ஊர்வலம்
என்றும் இல்லாத வண்ணம் உறவினர்களால்
என் வீடு நிரம்பி இருக்க,
இன்னும் சில உறவுகள் மாலை மாலையாய்
வந்த வண்ணம் இருக்க,
என் உறவுப் பெண்கள் என்னை நீராட்டி
முகத்திற்கு மஞ்சளிட,
சிகை அலங்காரமும், முக அலங்காரமும்
நேர்த்தியாய் முடிந்திட,
சடங்கு சம்பிரதாயம் முடிந்து
நானும் புறப்பட தயாராக,
கண்ணீருடன் பெற்றோருடன் விடைபெற்றிட,
இசை முழக்கத்துடன் ஊர்வலம் புறப்பட,
ஊர்வலத்தின் இறுதியில் காத்திருந்த
உன்னை நான் சந்திக்க,
உற்றார் உறவினர் முன்னிலையில்
நீ என்னை மாலையிட்டு மணந்திட,
என் விரல் பிடித்து நடக்க தயங்கும்
நீ என் கரம் பற்றி,
மற்றோர் முன்னிலையில்
என்னை முத்தமிட,
ஆனால் உன் கண்களில் ஏனோ கண்ணீர்,
-ஓ! என் இறுதி ஊர்வலம் என்பதாலா?