பாய்நீல் இருளிழையார் வீழ்வார் மேற்பால் ஆக்கார் – இன்னிலை 2

இன்னிசை வெண்பா

பொருள்விழைவார் போற்றார் உடனலம் நம்மை
அருள்விழைவார் அஃதே முழுவெவ்வம் பாய்நீல்
இருளிழையார் வீழ்வார்மேற் பாலாக்கார் ஆமா(று)
அருளிழையார் தாமும் அது. 2

- இன்னிலை

பொருளுரை:

செல்வப் பொருளைச் சேர்க்க விரும்புவோர் தம் உடல்நலத்தைப் பேணார். நம் இறைவனருளைப் பெற விரும்புவோர் இயற்கையும் அதுவேயாம்.

துன்ப முழுவதும் பரவுதற்கு ஏதுவாய நீல நிறமான இருண்ட வளையலை யணிந்த மங்கையர் இன்பத்தை விரும்பியவர் முத்திக்குரிய செயல்கள் ஒன்றும் செய்யார். தம்மாலியன்றவாறு பிறவுயிர்கள் மேல் அருள் புரியாதவர் நிலைமையும் அதுவே ஆகும்.

கருத்து:

செல்வப் பொருளை விரும்புவோரும், இறைவனருளை விரும்புவோரும் உடல் நலம் பேணாமல் எப்போதும் உழைப்பார்.

மாதர் சிற்றின்பத்தை விரும்புவோரும், பிறவுயிர் மேல் அருள் புரியாதவரும் முக்திக்குரிய செயல் புரியார்.

விளக்கம்:

மேன்மேலும் பொருளீட்ட விரும்புவோர், காடு, கடல் இவற்றைக் கடந்து சென்று தங்கியும், பனியால் நனைந்தும், வெயிலால் வெம்பியும் பகலிரவென்று கருதாமல் உண்ணாமலும் உறங்காமலும் உழைப்பார் ஆதலால் "பொருள் விழைவார் உடல் நலம் போற்றார்" என்றார்.

மலை,வனங்கள் தோறும் வீணாகவும் அலைந்து அலைந்து மிகு தனம் சேர்ப்பதுவே விரதமாக, ஊணாசை காய், கனியாய் உடுப்பதும் ஓர் முழத் துண்டாய்" என்ற அடிகள் பொருளீட்டுவார் உழைப்பைப் புலப்படுத்துகிறார்.

இறைவனருளைப் பெற விரும்புவோரும், விரதம், நோன்பு புரிந்து இரவும் பகலும் இறைவனையே நினைந்து நினைந்துருகிப் பாடிப் பரவசமாய் உரிய காலத்து உண்பதும் உறங்குவதும் இன்றி அழுதும் தொழுதும் அவனடியே பற்றி வாழ்வர். ஆதலால் "அருள் விழைவார் அஃதே" என்றார்.

நீல் என்ற அடையால் இழையார் என்பதற்கு வளையலை யணிந்தவர் எனப்பொருள் கூறப்பட்டது. மேற்பால் - முத்தி. எல்லாப் பதங்களிலும் மேலானது. ஆதலின் முத்தியை விரும்புவோர், சிற்றின்பத்தை வெறுத்துப் பிறவுயிர் மேல் அருள் செய்ய வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-19, 1:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே