நஞ்சு தின்றதென்
தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடிப் பாற்கடலைக் கடைந்தனர். அந்த நாளிலே எழுந்த நஞ்சினைச் சிவ பெருமான் உண்டு அவர்களைக் காத்தார். அதனைக் குறிப்பிட்டு, 'அவர் தன் உயிரை விட்டுவிடுவதற்குக் கருதிப் போலும் அங்ஙனம் நஞ்சினை அருந்தினர்? என்று பாடுகின்றார் கவி காளமேகம்.
நேரிசை வெண்பா
கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லா லடித்ததற்கோ வெட்கினீர் - சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றறென்முன் நாள். 161
- கவி காளமேகம்.
பொருளுரை:
"சாக்கியன் உம்மைக் கல்லால் அடித்தானே அதற்காகவோ? கண்ணப்பன் உம்மைக் காலால் உதைத்தானே அதற்காகவோ? அருச்சுனன் உம்மை வில்லால் அடித்தானே அதற்காகவோ? எதற்காகவோ நீர் வெட்கமுற்றீர்? மேகங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க விளங்கும் உயரமான திருமதிலினை உடைய திருவானைக்காவில் சிவபெருமானே! நீர் முன் காலத்திலே நஞ்சுதனைத் தின்றீரே அது எதனால் என்பதனை எனக்குச் சொல்வீராக”
உலக வாழ்விலே வெறுப்பு ஏற்படும்போது, ஒருவர் நஞ்சினை உண்டு உயிரை விட்டுவிட முயல்வது இயல்பு, அதனை மனத்துட் கொண்டு, பெருமான் நஞ்சுண்ட செயலுக்கும் இப்படிக் காரணங்களைக் கற்பிக்கிறார் கவிஞர்.