புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தார் - நாலடியார் 11
இன்னிசை வெண்பா
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார். 11
- இளமை நிலையாமை, நாலடியார்
பொருளுரை:
பழுதற்ற அறிவினையுடையோர் மூப்பு வருமென்று கருதி இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார்;
குற்றம் நீங்குதலில்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.
கருத்து:
இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள்.
விளக்கம்:
‘நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன.
துறத்தல் - பற்றுள்ளம் விடுதல்.
‘புரை தீரா' ‘மன்னா' இரண்டும் இளமைக்கு அடைமொழிகள்.
மகிழ்தல் - நுகர்தல்; இளமையை அறஞ் செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல், அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை எனப்படுகிறது;
நல்லறிவாளர் துறந்தார்; எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்படும்.
‘பட்டாங்கு' என்பதுபோல, ‘இன்னாங்கு' என்பதும் ஒரு சொல்.
பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள்.
அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது உணர்த்தப்பட்டது.