சுவாசக் காற்றில் சுதந்திரக் கொடி



யுத்தமிட்டுப் பூமிதனை முத்தமிட்ட உயிர்கள்
சத்தமிட்ட ஒருசொல் வந்தே மாதரம்
உறுதியுள்ள நெஞ்சக் குருதிக் குடித்து
உழுநிலம் சிவக்க முன்னோர் தந்த மாவரம்

கண்ணில் தீவிழும் வலியினில் தினம்வெந்து
மண்ணில் சாயும் மரம்போல் உயிரோய்ந்து
விண்ணில் முழங்கும் இடியாய்ப் புரட்சியிலும்
எண்ணில் அடங்காத் தியாகத்திலும் சுதந்திரம்.

கற்றை முகிலாய்ச் சூழ்ந்த காரிருளினை
ஒற்றைச் சுதந்திரத் தீச்சுடர் கிழித்தெறிந்து
அற்றைநாள் புவியில் புதைந்த விதைகளால்
இற்றை மலர்களில் வாழும் எழில் புன்னகை

உடல் நரம்புகளை உருட்டித் திரித்த கயிற்றில்
உதிரம் நனைந்த உருவமிலாச் சுவாசக் காற்றில்
உயர எழுந்து உணர்ச்சி அலைகளில்
உவகை நிறைந்து பறக்கிறது தேசியக்கொடி

தேசப்பற்று இன்றொரு நாளென்று வாழாதீர்
வாசம்தரும் தென்றலாய் வாழ்விலது நிலைக்காது
நுரையாய்ப் பொங்கும் பேச்சில் வேண்டாம்
நுரையீரல் வாங்கும் மூச்சாய்க்கொள் தேசப்பற்று.

































எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 8:40 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 4338

சிறந்த கவிதைகள்

மேலே