மேகம் புறப்பட்டது

இதுவும் மேற்பாட்டினைப் போன்றதே. தம்மைக் கவிஞர் தண்டிகைப் புலவர்கட்கு அறிமுகப்படுத்துகின்றார்.

கட்டளைக் கலித்துறை

கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலி(ன்)மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்வைத்த வன்கவிதை
மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கிமின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்ப(ட்)டதே. 5

- கவி காளமேகம்

பொருளுரை:

கடலானது கழியிடத்தே கொண்டு தள்ளிய உப்பு என்னுமாறு போல நல்ல நூற்களாகிய கடலிடத்தே முகந்து கொண்டு, அருவிகள் வழியும் பொதிய மலையிடத்தே காலிட்டுப் பெய்து, வன்மையான போலிக் கவிதைகளைச் சொல்லித் திரிகின்ற புலவர்களின் உள்ளத்தே அடித்தும் முழக்கியும் மின்னலிட்டும் பெய்து நிறைப்பதன் பொருட்டாக உண்மைக் கவியாகிய காளமேகம் என்பது இப்போது புறப்பட்டிருக்கிறது.

கால் வைத்தால் காலிட்டுப் பெய்தல்: பொதியத்திலே கால் வைத்த பின் காளமேகமாகி அது எங்கும் மழைபொழியப் புறப்பட்டதென்க.

இதனால் பொதியத்தின் சிறப்பும் புலப்படும். காளமேகத்தின் சிறப்பும் புலப்படும்.

காளமேகம் - கார்மேகம். வன் கவிதை - பொருள் இனிமையற்ற வறட்டுக் கவிதை,
இடித்தல் - இடித்துக் கூறல், முழங்கல் - முழக்கம் செய்தல். மின்னல் - ஒளிபரப்புதல்.

போலிப் புலவர்களின் வறண்ட உள்ளங்களிலே கவிமழை பொழிந்து வளப்படுத்தக் கார்மேகம் புறப்பட்டது என்கிறார் கவி.

இதனால், தம் ஆற்றலையும் அதிமதுரம் முதலியோரின் போலித்தன்மையையும் காட்டினர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-20, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 113

சிறந்த கட்டுரைகள்

மேலே