வரமா சாபமா

வரமா? சாபமா?


என்னோடு நீ இருக்கும் தருணம்
என்னை நீ முழுமையாக ஆட்கொள்கிறாய்..
என் உணர்வுகளை கட்டுப்படுத்தி
உன் வசம் ஆக்கிக்கொண்டு
என் வசம் இழக்கச்செய்கிறாய்..

உன் துணைகொண்டு பிறரை நான் சாடும்போது
என்னை தூற்றுகிறார்கள், விட்டு விலகிச்செல்கிறார்கள்..
நீ என்னை என்றும் நாடப்போவதில்லை - என அறிந்தால்
அனைவரும் என்னோடு இருப்பார்கள் - ஆனால்
அது உண்மையான உறவுக்காக அல்ல
என்னை உபயோகிப்பதற்காக என்பதை
உணர்ந்து மனம் நோகிறேன்..

நீ எனது அரணா? அழிவா?
என்னோடு வரப்போகும் சாதனையா? சாத்தானா?
எனக்கு கிடைத்த வரமா? சாபமா?
எதையும் நான் அறியேன்..

இருந்தும் உறுதியாய் கூறுகிறேன்
என்னை ஏற்கும் எவரும் - சில நொடிகள்
உன்னையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்..

அன்பானவர்களின் அக்கறையே எனது கனவை தடுக்கும்போது
அதிலிருந்து வெளிவர எனக்கு நீ வேண்டும்
அநீதியின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்க்க நீ வேண்டும்
என்னுடைய பலமாக, பாதுகாவலனாக என்றும் நீ உடன் இருக்க வேண்டும்

கோபமே என்னிடம் கோபம் கொண்டுவிடாதே !
சினமே என்றும் என்னோடு இரு !
சிக்கனமாய் தேவையான தருணங்களில் மட்டும்..

எழுதியவர் : ஸ்ரீ (17-Jun-18, 10:31 am)
சேர்த்தது : ஸ்ரீஷா
பார்வை : 531

மேலே