குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடும் – நாலடியார் 90
நேரிசை வெண்பா
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும். 90
- பிறர்மனை நயவாமை, நாலடியார்
பொருளுரை:
ஊர்நடுவில் பற்றிக்கொண்ட ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும்; ஆனால், நீருள் மூழ்கினாலும் காமம் எரிக்கும்; மலை ஏறி ஒளித்தாலும் காமம் எரிக்கும்.
கருத்து: காமம், தீயினுங் கொடியது.
விளக்கம்: ஊருள் என்பதில் ‘உள்' நடுவென்னும் பொருட்டு. எழுந்த, மேலே ஓங்கிய; உரு - அச்சம்; கொடுமை போன்றப் பெருந் தீ என்றற்குச் ‘செந்தீ' எனப்பட்டது. நீருள் - நீர்நிலையுள் குளித்தும்,
கருத்துரை:
வேலாயுதம் ஆவுடையப்பன் • 07-Mar-2019 6:53 pm
சூர்ப்பணகை கொண்ட காமத் தீ மூண்டெரிந்தது என்பதை
நாலடியாரில் காணும் பிறன்மனை நயவாமை அதிகாரத்திலுள்ள
பாடலுடன் ஒப்பிடத் தகும்.
Dr.V.K.Kanniappan • 08-Mar-2019 8:40 am
சூர்ப்பணகையின் காதல் நோய் (2898-2912) 15 பாடல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முதலிரண்டு அறுசீர் விருத்தங்கள்; மற்ற 13 பாடல்கள் கலி விருத்தங்களாகும்.
முத்தாய்ப்பாக கடைசிப் பாடலில்:
2912.
கலி விருத்தம்
ஆகக் கொங்கையின், ஐயனென்(று) அஞ்சன
மேகத் தைத்தழு வும்மவை வெந்தன
போகக் கண்டுபு லம்புமப் புன்மையாள்
மோகத் துக்கோர் முடிவுமுண் டாம்கொலோ?
பொருளுரை: மை போன்று கரிய மேகத்தை இராமன் என எண்ணித் தன் மார்பிலுள்ள
முலைகளில் பிடித்து அணைப்பாள்; அம்மேகங்கள் (காமத் தீப்பட்ட உடலின்
வெப்பத்தால்) வெந்து அழிந்தமை கண்டு வாய்விட்டுப் புலம்புவாள் அந்த
இழிந்த பண்பு கொண்ட சூர்ப்பணகை; காமத்திற்கு ஒரு முடிவு உண்டாகுமோ? (ஆகாது).