காதல் என்ற பெயரால்

நண்பா...

உன் பார்வையை பெறாமலும்
காதலை நிராகரித்தும் செல்பவளை...

உன் எறும்புண்ணி நாக்கினால்
தீண்டி விடாதே...

காதல் என்ற பெயரால்...
எரியும் சீற்றத்தை அமிலத்தால்
எறிந்துவிடாதே அவள் முகத்தில்!

காதல் என்ற பெயரால்...
கூரான உன் ஆண்மையால்
குதறிவிடாதே பெண்மையை!

உன்
நேசத்தை நேசிக்காமல் சென்றவள்
போகட்டும்…அவளை போக விடு!
விலகட்டும்...அவளை வாழ விடு!

அந்த பெண்
உன்னை ஓரக்கண்ணால் பார்த்திருக்க கூடும்...
நீ பார்ப்பதை அறிந்து தலைமயிர் ஒழுங்கு
படுத்திக்கொள்ள செய்திருக்கலாம்... நீயொரு
முகம் காட்டும் கண்ணாடி...அவ்வளவே...

நீ நெருங்கி செல்கையில் உன்
சட்டை பைகள் வெறுமையாய் இருப்பதால் உன்னை
சட்டை செய்யாமல் போயிருக்கலாம்...
அவளுக்கு நீ யாசகம் கேட்கும் பிச்சைகாரன் மட்டுமே...

இதையும் மீறி அந்த பெண்
உன்னோடு பழகியிருக்கலாம்...
உன் அன்பை கொண்டு தேவைகளை
தீர்த்துக்கொண்டிருக்கலாம்...நீயொரு
வாராக் கடன் கொடுக்கும் வங்கி...அவ்வளவே...

ஏதோ ஒரு இறுதி சந்திப்பில்...நீ
நொறுங்கிய அந்த கணத்தில்... உன்
அருகாமையை வெறுத்தவள் உனக்கு
அருகதையற்றவள் ஆகிறாள்...

என்றாவது ஒரு நாள்
எங்கேயாவது இந்த உலகத்தில்
உனக்கானவளை நீ சந்திக்க கூடும்...

அது வரை பொறுமை உனக்கில்லை எனில் ...

திருமண தகவல் மையத்தில் பதிவிட்டு உன்
தேவதைக்காக காத்திரு
காதல் என்ற பெயரால்...

எழுதியவர் : சிவா. அமுதன் (12-Apr-19, 9:17 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 106

மேலே