கவிதை வருமா… எப்போதெல்லாம்
#கவிதை வருமா…? எப்போதெல்லாம்..?
நிலம் நோக்கா நீள் விழியால்
கணம் நோக்கும் பார்வையிலே
உளம் புகுந்த நொடி தன்னில் - விரல்
பிடித்து வரும் கவிதையடி..!
அழும் மழலை அடக்கிடவே
சேர்த்தணைக்கும் வேளையிலும் தூளியிலே ஆட்டுகையில் துள்ளலுடன் தாலினிலே ஆடிவரும் கவிதையடி..!
ஆண்டவனின் அருள் கோலம்
ஆலயத்தில் கண்டுவிட்டால்
வேண்டுதலை வழி மறித்து - மெய்
சிலிர்க்க வரும் கவிதையடி..!
ஏமாற்றம் துரோகமெல்லாம்
சூழ வரும் வேளையிலே
மையம் கொண்ட புயலைப்போல்
சுழன்று வரும் கவிதையடி..!
நீள் வானம் நிலவு காண
கண்சிமிட்டும் மீன்கள் காண
சிந்தையிலே சந்தம் கூட்டி -தாள்
பந்தியிலே படையலிடும் கவிதையடி..!
காற்று தீண்ட கவிதை வரும்
காதல் தீண்ட கவிதை வரும்
கருணை கொண்ட கவிஞனுக்கு
காட்சியெல்லாம் கவிதை தரும்..!
#சொ.சாந்தி