ஒரு பிடி கடுகு

கௌதமைக்குத் தன் குழந்தைமேல் அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள அக்குழந்தையின் சிரிப்பும் களிப்பும் அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன் ஓட்டமும் ஆட்டமும் அவளுக்குப் பெருங்களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள் காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்குழந்தை யின் இனிய முகம் அவள் கண்களுக்கு ஆனந்தக் காட்சி. அந்தக் குழந்தைதான் அவளுக்கு நிறைந்த செல்வம். அதற்குப் பால் ஊட்டு வதில் பேரானந்தம். அக்குழந்தையை அவள் கண்மணிபோல் கருதிச் சீராட்டிப் பாராட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்த்து வந்தாள்.

மற்றக் குழந்தைகளுடன் தன் குழந்தையையும் விளையாட விட்டு மகிழ்வாள். நாய், பூனை, காக்கை, கோழி, குருவி, அணில் முதலியவை களைக் காட்டி அதற்கு மகிழ்ச்சியூட்டுவாள், வானத்தில் நிலவைக் காட்டி அதை அழைக்கச் சொல்வாள். பாட்டுகள் பாடித் தூங்க வைப்பாள். தலை நிறையப் பூக்களைச் சூட்டுவாள். விளையாடுவதற்குப் பொம்மைகளை வாங்கித் தருவாள் அக்குழந்தை அவளுக்கு உயிராக இருந்தது. தலைச்சன் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கு இது இயற்கைதானே.
வளர்பிறை போல வளர்ந்த அக்குழந்தைக்கு ஒரு நாள் நோய் கண்டது. கௌதமை மனவருத்தம் அடைந்தாள். வைத்தியர்களைக் கொண்டு மருந்து அளித்தாள். ஆனால் நோய் அதிகப்பட்டது. கடைசியில் அந்தோ! இறந்துவிட்டது. கௌதமை பெருந்துயரம் அடைந்தாள். தன் குழந்தையைப் பிழைப்பிக்க வேண்டும் என்று விரும்பினாள். “என் கண்மணி பிழைக்க மருந்து கொடுப்போர் இல்லையோ” என்று அரற்றினாள். இறந்த குழந்தையைத் தோள் மேல் வளர்த்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், “குழந்தையைப் பிழைப்பிக்க மருந்து கொடுப்போர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்; இவள் நிலைமையைக் கண்டு எல்லோரும் மனம் இரங்கினார்கள்; பரிதாபப் பட்டார்கள்; “அம்மா! செத்தவரைப் பிழைப்பிக்க மருந்து இல்லை. வீணாக ஏன் வருந்துகிறாய்?” என்று ஆறுதலோடு அறிவுரை கூறினார்கள். கௌதமைக்கு அவர்கள் கூறியது ஒன்றும் மனத்தில் ஏறவில்லை. எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்? எத்தனை முனிவர்கள் இருக் கிறார்கள்? செத்தவரைப் பிழைப்பித்த முனிவர்கள் உண்டென்று கதைகள் கேட்டும் படித்தும் இருந்த கௌதமைக்குத் தன் குழந்தையைப் பிழைக்கச் செய்யும் பெரியவர்கள் கிடைப்பார்கள் என்று தோன்றியது. ஆகவே, அவள் இறந்த குழந்தையைத் தோள் மேல் சார்த்திக்கொண்டு எதிர்ப்படுகிறவர்களிடம் “குழந்தைக்கு உயிர் கொடுப்பவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டாள். எல்லோரும் “பாவம்! செத்த குழந்தைக்கு மருந்து கேட்கிறாள்; பைத்தியக்காரி” என்று சொல்லி அவள்மேல் மனம் இரங்கினார்கள். அவர்களில் ஒருவராவது இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்கும் பெரியவரைக் காட்டவில்லை. அறிஞர் ஒருவர் கௌதமையின் துயரத்தைக் கண்டார். இவளுடைய மனோ நிலையை யறிந்தார். “அளவு கடந்த அன்பினாலே இவள் மனம் குழம்பியிருக்கிறாள்; இந்த நிலையில் இவளுக்கு அறிவு பகட்டி உலக இயற்கையைத் தெளிவுபடுத்துவது கடினம். இவளைக் கௌதம புத்தரிடம் அனுப்பினால் இவள் குணப்படுவாள்” என்று தமக்குள் எண்ணினார். அவர் கௌதமையிடம் வந்து, “அம்மா! உன் குழந்தைக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் ஒருவர்தான் இருக்கிறார். வேறு ஒருவராலும் முடியாது. வீணாக இங்கெல்லாம் ஏன் அலைகிறாய்? நேரே அவரிடம் போ,” என்று கூறினார்.

இதைக் கேட்டதும் கௌதமைக்கு மனம் குளிர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. “அவர் யார்? ஐயா! எங்கிருக்கிறார் சொல்லுங்கள்?” என்று கேட்டாள். “அவர்தான் பகவன் புத்தர்; அவரிடம் போ” என்றார். இதைக் தெரிவித்ததற்காக அப் பெரியவருக்கு அவள் வாயால் நன்றிகூற நேர மில்லை. அவள் அவருக்குத் தன் கண்களால் நன்றி கூறிவிட்டு மடமட வென்று நடந்தாள். பகவன் புத்தர் எழுந்தருளி இருந்து உபதேசம் செய்கிற ஆராமம் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் ஆராமத்தை நோக்கி வேகமாக நடந்தாள்; இல்லை, ஓடினாள். ஓடோடி வந்து ஆராமத்தை அடைந்தாள். ஆராமத்தில் கௌதம புத்தர் எழுந்தருளி யிருக்கும் கந்த குடிக்குள் நுழைந்தாள். அவர் காலடியில் குழந்தையை வளர்த்திவிட்டுத் தானும் அவர் காலில் வேரற்ற மரம்போல விழுந்து வணங்கினாள். “பகவரே! என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள்” என்று கதறினாள்.

புத்தர் பெருமான் இறந்த குழந்தையையும் கௌதமையின் மன நிலைமையையும் உடனே உணர்ந்துகொண்டார். “குழந்தாய் எழுந்திரு” என்று அருளினார். அவர் குரலில் தெய்வத்தன்மை உடைய ஓர் அமைதி இருந்தது. கௌதமை எழுந்து நின்றாள்.

“உன் குழந்தை இறந்துவிட்டதா? அதற்கு உயிர் கொடுக்க வேண்டுமா? நல்லது. மருந்து கொடுக்கிறேன். கொஞ்சம் கடுகு கொண்டு வா.”
“இதோ கொண்டு வருகிறேன்” என்று கூறி ஓடினாள்.
“குழந்தாய்!” என்று கூப்பிட்டார் பகவர். கௌதமை திரும்பி வந்து, “இன்னும் ஏதேனும் கொண்டு வரவேண்டுமோ?” என்று வினவினாள். அவளுக்குத் தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
“வேறு ஒன்றும் வேண்டாம். ஒரு பிடி கடுகு மட்டும் வேண்டும். ஆனால், கொண்டுவரும் கடுகு யாரும் சாகாதவர் வீட்டிலிருந்து கொண்டுவர வேண்டும். ஆணோ, பெண்ணோ, பெரியவரோ, சிறியவரோ ஒருவரும் சாகாதவர் வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டுவர வேண்டும். தெரிகிறதா ... ... ...?”
“அப்படியே, இதோ கொண்டு வருகிறேன்.”
“குழந்தையைத் தூக்கிக்கொண்டு போ. கடுகுடன் குழந்தையைக் கொண்டு வா.”

கௌதமை இறந்த குழந்தையைத் தூக்கித் தோளில் சுமந்து கொண்டு வேகமாக நகரத்திற்குள் சென்றாள். நகரை யடைந்தவுடன் முதல் வீட்டில் சென்று, “ஒரு பிடி கடுகு வேண்டும்” என்று கேட்டாள். வீட்டுக் காரி உடனே சென்று குடுகு கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது கௌதமை, “அம்மா! உங்கள் வீட்டில் இதற்கு முன்பு யாரேனும் இறந்திருக்கிறார்களா!” என்று கேட்டாள்.
“ஏனம்மா கேட்கிறாய்? என் மாமனார் இறந்தார்; என் மாமியார் இறந்தார். இவர்களுக்கு முன்பு இவர்கள் தாய், தந்தையர்கள் இறந்தார்கள்” என்று அவ்வீட்டுக்காரி கூறினாள்.
“அப்படியானால் கடுகு வேண்டாம்” என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த வீட்டைவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டுக்காரியும் கடுகு கொடுத்தபோது “உங்கள் வீட்டில் யாரேனும் செத்திருக்கிறார்களா?” என்று கேட்டாள் கௌதமை.
“போன வாரம் எங்கள் வீட்டு வேலைக்காரன் செத்துப் போனான்.”
“அப்படியானால் கடுகு வேண்டாம். செத்தவர் வீட்டுக் கடுகு மருந்துக்கு உதவாது,” என்று கூறிவிட்டு அடுத்த வீட்டிற்குள் நுழைந்தாள். அவ்வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது, “உங்கள் வீட்டில் யாரேனும் இறந்திருக்கிறார்களா?” என்று வினவினாள். இதைக் கேட்டவுடன் அவ்வீட்டுக்காரியின் கண்களில் நீர் தாரை தாரையாக வார்ந்தது. விம்மிவிம்மி அழுதாள். “ஐயோ! மூன்றாம் நாள் தானே என் மகள் இறந்து போனாள்; நல்ல வெண்கலச் சிலை போல இருந்தாளே?” என்று அழுதாள். “அப்படியானால் கடுகு வேண்டாம்,” என்று கூறிவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றாள். இப்படியே அந்தத் தெருமுழுதும், வீடுவீடாக நுழைந்து கேட்டாள். சில வீடுகளில் குழந்தைகள் இறந்திருந்தன. சில வீடுகளில் பெரியவர்கள் இறந்திருந் தார்கள். சில வீடுகளில் கட்டிளமை வயதுடையவர்கள் இறந்திருந்தார்கள். சில வீடுகளில் கர்ப்பவதிகள் இறந்திருந்தார்கள். ஆனால், சாகாதவர் வீடு ஒன்றுமில்லை. கௌதமை அடுத்த தெருவில் நுழைந்தாள். ஒரு வீடு விடாமல் நுழைந்து கடுகு கேட்டாள். சாகாதவர் வீடு ஒன்றேனும் இல்லை. பல தெருக்கள் சென்று வீடுவீடாகக் கேட்டாள். ஒரு வீடுகூட விடாமல் சென்று கேட்டுப் பார்த்தாள். வேண்டிய கடுகு கிடைத்தது; ஆனால், சாகாதவர் வீடுதான் கிடைக்கவில்லை. அவளுக்கு அப்போது தான் உண்மை புலப்பட்டது. சாகாத வீடு கிடைக்காது. ஆகவே, தன் குழந்தை பிழைக்க, மருந்துக்குக் கடுகு கிடைக்காது என்பதை உணர்ந்தாள். ஆனால், ஏதேனும் ஒரு வீடாவது இருக்காதா என்கிற ஆசை அவள் மனத்தில் இருந்தது. ஆகவே, அவள் அந்த சிராவத்தி நகரம் முழுதும், ஒரு வீடு விடாமல் நுழைந்து கேட்டுப் பார்த்தாள். சாகாதவர் வீடு கிடைக்கவே இல்லை. எல்லா வீடுகளும் செத்தவர் வீடுகள்தான். சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது. இருளைப் போக்க வீடுகளிலும் தெருக்களிலும் விளக்கேற்றினார்கள். கௌதமையின் மனத்தில் இருந்த மன மருட்சி - இறந்தவர் பிழைக்க மருந்து உண்டு என்னும் அறியாமை - நீங்கிவிட்டது. பிறந்தவர் எல்லோரும் இறக்கிறார்கள். அகவை முகிர்ந்தவர் என்பது மட்டும் அல்ல. நடுத்தர அகவையுள்ளவர், கட்டிளைஞர், சிறுவர், குழந்தைகள் எல்லோரும் இறக்கிறார்கள். இறந்தவர் மறுபடியும் பிழைப்பது இல்லை என்கிற உண்மை அவள் மனத்தில் தோன்றிற்று. அவள் நேரே சுடுகாட்டிற்குச் சென்றாள். தன் தோள்மேலிருக்கும் இறந்த குழந்தையை அடக்கம் செய்தாள். பிறகு நேரே பகவன் புத்தரிடம் வந்து அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்து நின்றாள்.

“குழந்தாய்! கடுகு எங்கே?”
“கொண்டுவரவில்லை. கிடைக்கவில்லை.”
“ஏன்?”
“பகவரே நான் மட்டுந்தான் என் குழந்தையைப் பறிகொடுத்தேன் என்று தவறாக எண்ணினேன். என் குழந்தைமேல் இருந்த அன்பினாலே, இறந்த குழந்தையைப் பிழைக்கவைக்க மருந்து இருக்கும் என்றும் தவறாக எண்ணினேன். தாங்கள் என்னுடைய மனநோய்க்கு உண்மை யான மருந்து கொடுத்துப் போக்கிவிட்டீர்கள். உலகத்திலே சாகாதவர் ஒருவரும் இலர். (கணக்கெடுத்தால் செத்தவர் தொகைதான் மிகுதி, சாகாதவர் தொகை குறைவாக இருக்கும்.) குடும்பந்தோறும் நாடு தோறும், ஊர்தோறும் இருக்கிறவர் தொகையைவிட, இறந்தவர் தொகைதான் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன்.”

கௌதமை இயற்கைச் சட்டத்தை அறிந்து கொண்டது மட்டும் அல்லாமல் அதற்கு மேற்பட்ட நல்ஞானத்தையடையும் செவ்வியடைந் திருப்பதையும் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே அவர் இவ்வாறு அருளிச்செய்தார்:
“சாவு என்பது உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நீக்க முடியாத சட்டம். அதனை மீறமுடியாது. இயமன் என்னும் அரசன் சாவு என்னும் ஆணையைச் செலுத்தி நடாத்துகிறான். அந்த ஆணையை உயிர்களால் மீற முடியாது. மக்கள், மாடு, மனை முதலிய செல்வங்களில் மனஞ் செலுத்தி மகிழ்ச்சிகொண்டு, செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் மனிதர் இருப்பாரானால் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டைப் பெருவெள்ளம் அடித்துக்கொண்டு போவதுபோல, அவரைச் சாவு அடித்துக் கொண்டு போய்விடும்.”

இவ்வாறு, பகவன் புத்தர் நிலையாமையையும் சாவையும் சுட்டிக்காட்டி அறநெறியைக் கூறினார். இதனைக் கேட்ட கௌதமை பகவரை வணங்கித் தான் பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவு நெறியில் செல்லத் தன்மீது திருவுளம் கொண்டருள வேண்டுமென்று வேண்டினாள். பகவன் அவளைப் பிக்குணிச் சங்கத்திற்கு அனுப்பித் துறவறத்தில் சேர்ப்பித்தார். துறவு பூண்ட கௌதமையார், பேர்போன ஏழு பௌத்தப் பெண்மணிகளில் ஒருவராக விளங்கி, இறுதியில் வீடுபேறடைந்தார்.

எழுதியவர் : மயிலை சீனி வேங்கடசாமி (11-May-18, 12:32 am)
பார்வை : 121

மேலே