புரிந்து விட்ட புதிர்

புரிந்து விட்ட புதிர்
இத மனுசன் சாப்பிடுவானா? அடுத்த கரண்டி சாதம் போடுவதற்கு முன் காந்திநாதன் தன் மனைவி சாந்தியை பார்த்து கேட்ட கேள்விக்கு ஏன் இதைத்தான் இரண்டு குழந்தைகளும் சாப்பிட்டு போச்சு, அவங்க மனுசனா தெரியலையா? இல்ல இதுவரைக்கும் வக்கனையா சப்பிட்டுட்டு கடைசி சாப்பாட்டுல எழுந்து இந்த கேள்வியை கேட்டா நீங்க எந்த வகையில சேர்த்தி. உடனே பதில் வந்ததை பொறுக்க முடியாமல் உனக்கு வாய் ஜாஸ்தியாடிச்சு, என்று எழுந்து சென்று கையை கழுவினான். சாப்பாட்டை பத்தின வாய் இப்ப எதுக்கு என் வாயை பத்தி பேசணும்? பதில் அவளிடமிருந்து உடனே வர கோபமாக வெளியேறி சென்றான்.
பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்குக்கு துக்கம் துக்கமாக வந்தது. ஏன் இப்படி எப்பொழுது பார்த்தாலும் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்? அமைதியாகவே பேசிக்கொள்ள மாட்டார்களா? மனதில் வருத்தப்பட்டுக்கொண்டே பள்ளிக்கு கிளம்ப தயாரானான். காந்திநாதன் வண்டியை கார்த்தி அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். கார்த்தி அப்பாவின் வண்டியில் ஏறியவுடன் அம்மாவுக்கு டாடா காட்டு என்று அப்பாவின் கட்டளைப்படி அம்மாவுக்கு திரும்பி கை அசைத்தான். அவன் மனைவியும் இதை எதிர்பார்த்தது போல மகனுக்கு மகிழ்ச்சியாக கை அசைத்தாள்.
காந்தி நாதன் சாந்தி தமபதிகளுக்கு கார்த்தி மற்றும் பிரியா என் இரு குழந்தைகள், பிரியா மூத்தவள், பத்தாவது படிக்கிறாள். கார்த்தி எட்டாவது படிக்கிறான். தினமும் அப்பாவின் வண்டியில் பள்ளிக்கு சென்று விடுவான். வரும்போது மட்டும் பேருந்தில் வந்து விடுவான். பிரியா பள்ளி வாகனத்திலேயே சென்று வந்து கொண்டிருக்கிறாள். சாதாரண உத்தியோகஸ்தனான காந்தி நாதனுக்கு இரு குழந்தைகளையும் படிக்க வைத்து குடும்பத்தை ஓட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம்தான். இருவரும் அடிக்கடி சண்டையிட்டாலும் கட்டு செட்டாய் குடும்பத்தை நடத்துவதால் வண்டி ஓடுகிறது.
கார்த்திக்கு மட்டும் பெரிய மனக்குறை, இவர்கள் ஏன் இப்படி அடித்துக்கொள்கிறார்கள். ஒரு பத்து நிமிடம் பேசி சிரித்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு வெளியே சென்று விட்டு வந்து பார்த்தால் இருவரும் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருப்பார்கள். அவனுக்கு அந்த இள வயதில் மனதை ஒரு வித சோகத்தில் கொண்டு விடும். அக்காவிடம் சொல்லி வருத்தப்பட்டால் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையாடா என்பது போல் பார்ப்பாள். ஒரு விதத்தில் அவளும் அப்படித்தான், சின்ன விசயங்களுக்கெல்லாம் அவனுடன் கத்தி கூப்பாடு போடுவாள். அம்மாவிடம் சரிக்கு சரியாக சண்டை போடுவாள். மொத்தத்தில் வீடு ஒரு போர்க்களம் போல் காணப்படும்.
இதை பார்க்க ஏண்டா இந்த குடும்பத்தில் வந்து பிறந்தோம் என்று கூட நினைப்பான். ஒரு முறை அக்கா பள்ளியிலிருந்து வர தாமதமாக, அம்மா உடனே அப்பாவுக்கு போனை போட்டு பேச அப்பாவும் அடித்து பிடித்து பள்ளிக்கு சென்று பார்த்தால் “ஸ்பெசல் கிளாஸ்” என்று சொன்னவுடன் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் இதையெல்லாம் பொண்ணுகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கமாட்டியா? என சத்தம் போட, அம்மாவும் அவள் எங்கே சொல்கிறாள் என்று பதிலுக்கு கத்த அக்கா கால தாமதமாய் வருவதற்கு இவர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்று இவனுக்கு புரியவேயில்லை.
காலங்கள் உருண்டன, பெற்றோர்கள் மேல் இவனுக்கு மனக்குறைகள் இருந்தாலும் படிப்பில் கோட்டை விடாமல் நல்ல மதிப்பெண் பெற்றதால் பட்ட படிப்பில் கேட்ட பாடம் கிடைத்தது. ஆனால் சென்னையில்தான் கிடைத்தது. அவன் அப்பா அவனை சேர்ப்பதற்கு அங்கும் இங்கும் பணத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இந்த காரணத்தால் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சச்சரவுகள் வந்து கொண்டிருந்தன. இவனுக்கு அவ்வப்போது மனம் சோர்வுறும். அக்கா வேறு பட்ட படிப்பின் இறுதியில் இருந்தாள். அவளுக்கு உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி அம்மாவும், நான் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்று அக்காவும் துணையாக அப்பாவும் அப்பப்பா..ஒரே யுத்தகளமாக இருந்தது வீடு. சே இது வீடா இல்லை ஏதாவது சந்தைக்கடையா?
இங்கிருந்து எப்படா சென்னைக்கு போவோம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டான் கார்த்தி.
கோவையை விட சென்னை அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அவனை கல்லூரியில் சேர்த்து விட்டு அப்பா திரும்பி சென்று விட்டார். கல்லூரியில் சேர்ந்து முதல் நாள் வகுப்பு முடிந்து விடுதிக்கு சென்றவனுக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.
எதிர் கால வாழ்க்கை என்ற நினைப்பை விட அப்பா, அம்மா, அக்கா குரலுக்கு ஏங்கினான். அவர்கள் சண்டையை இப்பொழுது அவனுக்கு கேட்க வேண்டும் போல் இருந்தது. அக்கா அவனிடம் வாயடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. இப்பொழுது அவனுக்கு மெல்ல உண்மைகள் புரிந்தது. இதுவரை அவர்களை விட்டு ஒரு நாள் கூட தனியாக இருந்ததில்லை என்பதும் அவர்கள் மீது தான் குறை பட்டுக்கொண்டாலும் அவர்கள் பாதுகாப்புக்குள்தான் இதுவரை இருந்திருக்க்கிறோம் இதை உணர உணர அப்படியே தூங்கி போனான்.
செல் போன் சத்தம் கேட்டுத்தான் விழிக்க முடிந்தது. தூக்க கலக்கத்தில் எடுத்து காதில் வைத்தான் அப்பா எப்படிடா இருக்கே? அதற்குள் அம்மாவின் சத்தம் கேட்டது. கொண்டாங்க போனை என்று பிடுங்குவதும், கார்த்தி நல்லா தூங்கினியாடா? எங்களுக்குத்தான் இங்க தூக்கமே வரலை. ஆதங்கமாய் ஒலித்தது. கொடும்மா போனை என்று அக்காவின் குரலும் கேட்டது. ஹலோ.கார்த்தி எப்படிடா போச்சு கிளாஸ் எல்லாம்? குரலில் அக்கறை. அவனை பொருத்தவரை ஒன்று உறைத்தது.
இனி எதிர்காலத்தில் சூழ்நிலைகள் காரணமாக இவனும் அக்காவும் இந்த குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். என்றாலும் இதன் தொடர்ச்சியாக “பாசம்” என்னும் இழைகள் கண்ணுக்கு தெரியாமல் வாழையடி வாழையாக இருந்து கொண்டுதான் இருக்கும். அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டது அவர்களின் அன்பின் வெளிப்பாடாய் கூட இருந்திருக்கலாம் அக்கா கூட இவனிடம் சண்டை போட்டது அவன் மீது உரிமை கொண்ட பாசமாக இருந்திருக்கலாம்.
இப்பொழுது அவனுக்கு ஒரு உண்மை தெளிவானது. அன்று சாப்பாட்டை குறை சொல்லி எழுந்ததன் காரணம் அம்மா அன்று குறைவாக சமைத்திருப்பதாக சொன்னது ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு ஒரு பங்கை வைப்பதற்காக கூட அவர் அந்த சண்டையை நடத்தியிருக்கலாம். அம்மாவுக்கு “டாடா சொல்லு” என்பது அவர் தன் மனைவியிடம் விடை பெற அவனை ஒரு கருவியாக கூட வைத்திருக்கலாம். இதை அம்மாவும் கூட எதிர்பார்த்திருக்கலாம்.
இப்பொழுது வீடு அவனுக்கு சொர்க்கமாய் தெரிந்த்து.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Oct-19, 3:36 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 199

மேலே