அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா ...!!
***************************
உயிர்தந்தாய் ! முப்போதும் உள்ளத்தி லேசுமந்தாய் !
அயர்விலா நல்லுழைப்பால் அன்றாடத் தேவைகளை
இயன்றவரை ஈடேற்றி ஏற்றம் பெறச்செய்தாய் !
தயவாய் அரவணைப்பில் தாயையும் மிஞ்சினாய் !
உயர்நெறிகள் கற்பித்தாய் ஒப்பற்ற ஆசானாய் !
பயன்மரமாய் வாழவைத்தாய்! பன்மடங்கு பாசத்தைப்
பெயலாய்ப் பொழிந்தாய் ! பெரும்பேறு பெற்றதெண்ணி
வியக்கின்றேன் ! எந்தையே ! வேண்டுமுன் ஆசிகளே !!

வழிகாட்டி யாய்விளங்கி வாழ்வை மலர்வித்தாய் !
மொழிப்பற்றை ஊட்டிவிட முத்தமிழும் கற்பித்தாய் !
பழிபாவத் திற்கஞ்சும் பக்குவத்தைக் காட்டிவிட்டாய் !
பிழைசுட்டி நற்பண்பைப் பேணும் வகைசெய்தாய் !
விழிப்புடன் தாங்கிடும் வேர்த்திரள் நீயானாய் !
உழைப்பதற் கஞ்சாத ஓய்வறியாச் சூரியனே !
சுழலு முலகில் சுமைகளால் சோர்வுற்றேன் !
தொழுதழைப்பே னுன்னை ! துயர்துடைக்க வாராயோ ?

காயும் முழுமதியைக் காட்டிக் கதைசொன்னாய் !
தாயும் அதைச்சுவைக்கத் தானும் மிகமகிழ்ந்தாய் !
தீயன நீக்கும் தெளிவை உணர்த்தினாய் !
ஆயுள் முடியுமட்டும் அன்பினால் கட்டிவைத்தாய் !
தேயும் பிறைநிலவாய்த் தேகம் மிகமெலிந்தாய் !
நோயிடம் தோற்று நொடிப்போதில் நீமறைந்தாய் !
பாயும் நினைவுகளால் பாகாய் உருகுகின்றேன்
தூயனே ! என்றும் துணையாய் இருப்பாயே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Jun-19, 12:42 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 69

மேலே