புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 43---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௩

421. சிறு கடைகளில் விலைபேசி வாங்கும் மனிதர்கள் யாவரும்
பெரும் கடைகளில் பதில் பேசாத ஊமைகள்.

422. மனிதன் எப்போதும் தன் குறைகளை ஒத்துக்கொள்வதில்
மனதின் உள்ளோ? புறமோ? கொஞ்ச நேரம் அடம்பிடிக்கவே செய்வான்.

423. எதையும் இதுதானே என்று அலட்சியமாய்க் கையாளாதே
அதுவே உன்னை வெற்றியின் பாதையை விட்டு விலக்கிவிடும்.

424. சூரியன் போல் உயரத்தில் இருக்கிறேன் என்ற திமிரில் அலையாதே
அந்தச் சூரியனையும் சிலநொடி விழுங்கி வாழும் சிறு பனித்துளி.

425. உலகில் எந்த ஒரு சக்தியாய் இருந்தாலும்
அழிவை ஏற்கும் பலவீனம் ஒன்றைப் பெற்றே இருக்கும்.

426. பாத்திரத்தின் வடிவத்திற்கு ஏற்ப உருவம் பெறும் நீரைப் போல்
தர்மம் தன் வடிவத்தைப் பல முகங்களில் காட்டும்
இருப்பினும் தர்மம் எப்போதும் தர்மத்தையே வடிவமாய்க் கொண்டிருக்கும்.

427. உலகில் பிறந்த மனிதர்களில்
ஒருவர் எதிர்கால நகர்வுக்கு உழைக்கிறார்
ஒருவர் நிகழ்கால நகர்வுக்கு உழைக்கிறார்.

428. உனக்கு ஒரு பொருள் கிடைப்பதற்குப்
பலபேர் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

429. நாளைக்கு இது கிடைக்கும் என்று வாழ்கிறான் பணக்காரன்
இன்றைக்கு எது கிடைக்குமோ? என்று வாழ்கிறான் ஏழை.

430. இன்றைய பொழுதில் பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவன்
நாளைய பொழுதைப் பற்றி சிந்திக்கும் நேரத்தை இழந்திருப்பான்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (5-Aug-20, 11:57 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 185

மேலே