பிரியும் தருணத்தில் கவிஞர் இரா இரவி

பிரியும் தருணத்தில்!



கவிஞர் இரா. இரவி !




பிரியும் தருணத்தில் உதடு அசைத்து சொன்னாள்
பாவை என்னை மறந்துவிடு மன்னித்துவிடு என்றாள் !



மறக்க முயன்றாலும் முடியவில்லை என்னால்
மனதின் ஒரு ஓரத்தில் இருந்து வலிக்கிறது!



காதலில் வென்றவர்களுக்கு காதலருமை புரியவில்லை
காதலில் தோற்றவர்களுக்கு காதலருமை நன்கு புரியும்!



கிடைத்திட்ட காரணத்தால் அருமையை அறியவில்லை
கிடைக்காத காரணத்தால் ஏக்கம் தீரவில்லை !



காதலில் வென்றவர்களை விட தோற்றவர்களே அதிகம்
காதல் கைகூடியவர்களுக்கு மதிப்பு தெரியவில்லை!



தோற்றவர்கள் நெஞ்சில் அழியாத வடு உண்டு
தரணியில் வாழும் வரை அந்த நினைவுகள் உண்டு!



வாழ்நாள் முழுவதும் அந்த வலி தொடரும்
விரக்தி நிலையை அடிக்கடி தந்து செல்லும்!



தோல்வியில் சிலர் துவண்டு போவதும் உண்டு
தோல்வியால் சிலர் வீறு கொண்டு எழுவதும் உண்டு!



திரைப்படத்தில் கைதட்டி வரவேற்கும் காதலை
தன்வீட்டில் யாரும் வரவேற்பதே இல்லை!



பெரும்பாலான ஆண்கள் காதல் வயப்படுவதுண்டு
பெரும்பாலும் சகோதரியின் காதலை ஏற்பதே இல்லை!



காதல் திருமணங்கள் நாட்டில் நிறைய நடந்தால்
காணாமல் போகும் கொடிய சாதிவெறி!



ஆதாம் ஏவாள் காலம் தொடங்கி இன்று வரை
அனைவரின் காதலுக்கும் எதிர்ப்பலை உண்டு!



பெற்றோருக்காக தியாகம் செய்த காதல் உண்டு
பெற்றோரே சேர்த்து வைக்கும் காதல் குறைவு!



சாதி மதம் என்ற பேதங்களைத் தகர்த்திடுங்கள்
சந்தோசமாக காதலர்களை இணைத்து வையுங்கள்!



மறந்துவிட்டேன் மறந்துவிடு உதடுகள் உரைத்தாலும்
மரிக்கும் வரை காதலர்களின் நினைவுகள் அழிவதில்லை!



பிரியும் தருணத்தில் உச்சரித்த வார்த்தைகள்
பசுமரத்து ஆணியாக பதிந்தே உள்ளன!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (14-Jul-18, 8:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 287

மேலே