இன்னினியே செய்க அறவினை – நாலடியார் 29
நேரிசை வெண்பா
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால். 29
- யாக்கை நிலையாமை, நாலடியார்
பொருளுரை:
இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் உறவினர் அலறி அழும்படி இறந்துவிட்டான் என உலகத்தாரால் சொல்லப்படலாம் என்பதால்,
உடல் கட்டமைப்பு நிலையாமை புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது என்று கருதி இப்பொழுதே அறச்செயல்கள் செய்.
கருத்துரை:
புல்நுனி நீர் போல உடம்பு நொடிப்பொழுதில் இறக்க நேர்வதால் உடனே நற்செயல்கள் செய்து கொள் என்று அறிவுறுத்தப்படுகிறது.
விளக்கம்:
புல்நுனி மேல் நிற்கும் பனிநீர் துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும்; யாக்கையின் நிலையாமையும் அத்தகையது.