யரரோ நான்

யாரோ நான்?
பிறப்புற்று
சில காலம் வரை
என்னோடு
எனக்குப் பழக்கம்!
அன்றோ இருந்தது
என் மன வீட்டுக்கு
வானம் கூரையாய்!
நட்சத்திரப் பூக்கொய்து
நாளும் தலை
சூடி மகிழ்ந்ததாய் அந்நாட்கள்!
நிறமிலாக் காற்றுக்கு
உருக் கொடுத்து
வேலி மீறிப் பாய்ந்ததாய்
உயிரின் இயக்கம்!
காலம் சுழன்றது
எனக்குள் யாரோ
என்னை அவனாய்
காட்டிக் கொள்ளும்
முயற்சியில் நான்!
சிலந்தி வலைத் தோரணம் கட்டி
ஒளிக் கரம் அறுத்து
அகண்ட மலையின்
குறுகிய வாயாய்
இருள் ஏற்றிய குகைக்குள்
வாசம் செய்கிறது மனது!
மணம் கொய்து
மலரும் பூக்களில்
இன்ப மாலை சூடி
செயற்கையின் இழை மூட்டி
இயற்கையாய்
விரிக்கிறது தன் பிம்பத்தை
வாழ்க்கை! !
சு.உமாதேவி