பறம்பு மலையும் பாரி வள்ளலும்

இயற்கைவளம் நிறைந்தமலை பறம்புமலை அம்மே
***இனியவனாம் வேள்பாரி ஆண்டமலை அம்மே !
அயர்வின்றி உழைக்குமக்க ளுள்ளமலை அம்மே
***ஔவைமுதல் பலர்பாடும் அழகுமலை அம்மே !
நயமான மூங்கில்நெல் விளையுமலை அம்மே
***நற்சுவையாம் பனிச்சுனைநீர் கொண்டமலை அம்மே !
வியக்கவைக்கும் தேனடைகள் மிகுந்தமலை அம்மே
***வேர்ப்பலாக்கள் மணம்பரப்பி யீர்க்குமலை அம்மே !!

நாட்டுமக்கள் நலமொன்றே நெஞ்சத்தில் கொண்டோன்
***நாடிவந்தோர்க் கில்லையென்று சொல்லாமல் கொடுப்போன் !
கேட்பவர்க்குக் கேட்டவற்றை உடனளிக்கும் செம்மல்
***கிஞ்சித்தும் மறுத்தறியாப் பாரியென்ற வள்ளல் !
கோட்டைக்குள் இருந்துகொண்டே மூவேந்த ரோடு
***குன்றாமல் முற்றுகையை எதிர்கொண்ட கோமான் !
பாட்டெழுதும் பாணரைப்போல் வேடமிட்டுச் சென்று
***பாடியமூ வேந்தருக்கும் வேண்டியத ளித்தான் !!

முல்லைக்குத் தேரீந்த கொடைவள்ளல் பாரி
***மூவேந்தர் யாசிக்க நல்லுயிரை ஈந்தான் !
வெல்வதற்கு வழிசொன்ன கபிலருளம் நொந்து
***விரக்தியொடு தன்முடிவைத் தேடநினைத் தாலும்
வல்லவனாம் தன்நண்பன் பாரியிடம் கொடுத்த
***வாக்கைக்காப் பாற்றிடவே மனம்தேறி நின்றார் !
கல்மனமும் இளகிவிடும் தொடர்ந்தகதை கேட்டால்
***கண்ணீரும் கன்னத்தில் வழிந்தோடும் அம்மே !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Mar-19, 11:08 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 461

மேலே