ஓ மகாத்மாவே

மகாத்மாவே!
நீ
தீவீரவாதமெனும்
தீராதவாதமுற்ற
வெள்ளையனுக்கு
அகிம்சை எனும்
கோடாரித் தைலமிட்டாய்!
மார்பில் பதிந்த
கால் தடத்தை
அளந்திட்ட உன் கண்கள்
செய்தனவே
காலனி கொணர்ந்தவனுக்கும்
காலணியை!
உன் அரையாடை கொண்டு
முழு ஆடை சூட நினைத்தாயே
இந்தியாவின் ஏழ்மைக்கு!
மூச்சீற்றதை எட்டும் வரை
நூலிழைத்ததே
உன் இராட்டையின் கைகள்
வறுமையின் கிழிசல்களை
தைப்பதற்காய்!
எளிமை எனும் ஏணியிட்டே
ஏறி விட்டாய்
சுய ராச்சியத்தின் சிம்மாசனத்தில்!
இன்றோ
ரூபாய் நோட்டுக்களில்
பெரும் பணக்காரனாய்
உன் குடியிருப்பு!
ஆனால்
அதன் கையிருப்பு
இருக்கும் நாட்களில் மட்டுமே
உன் பொக்கை வாயால்
வரவழைக்க முடிகிறது
எங்களுக்குச் சிரிப்பு!
சு.உமாதேவி