ஓடிப்போலாமா

நுனி மூக்கில் கோபம் வர காத்திருந்தேன்
துளி துளியாய் சுட்டுப்பொசுக்கியது
பெரு மழையில் நனைந்து
சிவந்திருந்த அவளின் கண்கள்
மூச்சுக்காற்றின் வெப்பம்
கூடிட கூடிட குளிரின் கைகள்
இழுத்து அணைக்காதோ என்ற
விம்மலில் உலையாய்
கொதித்துக்கொண்டிருந்தது
அவளின் விரல்கள்
இடைவேளை இன்றி வசனங்கள்
பேசப்போகிறாள் என எதிர்பார்த்த
வேளையில் உதட்டை
கடித்துக்கொண்டு சாய்ந்து நின்றாள்
வேப்பம்பழங்களுக்கு மத்தியில் காயாய்
திக்கித்திணறி குழந்தையாய்
புன்னகைக்க முயன்று முயன்று
தோற்றுபோகையில் நில்லாமல்
வழிந்து கொண்டிருந்தது
அவள் அழகு சுவரோவிய
மாதவியை நினைவுபடுத்தியபடி
கனவுகளைத் தாண்டியும் பயணிக்க
கால்களை உற்சாகப்படுத்தியது
காதல் தான் என்றாலும் இன்று
வழிதெரிய மழையிடம் சரணடைய
பணித்தது இரவிலும் இருளிலும்
விழித்துக் கொண்டிருந்த
வானம் தான்! வானம் தான்!.............
காதல் தான்! காதல் தான்!.................