163 சிற்றின்ப ஆசையால் செய்பாவம் வீட்டில் தீயிடலாம் – பரத்தமை 7
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)
நிலையில்சிற் றின்பத்தின் நேயத் தால்தினம்
அலைவுசெய் பவந்தனை ஆற்றல் கொள்ளியால்
தலையினைச் சொறிதலுந் தகிக்குந் தீயினை
எலியினுக் கஞ்சியில் லிடலும் எய்க்குமே. 7
– பரத்தமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நிலையில்லாத சிற்றின்ப ஆசைக்காக நாள்தோறும் நிலைத்த துன்பம் தரக்கூடிய பாவத்தைச் செய்வது, தலையினைக் கொள்ளிக் கட்டையால் சொறிவதற்கும், எலிக்குப் பயந்து வெப்பம் மிகுந்த எரியும் தீயினால் வீட்டிடைக் கொளுத்துவதற்கும் ஒப்பானதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அலைவு - துன்பம். தகித்தல் – வெப்பம் மிகுதல், சாம்பராக்குதல். இல் - வீடு. ஏய்க்கும் - ஒக்கும்.