குமரேச சதகம் – தன் இனத்தையே அழிப்பவை - கோடரிக்காம்பு - பாடல் 91

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்
கூர்இரும் புகளைவெல்லும்
கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்
கோத்திரம் எலாமழிக்கும்

நலமான பார்வைசேர் குருவியா னதுவந்து
நண்ணுபற வைகளை ஆர்க்கும்
நட்புடன் வளர்த்தகலை மானென்று சென்றுதன்
நவில்சாதி தனையிழுக்கும்

உலவுநல் குடிதனிற் கோளர்கள் இருந்துகொண்
டுற்றாரை யீடழிப்பர்
உளவனில் லாமல்ஊர் அழியாதெனச் சொலும்
உலகமொழி நிசம் அல்லவோ

வலமாக வந்தர னிடத்தினிற் கனிகொண்ட
மதயானை தன்சோதரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 91

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

(அரனை) வலமாகச் சுற்றிவந்து அவரிடம் மாங்கனிபெற்ற விநாயகரின் தம்பியே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

(இரும்பின்) குலமான சம்மட்டியும் குறடும் (கொல்லன்) கைக்குத் துணைபுரிந்து மிகுதியான இரும்புகளை அடக்கும்; கோடரியின் உள்ளே மரம் (காம்பாக) சேர்ந்து கொண்டு தன் மரபான மரங்களை ஒழிக்கும்;

அழகான பார்வைக் குருவி (தன்னைப் பார்த்து) வந்து அருகில் அமரும் பறவைகளைக் கட்டுப்படுத்தும்; அன்புடன் வளர்க்கப்பட்ட கலைமான் (காட்டில்) சென்று சொல்லப்படும் தன் இனத்தை அகப்படுத்தும்;

(பலருடனும்) பழகும் நல்ல குடியிலே கோளுரைப்போர் சேர்ந்து கொண்டு உறவினரின் மதிப்பைக் கெடுப்பர்; ’உளவுகூறுவோன் இல்லாவிட்டால் ஊர் கெடாது' என்று கூறும் உலகச்சொல் உண்மையன்றோ?

விளக்கவுரை:

‘பார்வை மிருகம்? - ‘பார்வைப் பறவை' என்பவை மனிதர்களாற் பழக்கப்பட்டு, அவற்றின் இனத்தைப் பிடிக்கப் பயன்படும்.

குறடு - பற்றுக்கோடு.

‘உளவன் இன்றி ஊர் பாழாகாது' என்பது பழமொழி. கோடரி என்ற சொல்லே ‘கோடாலி' என மருவியது.

கருத்து:

‘உளவன் இல்லாமல் ஊர் பாழகாது.'

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-20, 10:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 244

மேலே