415 செல்வமெனப் பெயரிடலால் சிலர் வறுமைப் பேர் பெற்றார் - பொருளாசை ஒழித்தல் 11
அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
கதிரவனா லொளியுறும்பல் வகைக்கல்லை மணியென்றுங்
..காமர் மண்ணை
நிதிவெள்ளி யுலோகமென்றும் பெயரிட்டும் விலையிட்டும்
..நிகழம் மண்ணால்
சதியான காசுபண மெனச்செய்துந் தரைஇன்மிடி
..தனைஅ மைத்தோர்
மதியிலா நரரன்றிக் கடவுளரோ சொல்லுவாய்
..மருள்சேர் நெஞ்சே. 11
- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மயக்கம் கொள்ளும் நெஞ்சே! சூரியனின் ஒளியினால் பளிச்சிடும் பல வகையான கற்களை ரத்தினக் கற்களென்றும், ஒளிரும் மண்ணைச் செம்பொன், வெள்ளி என்றும் பெயரும் பெரும் விலையும் வைத்து, பின் அந்த மண்ணால் அழியும் காசு பணமெனச் சேர்க்கின்றனர்.
இவை இல்லாதவர்களை வறுமை உடையவ ரென்று ஆக்கியவர் அறிவிலா மக்களே அன்றி கடவுளா என்று சொல்” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
மணி - ஒளிக்கல். (இரத்தினம்) சதி - அழிவு.
மிடி - வறுமை. மருள் - மயக்கம்.