வால் எங்கே
திருமலைராயன் அவையிலிருந்த சிலர் தம்மைக் கவிராயர்கள் என்று கூறிச் செருக்குடன் வீற்றிருந்தனர். அப்போது, அவர்களை ஏளனமாகச் சுட்டிப் பாடியது இச் செய்யுள்.
நேரிசை வெண்பா
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால். 10
- கவி காளமேகம்
பொருளுரை:
நாடாள்வோர் மிகுதியாகப் போற்றுகின்ற புலவர்களே! நீங்கள் கவிராயர்களாக (குரங்குத் தலைவர்களாக) இருந்தவிடத்து நும்முடைய வால்கள் எங்கே போயின? நீண்ட வயிறுகள் எங்குச் சென்றன? முன் பாகத்தே இருக்கவேண்டிய இரண்டு கால்களும் எங்கே? உள்ளே குழிந்ததாயிருக்கும் கண்கள் எவ்விடத்தே போயின? (கவி குரங்கு வட சொல்லான கபி யின் தமிழ் அமைப்பு)
(ஆகவே; நீங்கள் கவிராயர்கள் அல்லர். நீங்கள்பொய் பேசுபவர்கள்’ என்று கூறி, அவர்களை நகையாடிய தாயிற்று.