துகளதிகாரம்

"ஆகா அழகான கவிதை"யென்கிற எண்ணவோட்டம்
இப்படியும் எழுதலாமே என மடைமாறும் போது
கருத்தரிக்கிறது புதுக்கவிதை!
*************************************************************************
பசித்து வயிறு காய்ந்தவனின் பக்கத்துவீட்டில்,
மிஞ்சியது காய்ந்து கொண்டிருந்தது வத்தலாக!
*************************************************************************
தலையில் பூ வைத்துப்
பூ விற்கும் பூக்காரிகளை,
பூ வாங்கும்போதெல்லாம்
பார்த்ததாக நினைவில்லை!
*************************************************************************
ஒருவகையில் மழையின் ஒவ்வொரு துளியும் விந்துக்களே!
பூமியில் விழும்போதெல்லாம் பல கவிதைகள் கருவுருகிறது!
*************************************************************************
நிலவொளியில் யோசித்தேன்!
நிலவில்லா நாளில்
நிலவில்,
நிலவினொளி எப்படியிருக்கும்?
*************************************************************************
ஒட்டிய வயிறும்,
தட்டுமாய் உணவகத்தில் நின்ற கைப்பிள்ளைக்காரி
வசைகளைக் கேட்டு
அடுத்த கடைக்கு நடந்தாள்
வாசனையைப் பெருமூச்சில் நிறைத்துக்கொண்டே!
***********
இருந்தாலும்,இல்லாவிட்டாலும்
பார்க்கும்போதெல்லாம் அவரும் எனைப் பார்க்கிற உணர்வு
அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடி!
***********
சுகவாசிகளே!குப்பையில் போடுங்கள்
புதர்களில் தோரணமாக்காதீர்கள்
சீமைக்கருவைகளை ஆணுறைகள் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை!
***********
ஆளில்லா சாலையை
கேட் இல்லாமல் குறுக்கும்,நெடுக்குமாய்க் கடக்கின்றன ரயில் பூச்சிகள்!
***********
எப்போதும் முறைத்துக்கொண்டே திரியும் எதிர் வீட்டுக்காரியிடமிருந்து,
எப்போதாவது கிடைக்கும்
வினோத வாசனைத் தூறல் வரவேற்பு
கிழிந்ததுண்டில் தலை உதரும் போது!