அழகு சிரிக்குதே

எண்ணம் முழுதும் அவளின் நினைவில்
இளமை பூக்குதே !
கண்ட வுடனே கவிதை யூற்று
கனிந்து பொங்குதே !
கண்கள் தொடுத்த கணையி லுள்ளம்
களவு போனதே !
வண்ணக் கனவு வளைய வந்து
மனத்தைத் தாக்குதே !!

இதழ்கள் ஒட்டிப் பேச மறந்த
இதயம் துடிக்குதே !
மிதந்து செல்லும் மேக மாக
விண்ணில் அலையுதே !
வதனப் பொட்டு நிலவு போன்று
வடிவங் காட்டுதே !
உதயங் காணும் கிழக்கின் சிவப்பாய்
ஒளிர்ந்து மின்னுதே !!

அன்னம் தோற்கும் அவள்தம் நடையில்
அழகு சிரிக்குதே !
சின்ன விடையின் வளைவில் வழுக்கிச்
சேலை நழுவுதே !
பின்னிப் போட்ட கூந்தல் தன்னில்
பிச்சி மணக்குதே !
கன்னல் மொழியில் அழைக்கும் போது
காதி லினிக்குதே !!

வெள்ளிக் கொலுசின் சலங்கைச் சத்தம்
மீட்டும் இசையிலே
தெள்ளு தமிழில் கொஞ்சிக் கொஞ்சிச்
சிந்து பாடுவேன் !
புள்ளிக் கோலம் போட்டு நடுவில்
பூவை வைத்திடும்
கள்ளி யவளைக் கட்டி யணைத்துக்
காதல் பேசுவேன் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Dec-18, 4:31 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 111

மேலே