குதிரை குதிரை
அதிமதுரக் கவிராயர் குதிரையேறி வர அந்தக் குதிரையைப் பாடியது.
நேரிசை வெண்பா
கோக்குதிரை நின்குதிரை! கோவ(ன்)மது ரா!வொன்னார்
மாக்கு திரையெல்லா மண்குதிரை! – தூக்குதிரை!
துங்கற் கரைக்குதிரை சொக்கன் குதிரைசது
ரங்கக் குதிரைகளே யாம். 11 - கவி காளமேகம்
பொருளுரை:
திருக்கோவலூரான் ஆன அதிமதுரமே!
நின் குதிரைதான் ராஜா பவனி வரும் குதிரை;
நின்னைப் பகைத்தோரின் பெரிய குதிரைகள் எல்லாம் மண் குதிரைகள்,
தூ தூ அவையும் குதிரைகளா? ஒரு தூங்கல் குதிரைக்கும் கூட அரைவாசியே சொல்லத்தகும் குதிரைகளாக அன்றோ இருக்கின்றன,
சொக்கநாதர் குதிரையாகக் கொணர்ந்த நரிகள்தாம் அவை;
சதுரங்க ஆட்டத்திற் பயன்படுத்தப் படும் காய்களான குதிரைகளே அவை ஆகும்.
பின் ஒரு சமயம், அதிமதுரக்கவி ஏறிவந்த குதிரையைப் போற்றிக் கூறுவது இது; அவரைப் பாராட்டாமல், அவர் குதிரையைப் பாராட்டியதாகக் கொள்க. இதனால் 'போற்றத் தகுந்தது குதிரையே அல்லாமல், அதன்மேல் ஊர்ந்துவரும் நீர் அன்று என்று அதிமதுரத்தைப் பழித்தலையும் கவிராயர் இதன் மூலமாகச் செய்கின்றார்.