வெண்பாத்துணர்

( கண்....என்று தொடங்கி.....பார் .....என்று முடியும் பாக்கள் )

குறள் வெண்பா ...!!!
**************************
கண்ணன் மலரடி கண்டு நிதம்போற்றிப்
பண்பாடப் பொங்குமின்பம் பார் .

நேரிசை சிந்தியல் வெண்பா ...!!!
*******************************************
கண்ணின் மணியாய்க் கருதி யன்புடன்
வண்ண மலர்த்தூவி வாழ்த்திட - மண்ணுண்டோன்
பண்படச் செய்திடுவான் பார்.

நேரிசை வெண்பா ...!!!
*******************************
கண்ணன் குறும்புகள் கண்டால் உளமகிழும்
எண்ணத்தில் நிற்கு மினிமையாய் - வண்டாடுஞ்
சோலையில் கோபியரைச் சுண்டி யிழுத்திடும்
பாலகன் பேரெழிலைப் பார்.

இன்னிசை வெண்பா ...!!!
*********************************
கண்ணுக்குக் கண்ணாகக் காத்திருந் தாலுமவன்
வெண்ணெய் திருடும் விளையாட்டில் - விண்ணகமும்
ஆங்கே களித்திருக்க ஆயன் அயர்வின்றிப்
பாங்குடன் ஆடுவான் பார்.

நேரிசை பஃறொடை வெண்பா ...!!!
*************************************************
கண்மணியே என்று கனிவொடு கொஞ்சிடினும்
உண்ண அழைத்ததும் ஓடிவிடும் - விண்ணனைய
நீலவண்ணன் சேட்டைகளால் நெஞ்சில் நிறைந்திருப்பான்
ஆலிலையில் துயில்வான் அச்சமின்றிச் - சோலையில்
ஆசையுடன் சுற்றிவரும் அன்பான கன்னியர்தம்
பாசத்தில் பூத்தணைப்பான் பார்.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Jul-19, 10:44 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 37

மேலே