“செல்பேசியும் சொல்பேசியும்”

“செல்பேசியும் சொல்பேசியும்”
இன்றைய காலகட்டத்தில் செல்பேசி இல்லாமல் ஒரு மனிதன் வாழமுடியுமா? என்னும் கேள்வியில் தொக்கி நிற்கிறது மனித வாழ்க்கை. இது இந்தியாவில் மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். உலகம் முழுக்க இதுதான் நிலைமை.
பரவாயில்லை, ‘செல்பேசி” இருப்பதால் மனிதனுக்கு நல்லதுதான் என்னும் நிலைமையும் வந்து விட்டது. காரணம் உலகம் சுருங்கி வெறும் நொடி பொழுதுகளில் நீங்கள் உலகம் முழுக்க மனித தொடர்பை ஏற்படுத்தி தரும் அற்புத சாதனம் அது.
அது மட்டுமல்ல உலகத்தின் கடைகோடியில் நடக்கும் நிகழ்வும் உங்கள் கண் முன் வந்து உடனடியாக காட்சி பொருளாகும் போது இந்த செல்பேசி என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு வரப்பிரசாதமல்லவா?
எல்லாம் சரிதான், ஆனால்…! இந்த கேள்வி எப்பொழுது கேட்கப்படு -கிறது என்றால் இந்த செல்பேசி மனித வாழ்க்கையின் சீரழிவுக்கும் பெரும் பங்காற்றி விடுகிறது என்பதுதான் வருத்தப்படக்கூடிய விசயமாக இருக்கிறது என்பதும் உண்மை.
பொதுவாகவே எந்த ஒரு கண்டுபிடிப்பும் மனித வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருந்து பின்னர் அதுவே அவர்களை விடாமல் அல்லது அவை இல்லாமல் இவர்கள் இல்லை என்னும் நிலைமைக்கு கொண்டு போய் விடுகிறது.
இந்த கட்டுரையும் செல்பேசி, அதனுடைய பயன்கள், செல்வாக்கு இவைகளை பற்றி பேச போவதில்லை. இந்த செல்பேசியினால் மக்களால் புழங்கி கொண்டிருக்கும் “முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்ட்ரா கிராம், இன்னும் இருக்கலாம், இவைகளை மனிதன் எப்படி கையாளுகிறான் என்பது பற்றித்தான்.
நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது, நாம் எந்த ஒரு விசயத்தை தெரிந்து கொண்டாலும் (அரைகுறையாக இருந்தாலும்) அதை மற்றவர்க்கு பகிராமல் இருக்க முடிவதில்லை. முன்னர் (கிசு கிசுவாக) இன்று செல்பேசி வழியாக (வாயாலும், காட்சியாலும்) அதனால் நாம் எந்தளவுக்கு தெரிந்திருக்கிறோம் என்பதை விட மற்றவனுக்கு எந்தளவுக்கு அதை கடத்தி (அ) அவனுக்கு புரிய வைத்திருக்கிறோம் என்பதே.
இன்றைய முக்கிய பொழுது போக்கே என்னவென்றால் காலையில் எழுந்தவுடன் மற்றவர்க்கு “குட்மார்னிங்” செல்பேசி மூலம் மற்றவர்க்கு கடத்தி விட்டுத்தான் மறு வேலை. இது நல்ல விசயம், மற்றவர்க்கு நம்மை நம் உருவத்தை அவர்கள் கண் முன் கொண்டு வரும் நிகழ்வுதான். ஆனால் அடுத்து செய்வது என்னவென்றால் இதே முறையை கொண்டு “வீண் வதந்தி” செய்திகளை மற்றவர்க்கு கடத்தி, இது நடக்குமா? நடந்திருக்குமா? இதனால் அந்த சிகழ்வின் சம்பந்தபட்டவர்களின் குடும்பம் எப்படி எதிர் கொள்ளும்? இதிய எல்லம் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் மன நிலையையும் சிதைத்து ஒரு வித பீதிக்குள்ளாக்குவது செல்பேசியின் கை வந்த கலையாகிவிட்டது என்பதுதான் வருத்தம்.
இன்று நாட்டில் ஏற்படும் பாதி கலவரங்களுக்கு இவைகள்தான் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் எல்லாம் (செல்பேசி) இல்லாத காலங்களில் மனிதர்கள் வதந்திகளை வாய் வழியாக பேசி, பேசி, அதை அடுத்தடுத்து கடத்துவதற்கு நாட்கள் தேவைப்படும், அதற்குள் ‘அரசு விழித்து’ ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிடும். அப்படி இருந்தாலும் அங்கு ஏற்படும் பொருட் சேதம் உயிர் சேதங்கள் ஏற்பட்டு விடும். அப்படி இருக்கையில் இன்றைய காலகட்டத்தில் இந்த செல்பேசி மூலம் எப்படி வதந்திகள் பரவும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
விளையாட்டாக சொல்வதென்றால், செல்பேசி வைத்திருக்கும் ஒரு மனிதன் (சொல்பேசி) அவனே “டாக்டராகவும், இஞ்சீனியராகவும், பொது சேவகராகவும், திடீரென தன்னை துப்பறியும் புலியாகவும் கூட ஆகி விடுகிறான். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்டால் அவனுக்கு கிடைத்திருக்கும் “செல்பேசி” தான் அவனை அப்படி எண்ண தூண்டி விடுகிறது.
உங்களுக்கு வைத்திய அறிவுரை வேண்டுமா? இவனே எங்கிருந்தோ இந்த வைத்தியத்தை பற்றிய ஒரு செய்தியை பிடித்து மற்றவர்க்கு தட்டி விட்டு இந்த வைத்தியத்துக்கு இதுதான் ‘அருமருந்து’ அன்று மற்றவர்களுக்கு மருத்துவ அறிவுரையை புகட்டி விடுவான் செல்பேசி மூலமாக,
திடீரென பொருளாதார மேதையாகி தான் நினைப்பதை எல்லாம் மற்றவர்க்கு கடத்துவதில் செயல்படுவான். இவைகள் எல்லாம் சாதாரண உதாரணங்கள்தான்.
அடுத்து “சமூக செய்திகள்” அடேயப்பா எத்தனை செய்திகளை உங்கள் கண்பார்வைக்கு அல்லது தலைக்குள் திணித்து விடும் செய்திகளை அள்ளி அனுப்பி இருப்பான். இப்பொழுதெல்லாம் ஊடகங்கள் கூட இவனுடைய “வதந்தீ” செய்திகளுக்கு போட்டியாக, ஈடுகட்டும் விதத்தில் அவர்களும் கூட இப்படிப்பட்ட செய்திகளை பரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். என்ன செய்வது? மனிதர்க்கு உண்மை விவரங்கள் அவசியப்படுவதில்லையே? சுட சுட செய்திகள், அதுவும் சமூகத்தில் ஈரல் குலை நடுங்கும் செய்திகள் வந்தால் போதும்.
அமெரிக்காவில் ஒவ்வொரு மனிதனிடமும் துப்பாக்கி இருப்பதால் அங்கு பொது வெளியில் துப்பாக்கி சூடுகள் அடிக்கடி நடந்து உயிர்பலிகள் அதிகமாக ஏற்படுகிறது, நம் நாட்டில் துப்பாக்கி எல்லாம் தேவையில்லை, ஒவ்வொருவரிடமும் “செல்பேசி” இருக்கிறது. அது போகும், மற்றவரை குலை நடுங்க செய்ய..!
இப்பொழுது வித விதமான வசதிகள் கொண்ட செல்பேசி வந்து விட்டது., அது இன்னும் சாதாரண மனிதனை, மிகப்பெரிய அறிவாளியாக்கி விடுகிறது. அந்த செல்பேசி மூலம் அவன் தன்னை ஒரு மேதையாகவே நினைத்து மற்றவர்க்கு முடிந்தவரை இதன் மூலம் போதனைகளை செய்ய ஆரம்பிக்கிறான். போதனை என்றால் கிடைத்த செய்திகளை கடத்தி விட்டு கொண்டே இருப்பது.
செல்பேசியில் நிறைய நன்மைகள் இருக்கிறது, கலை, இலக்கியம், கட்டுரை, இசை, பேச்சுக்கள், வாசித்தல், இன்னும் எத்தனையோ இருக்கிறது. ஆனால் அவைகள் தனி மனிதனை செம்மை படுத்த மட்டுமே உபயோகமா கிறது. அதனால் செல்பேசி வைத்திருக்கும் சில சொல் பேசிகளுக்கு என்ன பயன்?
தனி மனித செயல்பாடுகள், யாரையும் நம்பி ஒரு விசயத்தை சொல்வது, அல்லது பேசுவது, அது ஏன்? இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்குபவர்கள் கூட இந்த செல்பேசியின் மூலம் தன்னை படம்பிடித்து பொது வெளியில் விட்டு வக்கிரப்படுத்தி விடுவானோ? என்னும் அச்சம், இன்னும் எத்தனை இடர்பாடுகளை இந்த செல்பேசியின் மூலம் சொல்பேசிகள் ஏற்படுத்தி விடுவார்களோ என்னும் அச்சம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இதற்கு தீர்வு என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. அரசாங்கம் எவ்வளவுதான் அதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும், மீண்டும் மீண்டும் உயிர்பெற்று வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Apr-25, 4:13 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 49

மேலே