வேணாம்வேணாம்வேணவே வேணாம்4 டாக்டர்

படப்பு அஞ்சு வருஷப் படிப்பு. அதுக்கப்புறம் இன்டெர்ன்ஷிப் டிரெயினிங். இதுலே கிராமங்களிலே போய் கட்டாயமா வேலை செஞ்சாத்தான் டிகிரின்னு வேறே சொல்றாங்க.
டாக்டருக்கு படிச்சா வெளிநாடு போகணும்னா கொறஞ்சது பத்து வருஷமாவது ஆகும். ஆனால் இஞ்சினீரிங் படிச்சா அஞ்சே வருஷத்துலே வெளிநாடு போகலாம்.
யாரும் இந்தக் காலத்துலே இவ்வளவு செலவு செஞ்சு இத்தனை வருஷம் படிச்சுட்டு ஹிப்போக்ரடீஸ் சத்தியம் எடுத்துட்டு மக்களுக்காக சேவை செய்யறதே மகத்தான சேவைன்னு வரதில்லை. மார்க் வாங்கி கவர்மென்ட் கோட்டாலே மெடிகல்சீட் கிடைச்சா பரவாயில்லை. ஆனால் அப்படிக் கிடைக்காதவங்க என்ன பண்ணுவாங்க? பல லட்சம் கொடுத்து மெடிகல் சீட் வாங்கி படிக்கிற டாக்டர்கள், தாங்க விட்டதைப் பிடிக்க வேணாமா ? அதுக்கு ஊர் உலகமே குய்யொ, முறையோன்னு கத்துது. சரி
அப்புறம் போட்ட பணம் என்ன ஆறது? அதனாலதான் கன்ஸல்டேஷன் ஃபீஸை ஏத்திடறாங்க, இல்லே நிறைய டெஸ்ட் எழுதிக் கொடுத்து அந்தந்த லேபரடரிகளிலிருந்து கமிஷன் வாங்கிக்கிறாங்க.எல்லாருக்கும் தெரிஞ்ச சமாசாரம் தான். இதைத்தடுக்க இப்ப நீட பரீட்சை வந்துட்டுது. ஆனா அதிலேயும் பிரச்சினை. நாங்க கிராமத்துலே போய் உக்காந்து வைத்தியம் பாத்தா கடனாளியாத்தான் சாக வேண்டியிருக்கும். சொன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.

ஆனால் இந்த வேலையிலே டெடிகேஷன் அதாவது ஆழ்ந்த உளமார்ந்த ஈடுபாடு இல்லேன்னா ஒரு நாள் கூட சந்தோஷமா இருக்கமுடியாது. எப்பப் பார்த்தாலும் உங்களைச் சுத்தி நோயாளிங்கதான். ஒரு சிரிச்ச முகத்தைக் கூட பார்க்க முடியாது. இப்படி ஒரு லைஃபை சாதா ஜனங்களாலே நெனச்சிக்கூடப் பார்க்க முடியாது. வீட்டுலே மனைவி குழந்தை குட்டிகளோட ஒரு நாள் சந்தோஷமா இருக்க முடியறதில்லை. ஊர் உலக விசேஷம், சொந்தக்காரங்க வீட்டு விசேஷம் இப்படி எதுலேயாவது கலந்துக்க முடியுமான்னா முடியாதுதான்.

போன இடத்துலே யாருக்காவது ஏதாவது ஆனா அங்கேயும் டாக்டர் வேலை செய்ய வேண்டி இருக்கு. இப்படித்தான் பஸ்,ரயில்.ஃப்ளைட்லே போகும்போது கூட எங்களுக்கு வேலை வந்துடும். இது என்ன பொழைப்புன்னு கொஞ்ச நாளிலேயே அலுத்துப் போயிடும். போதாததுக்கு இப்ப ஏதாவது மருந்து கொடுத்து அது கலப்பட மருந்தா இருந்து தொலைச்சதுன்னா முதல் ஆபத்து டாக்டருக்குத்தான். இல்லே. சரியான மருந்தாவே இருந்து வேறே ஏதாவது காரணத்துனாலே பேஷன்ட்டுக்கு காம்ப்ளிகேட் ஆனாலோ அல்லது நடக்கக் கூடாதது நடந்துட்டாலோ டாக்டர் பாடு திண்டாட்டம்தான். டாக்டருக்கே அடி விழும். அவருடைய டிஸ்பென்சரியையோ இல்லை ஆஸ்பத்திரியையோ அடிச்சி நொறுக்கிடு வாங்க. அவர் மேலே கேஸைப் போட்டு அவரை ஒரு வழி பண்ணிடுவாங்க.
இப்ப நான் கூட ஒரு கேஸுலே மாட்டிக்கிட்டு இருக்கேன்.

நம்ம ஊரிலே VIPக்களுக்கு ட்ரீட் பண்ணணும்னா அது அடுப்புக்குள்ளே தலைவிடறமாதிரி தான். ஏதாவது ஏடாகூடமா ஆயிப்போச்சுன்னா எங்க உசுருக்கே ஆபத்து. எங்க ஆஸ்பத்திரியையோ, டிஸ்பென்சரியையோ ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்காகத்தான் நான் எங்களாலே ட்ரீட் பண்ண முடியும்னாகூட, வம்பே வேணம்னு பெரிய மனுஷங்க உடம்பு சரியில்லேன்னா , அவங்களை ஃபாரின் போகச்சொல்லி ரெகமண்ட் பண்ணிடறோம்.

பேஷன்ட்ஸை க்யூலே உக்காரவெச்சி ஒவ்வொருத்தரா கூப்பிடுவோம். அப்பத்தான் ஒரு அர்ஜன்ட் கேஸ் வரும். அந்த கேஸைக் கவனிக்க அவங்களை உள்ளே அழைச்சா, க்யூலே வெயிட் பண்ற அத்தனை பேரும் அலறுவாங்க. இதுக்கு நடுவுலே மெடிகல் ரெப்ரசன்டேடிவ்ஸ் அப்பப்போ வந்து உள்ளே புகுந்துடுவாங்க. அவங்களுக்கு 5 நிமிஷம் கொடுத்தா, 50 நிமிஷம் எடுத்துப்பாங்க. வெளியிலே போங்கன்னு சொல்ல முடியாது. அவங்களை சீக்கிரம் வெளியே அனுப்ப, அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்ட வேண்டி இருக்கு. அவங்க கொடுக்கற ஸாம்பிள்களை வாங்கிக்கிட்டு அவங்களை அனுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிப் போடும்.

டாக்டராயிட்டா நிம்மதிங்கறதையே மறந்து விட வேண்டியது தான். அது மாத்திரமில்லை.
கடைசி நிமிஷத்துலே வேக வேகமா உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கிற பேஷன்டை "டாக்டர் சார் நீங்கதான் காப்பாத்தணும்"னு கால்லே விழாத குறையா சொல்லுவாங்க. காப்பாத்திட்டா எங்களைக் கடவுள் சொல்லிக் கையெடுத்துக் கும்பிடுவாங்க. காப்பாத்த முடியாம போயிட்டுதுன்னா நாங்க யமனாயிடுவோம் அவங்களுக்கு. சொந்தக்காரங்க, ஊர்ஜனங்க எல்லாரையும் கூட்டி "டாக்டர் சரியா கவனிக்கல்லை, அதனாலேதான் பேஷன்ட் இறந்துட்டாரு" ன்னு சொல்லி பெரிய போராட்டம் நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. பேப்பருக்கெல்லாம் செய்தியை அனுப்பிடுவாங்க.

இப்ப கொரோனா வந்தாலும் வந்தது, மூச்சுவிடக்கூட நேரமில்லாம, அதுக்கான ஸ்பெஷல் டிரஸை மாட்டிக்கிட்டி , கையிலே கிளவுஸ், முகத்துலே ஸ்பெஷல் மாஸ்க், கண்ணுக்கு ஒருகிளாஸ் மாட்டிக்கிட்டு இந்த வெய்யில்லே வேர்க்க விறுவிறுக்க விடாம வேலை செய்யறதை நீங்க எல்லாம்தான் பாத்திருப்பீங்களே. கொஞ்சம் அசந்தாலும் அந்த கொரோனா எங்களைப் பதம் பாத்துடும். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலேயும், பேஷன்ட்ஸ் நாங்க சொல்றதைக் கேக்கல்லேன்னா, அது அவங்களுக்கு மாத்திரம் இல்லை, அவங்களைச்சுத்தி இருக்கிற அத்தனை பேருக்கும் ஆபத்து. இப்போ நாங்க தினந்தினம் செத்துப்பொழச்சிக்கிட்டிருக்கோங்கறதுதான் உண்மை.

இதெல்லாம் பப்ளிக்குக்குத் தெரியாது. நாங்க என்னவோ மகாராஜா கணக்கா சொகுசா இருக்கிற மாதிரி நெனச்சிக்கிறாங்க. நாங்க வாங்குற ஃபீசுலே கெடைக்குற வரும்படிக்கு நாங்க இன்கம் டாக்ஸ் கட்டறதில்லைன்னை வேறே கம்ப்ளெயிண்ட் பண்றாங்க. எல்லாரையும் அப்படிச் சொல்லிட முடியாது. ஒரு சிலர் அப்படிப் பண்றது உண்மைதான். இருந்தாலும் எங்களுக்குக் கிடைக்கிற நேரமே ரொம்பக் கம்மிதான். அதுலே கணக்கு வழக்கு பாக்கிறதுக்கு எங்கே நேரம் இருக்கு சொல்லுங்க?

இந்த பத்திரிகைக்காரங்க, சினிமாக்காரங்க இவங்க எல்லாம் வேறே நாங்க "டெஸ்ட் லாப்" காரங்க கிட்டே இருந்து கமிஷன் வாங்கறோம். "சின்ன வியாதிக்கெல்லாம் நிறைய மருந்து எழுதித்தரோம், சாதரணமா ஆக வேண்டிய பிரசவங்களை எல்லாம் சிசேரியன் பிரசவமா மாத்திடறோம்"னு சொல்லி எங்களை நிம்மதியா இருக்கவே விடறதில்லை. எந்த நேரத்துலே என்ன ஆபத்து வருமோன்னு எங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்கு எங்க பொழப்பு. நீங்க சொந்த வாழ்க்கை, சொந்த பந்த எல்லாத்தையும் மறந்துட வேண்டியதுதான்.

போதுமடா சாமி. போதும். இந்த டாக்டர் பொழப்பு. என்னைக் கேட்டா வேணாம் வேணாம் இந்த டாக்டர் வேலையே வேணாம்னுதான் சொல்லுவேன். பேசாம இஞ்சினீரிங் படிச்சி ஃபாரின் போய் சொகுசா செட்டில் ஆறதை விட்டுட்டு டாக்டருக்குப் படிக்க வெக்கிறது வேஸ்ட். இல்லே. IAS ஆகலாம். அதுலே இருக்கிற த்ரில் இங்கே கிடையாது. நிச்சயமா நான் என் சன்னையோ டாட்டரையோ டாக்டருக்குப் படிக்க வைக்க மாட்டேன். வேணாம். வேணாம் வேணவே வேணாம் இந்த டாக்டர் வேலை.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (11-Jul-20, 3:32 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 83

மேலே