குமரேச சதகம் - மூதேவி வாழும் இடங்கள் - பாடல் 36
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சோரமங்கை யர்கள்நிச முரையார்கள் வாயினில்
சூதகப்பெண் கள்நிழலில்
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம்
சுடுபுகையில் நீசர்நிழலில்
காரிரவில் அரசுநிழ லில்கடா நிழலினொடு
கருதிய விளக்குநிழலில்
காமுகரில் நிட்டையில் லாதவர் முகத்தினில்
கடுஞ்சினத் தோர்சபையினில்
ஈரமில் லாக்களர் நிலத்தினில் இராத்தயிரில்
இழியுமது பானர்பாலில்
இலைவேல் விளாநிழலில் நிதமழுக் கடைமனையில்
ஏனம்நாய் அசம்கரம்தூள்
வாரிய முறத்தூள் பெருக்குதூள் மூதேவி
மாறா திருப்பளென்பர்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 36
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
பிற ஆடவரைக் கூடும் பெண்களிடத்தில், உண்மை யுரையார் வாயில், வீட்டுவிலக்கான பெண்களின் நிழலில், சூளையில் உண்டாகும் புகையில், பிணஞ்சுடம் புகையில், இழிந்த குணமுடையோர் நிழலில்,
கரிய இரவில், அரசமரத்தின் நிழலில், எருமைக் கடாவின் நிழலில், நினைக்கத்தக்க விளக்கின் நிழலில், காமங் கொண்டவரிடத்தில்,யோகப்பயிற்சி யில்லாதவர் முகத்தில், கொடிய சீற்றமுடையோர் கூட்டத்தில்,
ஈரம் தங்காத உவர் நிலத்தில்; இரவில் உண்ணப்படுந் தயிரில், இழிந்த கள் குடியரிடத்தில், இலையையுடைய வேல மரத்தின் நிழலில், விளாமரத்தின் நிழலில், எப்போதும் அழுக்கடையும் வீட்டில், பன்றி, நாய், ஆடு, கழுதை ஆகிய இவைகளின் கழிவில், முறத்தில் வாரிய தூளில், பெருக்கும் குப்பையில் மூதேவி விலகாது இருப்பாள் என்பார்கள்.
அருஞ்சொற்கள்:
களேபரம் - பிணம். நிட்டை: மனம் ஒருப்பட இருக்கும்நிலை.
ஏனம் - பன்றி. அசம் - ஆடு. கரம் - கழுதை.