கடத்தல்

கடத்தல்

இரவு பத்து மணி இருக்கும், கடைசி வேலைக்காரனும் விடை பெற்று சென்று விட்டான். வாசலில் ஒரு கூர்க்கா மட்டுமே நின்று கொண்டிருந்தான். பங்களாவில் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி மாதவன் தூங்குவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார்.அப்பொழுது மணி ஏறக்குறைய பதினொன்று இருக்கலாம். போன் மணி அடித்தது. அதை எடுத்தவுடன் சார்..நான் தற்கொலை பண்ணிக் கொள்ளப்போகிறேன்….என்று விசும்பும் ஒரு பெண் குரல்..சிறிது பதட்டமானார் மாதவன். ஹலோ..கொஞ்சம் அவசரப்படாதீர்கள். நீங்கள் யார் என்று சொல்லுங்கள். நான், சியாமளா..உங்களுடைய மாணவி சியாமளா.. சியாமளா..கொஞ்சம் பொறு, அவசரப்படாதே. நீ எதற்கு தற்கொலை செய்யப்போகிறாய்? உன் பிரச்சினை என்னெவென்று சொல். நான் தீர்த்து வைக்கிறேன். என்னுடைய பிரச்சினையை இனி யாராலும் தீர்க்க முடியாது. என்னோடு இந்த பிரச்சினை முடியட்டும் குட்..பை..நில்..நில் போனை வைக்காதே. நீ எங்கிருக்கிறாய்? நான் அங்கு வருகிறேன். அவசரப்படாதே, நான் வந்தவுடன் மேற்கொண்டு பேசலாம், அதன் பின் நீ என்ன முடிவு எடுத்தாலும் சரி..ப்ளீஸ் எனக்காக காத்திரு இதோ வந்து விட்டேன். உன் தங்குமிடத்தை சொல். ஓட்டல் வைபவ், ஓகே ரூம் நம்பர் 303. இதோ வந்து கொண்டே இருக்கிறேன். படக்கென போனை வைத்தவர் மள மள வென தன்னை தயார் படுத்திக்கொண்டு கீழ்த்தளத்திலிருந்த தன்னுடைய காரை எடுக்க விரைந்தார்.
கூர்க்கா தனக்கு வைத்த சல்யூட்டை கூட கவனிக்காமல்,ஓட்டல் வைபவ் நோக்கி தன் காரை செலுத்தும் பொழுது சியாமளாவை பற்றி அவர் சிந்தனை விரிந்தது. சேலத்திலிருந்து சென்னைக்கு எப்பொழுது வந்தள்? அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளாள். ஆராய்ச்சி படிப்புக்கான மாணவியாக தன்னிடம் வந்தாள்.
ஒரு வகையில் உறவுப்பெண் கூட. இப்படி பைத்தியக்காரத்தனமாக செய்வாள் என ஏப்படி எதிர்பார்க்க முடியும்? அதுவும் சென்னை வந்து இப்படி செய்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று தெரியவில்லை. அவர் எண்ணம் அவரை விட வேகமாக சென்றது. ஓட்டல் வைபவ் வந்தவுடன் அவசர அவசரமாக காரை பார்க் செய்து விட்டு ரிசப்சனில் ரூம் எண்ணை விசாரித்துக்கொண்டு வேக வேகமாக லிப்டை நோக்கி சென்றார்
ரிசப்சன் சொன்ன மூன்றாவது தளம் அமைதியாக இருந்தது. ஓரிரு விளக்குகள் மட்டுமே அந்த வராந்தாவில் எரிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அறை எண்ணாக தேடிக்கொண்டே வந்தார், அட..சட்..அறையின் அமைப்பு பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணாக போகும் போலிருக்கிறது.சலித்துக்கொண்டார்.310…309..308.. அப்பாடா 303 வந்து விட்டது. மெதுவாக கதவை தட்டினார். பதிலில்லை, அதற்குள் ஏதாவது செய்து கொண்டாளா? மனது பதைத்த்து, மெல்ல கதவை தொட அது திறந்து கொண்டது. உள்ளே ஒரே இருட்டு. ஹலோ கூப்பிட்டு பார்த்தார்.யாரும் இருப்பதாக தெரியவில்லை. கொஞ்சம் முன்னேறி உள்ளே சென்றார். உள்ளே ஒரு அறை இருந்தது. அதையும் எட்டி பார்த்து விடலாம், என நினைத்து எட்டு வைத்து உள்ளே சென்றார். வெளியே ”ப்ளக்” என யாரோ ரூம் கதவை பூட்டும் சத்தம் கேட்டது. யார்..யார்? பூட்டுவது வெகமாக சென்று கதவை தள்ளி பார்க்க கதவு பூட்டப்பட்டுவிட்டது என்பது தெரிந்தது. பயத்தில் வேர்வை வழிந்தது.
சே அவசரப்பட்டுவிட்டேனா? யார் செய்தது இது? முதலில் பதட்டப்படக்கூடாது தன்னை நிதானப்படுத்திக்கொள்ள வேண்டும், முயற்சித்தார். முதலில் லைட்டை போட வேண்டும், நிதானமக தேடினார். ஐந்து நிமிடத்தில் சுவிட்சு இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார். சுவிட்சை போடவும் அறையில் பளீரென விளக்குகள் எரிந்தன. மின் விசிறியை சுழல விட்டு கீழிருந்த ஒரு சோபாவில் தன்னை இருத்திக்கொண்டு தன்னை சமநிலை படுத்திக்கொண்டார். தன்னை அடைத்து வைப்பதால் யாருக்கு என்ன நன்மை? யோசித்தார். வலது புறம் பார்வையை திருப்ப அங்கு போன் வைக்கப்பட்டிருந்தது.முகம் பிரகாசமானது, வேகமாக சென்று போனை எடுத்தார்..ஞொய்..என்ற சப்தம் மட்டும் கேட்டது. போன் லைனையும் துண்டித்துள்ளார்கள்.. செல் போன், இவர் தன்னைத்தானே திட்டிக்கொண்டார். காரில் வைத்த்து ஞாபகம் வந்தது. நன்றாக மாட்டிக்கொண்டேன். இனி பதட்டப்படுவதால் எந்த பிரயோசனமில்லை. சோபாவிலேயே தன்னை சுருக்கி படுத்திக்கொண்டார்.
“க்ளிக்” கதவு லாக்கர் திறக்கும் சத்தம் கேட்டவுடன் சோபாவில் படுத்து கிடந்த மாதவன் சட்டென விழித்து வாசலை பார்த்தார். எதிரில் ஆஜானுபாவனாக இருவர் நின்று கொண்டிருந்தனர். சாரி சார் உங்களுக்கு தொல்லை கொடுத்து விட்டோம். இவர் எதிரில் வந்து நின்று மணி எட்டு ஆகி விட்டது. இனி நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். எங்களை மன்னித்து கொள்ளுங்கள் அவரின் பதிலை எதிர்பார்க்காமல், அவரின் தோளை தொட்டு விடை பெற்று சென்றனர். திக் பிரமை அடைந்து உட்கார்ந்திருந்த மாதவன், உடனே கிளம்ப ஆயத்தமானார். கதவை வெறுமனே சாத்தி விட்டு விரு விருவென வெளியே வந்தார். தான் பார்க் பண்ணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்து கிளம்பினார். தலையை வலித்தது. இது அதிர்ச்சியினால் கூட இருக்கலாம். எப்படியோ வீடு சென்றால் போதும் என்றிருந்தது.அவர் பங்களா முன்னால் வந்த போது கேட் முன் இரு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே வந்தவர் அதிர்ச்சியாக நின்று விட்டார். உள்ளே கண்ணாடி சிதறல்கள் சிதறிக்கிடந்தன. அங்கங்கு சுவர் உடைந்து காணப்பட்ட்து. வேலைக்கார்ரகள் வீட்டை சரி செய்து கொண்டிருப்பதை கண்டார்.

வெளியே ஹாரன் சப்தம். அரசு முத்திரை செருகிய ஐ.ஜி.யின் கார் உள்ளே வந்து கொண்டிருந்தது. அதிலிருந்து ஐ..ஜி.இறங்கினார். ஐ.ஆம்.வெரி சாரி. சார் உங்களுக்கு மிகுந்த சிரமம் கொடுத்து விட்டோம். ஆனால் வேறு வழியில்லை, நேற்று இரவு தீஎவிரவாதிகள் உங்களை கடத்தி செல்ல இருப்பதாக எங்களுக்கு இரவுதான் தகவல் கிடைத்தது. அது மட்டுமல்ல அவர்கள் ஆயுதங்களுடன் வந்து இருப்பதாகவும் தகவல் வந்தது. அவர்களுடன் சண்டையில் ஈடுபடும்போது உங்களுக்கு ஆபத்து வர வாய்ப்புண்டு. அதனால் உங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த இந்த வழிமுறையை கையாள வேண்டியதாகி விட்டது. போன் பண்ணி உங்களை நீங்களே காட்டி கொடுக்க கூடாது என்றுதான் ஓட்டலில் உங்கள் அறையில் போன் லைனையும் துண்டித்து விட்டோம். நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில் உங்கள் வீட்டிற்கு கொஞ்சம் சேதாரமாகி விட்ட்து. அதை எங்கள் ஆட்கள் சரி செய்து கொடுத்து விடுவார்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும். மாதவனிடம் கை குலுக்கி விட்டு விடை பெற்று சென்றார்.

மாதவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Mar-19, 12:23 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kadthal
பார்வை : 177

மேலே