ஒரு தந்தையின் துயரம் அல்லது போனாப் போகட்டும்

நித்தம்நித்தம் நீர்பாச்சி
நான்வளத்த தென்னமரம்
பக்கத்து வீட்டுப்பக்கம்
தலைசாச்சு குலபோட
குலபோட்ட காயையெல்லாம்
களவு செஞ்சானே !- அதை
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே

மாங்கன்னை நான்நட்டு
மல்கோவா மரம் வளத்தேன்.
மதில்தாண்டி மரக் கிளைகள்
அவன்வீட்டு மாடியிலே
பழமாக பழுத்துத் தொங்க
பரிச்சு தின்னானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே

வேலிக்குப் பக்கம் நட்ட
எலுமிச்சஞ் செடியினிலே
பச்சமஞ்ச நிறமாக
காச்சிருந்த பழமெதையும்
மிச்சம்மீதி வெக்காமல்
பறிச்சுக் கொண்டானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே

தேரிழுத்து தவமிருந்து
மாரியம்மன் அருளாலே
காத்திருந்து பெத்துப்போட்டு
பாசமா வளத்தபொண்ணை
வீடுதாண்டி கூட்டிப்போயி
ஓடிப் போனானே - அதத்தான்
போனாப்போ கட்டுமின்னு
விடமுடி யலையே!

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (16-Oct-18, 2:50 pm)
பார்வை : 68

மேலே