்கள் பலவற்றை வளர்த்தேனோ?
உலகனைத்தும் உண்பதற்கு உழுதொழிலைச் செய்தேனோ?
ஊர்மெச்ச நீர்நிலைகள் உண்டாக்கி வைத்தேனோ?
உனைப்போன்ற குழந்தைகட்கு உரியகலை தந்தேனோ?
உற்றதுணை இல்லார்க்கு உறுதுணையாய் நின்றேனோ?
எனைப்பெற்ற எழிற்சிலையே உந்தந்தை ஆவதற்கு
என்னதவம் செய்திருப்பேன் எழுபிறவி நீவாழ்க!!
----- சித்திரை வல்லி சித்திரைச் சந்திரன்,
07 மேமாதம் 2018 - திங்கட் கிழமை.

எழுதியவர் : செல்வப் பிரியா சந்திர மௌல (7-May-18, 1:10 am)
பார்வை : 301

மேலே