மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி
அப்பா இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் வருகிறார். கூடவே அம்மாவும்.வருகிறாள். இயல்பாய் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். பழைய காலத்தை பற்றிக்கூட பேசிக் கொண்டிருக்கிறோம். அவருடன் பணி புரிந்தவர்களை பற்றியும், வேலை செய்யும்பொழுது நிகழ்ந்த ஏதேனும் நினைவுகளை பற்றி சாவாதானமாக என்னுடன் உரையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் ஏதோ சொல்ல வருகிறார். அது மட்டும் சரியாக கேட்கமாட்டெனென்கிறது.
திடீரென விழிப்பு வரும்போது யாருமில்லாமல் மனசு கனத்து போகிறது.திரைப்படத்தில் மூன்று மணி நேரம் முடிந்த பின்னாலும் திரை பிம்பம் ஆடுவது போல மனசுக்கு படுமே. அது போல விழித்த பின்பும் மனசு இருவரையும் சலனப்படமாக காட்டி நன்கு விழிப்பு வந்தவுடன் நினைவில் இருந்து மறந்து போகின்றது. கனவில் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் அளவுக்கு உயிருடன் இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தோமா என யோசித்து பார்க்கிறேன்.
பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது வரை அவர்களுடன் நன்கு பேசிக்கொண்டிருந்த ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னால் நான் பெரியவனாகிவிட்டேன் என்ற எண்ணம் மனதில் குடி வந்த பின்னால் தள்ளி நின்றே இருவரிடமும் பேசியது ஞாபகம் வருகிறது.. அப்படியானால் அந்த சிறு வயது தோற்றம்தான் இப்பொழுது கனவாக இந்த எழுபதில் வருகிறதா
அப்படியுமிருக்கலாம். ஏனென்றால் அவர்கள் இருவரும் தெளிவாக தெரியும் அளவுக்கு நான் என் கனவில் தெரிவதாக தெரியவில்லை. நாற்பது வயது வரை கனவு வந்தால் அம்மாவிடமே கேட்பேன். அவர்கள் ஏதேனும் சொல்வார்கள். மனதுக்கு இதமாய் இருக்கும். இப்பொழுது யாரிடம் கேட்பது?
அம்மாவிடம் பேசும் அளவுக்கு அப்பாவிடம் பேசியிருப்போமா? அவருக்கு என்னைப்போல நான்கு உருப்படிகளை படிக்க வைக்க, உண்ண, ஆடை தைக்க, இப்படி வரிசை வரிசையாக வந்து குரல் வளையை நெறீத்து கொண்டிருக்கும். ஒவ்வொன்றாய் விலக்கி ‘அப்பாடி’ என்று கழுத்தை நீவும்போது அடுத்த செலவு கழுத்தை பிடித்து கொள்ளும். அப்பா கடன் கொடுத்த்வர்களிடம் பேசி பேசியே தவணைகள் சொல்லிவிடுவார். அதனால் அசல் என்றும் குறையாமல் வட்டி மட்டும் கட்டி வந்தார்.
ஒரு கட்டத்தில் கடன்காரர் அசலையும் தரும்படி நெருக்கும் போது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு நகை அதற்கு ஈடாக போகும். அக்கா பெரியவளான பின்னால் வீட்டுப்பொறுப்பை அம்மாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்டாள். முக்கி முணங்கி அம்மா அவளிடம் பொறுப்பை ஒப்படைத்தற்கு காரணம் எப்படியும் கலயாணமாகி போகிறவள்தானே, அதற்கு பிறகு பொறுப்பு தன் கைக்கு வந்து விடும் என்று நம்பிக்கை வைத்துத்தான்.
அக்கா மளீகை பொறுப்பை ஏற்ற பின்னால் குடும்பம் ஓரளவு நிமிர்ந்தது. காரணம் கொஞ்சம் சர்வதிகாரியாய், அதிகபட்ச செலவு என அவள் நினைத்தவைகளை குறைத்தாள். அப்பா அப்ப்டியே ஏற்றுக்கொண்டார். நானும் தம்பி தங்கை மூவரும் சத்தமில்லாமல் அக்காவின் ஆட்சியை ஏற்றுக்கொண்டோம். அம்மா தான் முக்கியம் என்று நினைத்தவைகளை அக்கா தள்ளுபடி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பி தீர்த்தாள். ஆனால் அவளுக்கு ஆதரவு கிடைக்காத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.
இப்பொழுது கடன்கள் குறைந்தது போலிருந்தது. அக்கா படிப்பை பிளஸ் டூவுடன் நிறுத்தி இருந்தாள். எங்களுக்கு கூட அவள் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாம் என்று தோன்றியது. அம்மாவின் பொறுப்பை ஏற்ற பின்னால் அவளும் சும்மா இருக்கவில்லை. வீட்டிலேயே தையல் மிஷின் கொண்டு துண்டுகளுக்கு ஓரம் அடித்து கொடுத்தல், போன்ற வேலைகளை செய்து வாரம் ஒரு தொகை சம்பாதித்தாள். ஆனால் அதில் சிறிதளவே எடுத்து எங்களுக்கு திண்பண்டங்கள் மட்டும் வாங்கித்தருவாள். மற்ற தொகைகளை கண்ணில் காட்ட மாட்டாள். அப்பாவும் எதுவும் கேட்க மாட்டார். அவரை பொறுத்தவரை சம்பளத்தை வாங்கி வந்து அக்காவிடம் கொடுத்து அம்மாவிடம் இருந்து வரும் ஏச்சு, பேச்சுக்களையும் கேட்டுக்கொள்ளும் வேலைகளை மட்டும் செய்தார்.
மனைவியிடம் பொறுப்பு இருந்தவரை கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. அது இப்பொழுது இல்லாததே அவருக்கு நிம்மதியாய் இருந்தது. நான்கு வருடங்கள் ஓடியிருந்தது. நானும் ஓரளவு கல்லூரி படிப்பு வரை வந்து விட்டேன். இந்த வருடத்துடன் முடிக்கப்போகிறேன்.
அப்பாவிடம் வயதின் தளர்ச்சி தெரிகிறது. அக்காவின் திறமை பற்றி சொந்தத்தில் தெரிய வர அவளுக்கு வரன் கூடி வந்தது. பையன் சாதாரண வேலை என்றாலும் அக்கா தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து சரி என்று சொல்லி விட்டாள். எங்களுக்குத்தான் கவலை வந்து விட்டது. அக்கா போய் விட்டால், மீண்டும் அம்மாவின் ஆட்சி வந்து விடும். எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கவலைதான். கல்யாணம் முடிந்தது..
குடும்ப ஆட்சித்தலைமை அம்மாவின் கைக்கு போய் ஒரு வருடம் முடிந்தவுடன் அப்பாவின் ஓய்வு, அவளுக்கு பெருத்த பின்னடைவாய் போய்விட்டது. நான் சம்பாத்தியத்துக்கு வந்திருந்தேன். அடுத்து தம்பியும் வருமானத்து வந்து விட்டான். எங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி ஓரளவு ஏற்பட்டு விட்டது.
அடுத்த மூன்று வருடங்களில் தம்பி கல்யாணத்துக்கு முந்திகொண்டு விட்டான். காதல் திருமணம். செலவுகளை ஏற்றுக்கொண்டேன். கலயாணம் நல்லபடியாய் நடந்தது. தொடர்ந்து அக்காவின் பிரசவ செலவுகள் வந்தன. அப்பொழுது சம்பாத்தியத்தில் இருந்த என்னால் கடன் வாங்கி செலவுகளை செய்ய முடிந்தது. அப்பா கவலையுடன் என்னை பார்த்தார். அம்மா வழக்கம்போல என் சம்பளத்தை வாங்கி அதிகாரத்தை வைத்துக்கொண்டாள். நான் அப்பாவைப்போல கடன்கார்ர்களுக்கு பதில் சொல்ல பழகிக்கொண்டேன்.
என் திருமண பேச்சை அப்பாதான் எடுத்தார். அம்மா ஒரே பேச்சில் மறுத்து விட்டாள். தங்கச்சிக்கு முடிச்சுகிட்டு அவன் தாராளமாய் செஞ்சுக்கட்டும். தங்கை என்னை கவலையுடன் பார்த்தாள். அப்பொழுதுதான் கல்லூரி வாசலுக்கே நுழைந்திருந்தாள். படிக்கவேண்டும் என்ற கனவே அவளிடம் இருந்தது. எங்கே இவனுக்கு கல்யாணம் செய்ய வேண்டி, அவசரத்தில் தனக்கு கல்யாணம் பேசி விடுவானோ என பயந்தாள்.. நான் அவளுக்கு தைரியம் சொன்னேன். நீ உன் விருப்பம் போல் படி. என் கல்யாணத்துக்கு நான் அவசரப்படவில்லை.
ஆரோக்கியமாய் தெரிந்த அம்மா திடீரென உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் சேர்ந்து செலவான தொகை மேலும் என்னை கடன் என்னும் புதை குழியில் தள்ளியது. தங்கை கல்லூரி படிப்புடன் கூடவே குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாள். நான் என் சம்பளத்தை அவளின் கையில் கொண்டு வந்து கொடுக்கும் இயந்திரமாய் ஆனேன்.
இப்பொழுது நாற்பதை தொட்டு விட்டேன். இரு முறை “ஹார்ட் அட்டாக்” வந்து பிழைத்த அப்பா மூன்றாவது முறை போய் சேர்ந்து விட்டார். அம்மாவும் அதற்கு பின்னால் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்கவில்லை. தங்கை ஒரு வழியாய் எல்லா படிப்பையும் முடித்து கல்யாணத்துக்கு சம்மதிக்குபோது நான் நாற்பத்தைந்தை தாண்டி விட்டேன்.
அவளின் விருப்பப் படியே அவளுடன் பணி புரிந்த ஒருவருக்கு மணம் செய்து வைத்தேன். அதற்கு அக்காவின் குழந்தைகளும் தம்பியின் குழந்தைகளும் கல்லூரி செல்லும் பருவம் வந்து விட்டனர். அக்கா அவளின் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை இருந்தால் பார்க்க சொல்லி என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது நானே சமைக்க பழகி விட்டேன். காலையில் வீடு கூட்டி பாத்திரம் கழுவி வைக்க மட்டும் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து கொண்டேன். அவ்வப்பொழுது அக்காவின் குழந்தைகள் வீட்டிற்கு வந்து தங்கி செல்வர். பணியில் இருந்து ஓய்வும் கொடுத்து விட்டனர்.
அக்காவின் குழந்தைகளும் நல்லபடியாக அவரவர்கள் குடும்பத்தை அமைத்துக்கொண்டனர். எனக்கு இப்பொழுது வெளீயில் அதிக வேலை இல்லாததால் வீட்டுக்குள்ளேயே இருக்க பழக்கிக்கொண்டேன்.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் அப்பா வருகிறார். கூடவே அம்மாவும் வருகிறாள். அப்பா ஏதோ என்னை பார்த்து சொல்லிகொண்டேயிருக்கிறார். என்ன பேசுகிறார் என ஒரு முறை உற்றுக்கேட்ட பொழுது :”உன் வாழ்க்கையை தொலைத்துவிட்டேனே”” என்று சொல்வது காதில் கேட்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Oct-19, 10:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : mezhuguvarthi
பார்வை : 284

மேலே