மறவாத சாப்பாடு - கட்டளைக் கலித்துறை
ஸ்ரீரங்கத்தில் ஒரு வீட்டிற் சாப்பிட்ட கவிஞருக்கு, அந்த மனவேதனையினைத் தாங்கவே முடியவில்லை. அந்த சாப்பாட்டின் தன்மையை நினைத்து இப்படிப் பாடுகிறார்.
கட்டளைக் கலித்துறை
நீச்சாற் பெருத்திடுங் காவேரி யாற்றை நிலைநிறுத்திச்
சாய்ச்சா ளிலைக்கறிச் சாற்றையெல் லாமது தானுமன்றிக்
காய்ச்சாப் புளியும்நற் கல்லுடன் சோறும் கலந்துவைத்த
ஆச்சாளை யான்மற வேன்மறந் தான்மன மாற்றிடுமே? 192
- கவி காளமேகம்
பொருளுரை:
"வெள்ளத்தினாலே மிகுந்திடும் காவேரியாற்றைத் தடுத்து நிறுத்திக் கீரைச்சாற்றினை வெள்ளமாக என் இலையிலே சாய்த்தாள்; அதுவும் அல்லாமல் அந்தக் கீரைச் சாற்றிலிட்ட புளி கொதிக்கவும் இல்லை; அத்துடன் நல்ல கற்களோடு சோற்றையும் சிறிதே கலந்து இலையிலேயும் வைத்தாள். இப்படி எனக்கு உணவளித்த அந்த அம்மையை, யான் எந்நாளும் மறக்கவே மாட்டேன்; அப்படி நான் ஒருவேளை மறந்தாலும், என் மனம் அதனை என்றாவது மறந்திடுமோ?” மறவாதென்பது கருத்து.