என்ன பேர் வெக்கலாம்

பழைய காலத்துலே பிறக்கப்போற குழந்தைங்களுக்கு, அந்தக்குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே இப்ப மாதிரி எல்லாம் பேர் வெக்கிறதில்லே. பிறந்த பத்தாவது நாளிலோ அல்லது அதன் புண்ணியாசன நாளிலோதான் பேர் வெப்பாங்க. இதனாலே அந்தக்குழந்தைங்களோட பிறப்புச்சான்றிதழ்லே அவங்களுடைய பேர் இருக்காது. அவங்க அப்பா அம்மா பேர் மாத்திரம்தான் இருக்கும். அந்த வீட்டுப்பெரியவங்க, அதாவது பிறக்கப்போற குழந்தையோட தாத்தா, பாட்டி இல்லே, அவங்களுக்கு சீனியர்கள்தான் பேர் வெப்பாங்க. அநேகமா பலருக்கும் அவங்களோட தாத்தா அல்லது பாட்டியோட பேர்தான் இருக்கும். அல்லது பெரிய தாத்தா, பெரிய பாட்டியோட பேர் இருக்கும். எனக்கு என் தாத்தா வெச்ச பேரு எங்க அப்பாவுக்கு நான் SSLC படிக்கும்போதுதான் தெரியும்னா பாத்துக்குங்களேன்.
ஆனா இன்னிக்கி அப்படி இல்லே. பசங்களா, அதாவது, பையனும், பொண்ணுமாப் பாத்து அவங்க குழந்தைக்கு வெக்கிற பேர்தான். பெரியவங்க இதுலே குறுக்கிடக்கூடாது. புதுசு புதுசா ரொம்ப மாடர்னா பேர் வெக்கறதுலே இப்ப ஆர்வம் ஜாஸ்தி ஆயிட்டுது. சினிமாவுலே வர பேருங்க எல்லாம் இப்ப வீட்டுக்குள்ளே புகுந்துட்டுது.
ஆனா காலாகாலமா குழந்தைக்குப்பேர் வெக்கிறதுலே ஒரு பிரச்சினை இருந்துகிட்டுத்தான் இருந்திருக்கு.
சமீப காலமாக குழந்தைக்குத்தாத்தா, பாட்டி பேரை வெக்கறதுலே ஒரு பிரச்சினை இருக்கு. என்ன பிரச்சினைங்கிறீங்களா?
ராமுங்கிற ராமமூர்த்திக்கும், காஞ்சனமாலாங்கிற மாலாவுக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதுக்குப் பேர் வெக்கறதுலே ஒரு பிரச்சினை ஆரம்பம் ஆச்சு. குழந்தைக்குப்பாட்டியின் பேரை வைக்கவேண்டும் என்று சொந்தக்காரங்க சொன்னாங்க. ஆனா எந்தப் பாட்டியோட பேரை வெக்கிறதுன்னு ஒரு குட்டிப் பிரச்சினை.
ராமுவோட அம்மா மீனுங்கிற மீனாட்சி பாட்டி. ராமு எங்க அம்மா பேரை வெக்கிறதுதான் சரி அப்படின்னான். ராமுவோட அம்மா மீனாட்சியும்
‘நம்ம வம்சப்பாட்டியோட பேரை வெக்கறதுதான் சம்பிரதாயம், வழக்கம். அதான் முறை’ன்னு சொன்னாள்.அ
ஆனா மாலா இந்தக்காலத்துப்பொண்ணாச்சே.
‘எங்க அம்மா காமுங்கிற காமாட்சி பாட்டிப் பேரைத்தான் வெக்கணு’ம்னு ஒத்தக்கால்லே நின்னா.
மீனாட்சி அம்மா விட்டுத்தரதா இல்லே. ராமு எவ்வளவு கெஞ்சியும் மாலாவும் விட்டுத்தரதா இல்லே. கடைசியிலே சம்பிரதாயம்தான் ஜெயிச்சுது. குழந்தைக்கு மீனுங்கற மீனாட்சி பேரையே வெச்சாச்சு. கூப்பிடறதுக்கு வேறு பேர் ஏதாச்சும் வெக்கலாம்னா, மீனாட்சிப்பாட்டி அதுக்கு ஒத்துக்கல்லே.
“மீனாட்சிங்கற பேரே நல்லா இருக்கு. மீனாட்சிக்கு மிஞ்சின பேருமில்லே. மதுரைக்கு மிஞ்சினஊருமில்லே. அதனாலே அதுவே இருக்கட்டும். கூப்பிடறதுக்குத்தான் மீனுன்னு பேர் இருக்கே அது போதாதா?” அப்படின்னுட்டார்.
குழந்தையை தினமும் மாலா “மீனு கண்ணா, மீனு குட்டி”ன்னு கொஞ்சாத நாளே இல்லே. அதைக்கேட்டு ராமுவுக்கும், ராமுவோட அம்மாவுக்கும் அப்படி ஒரு சந்தோஷம். இப்படி மூணு வருஷம் போச்சு…….
……...
மீனாவுக்கு மூணு முடிஞ்சி நாலு வயசு ஆச்சு. அவளோட விஷமமும் அட்டகாசமும் நாளுக்கு நாள் விபரீதமா போக ஆரம்பிச்சது. மாலா நைசா பேசிப்பாத்தா. கெஞ்சிப்பாத்தா. குழந்தை கேக்கறதா இல்லை. விஷமம் ஜாஸ்தியாச்சே தவிர குறையறதாத் தெரியல்லே. அதுக்கப்புறம் சாமம், தானம், பேதம் எல்லாம் ஃபெயிலாகிப்போகவே குழந்தையை அடிக்கிறது என்று ஆரம்பித்தாள். அடிக்கும்போது “ஏண்டி தண்ட மீனாட்சி கழுதே, விஷமம் பண்ணினியோ கொன்னு போட்டுடுவேன் மீனாட்சி கழுதே” அப்படின்னு குழந்தையைத்திட்டும்போதெல்லாம், வார்த்தைக்கு வார்த்தை வெறுமே திட்டாமல் “மீனாட்சி கழுதே” ன்னு பெயரைச்சொல்லி மீனாட்சிக்கு ஒரு விசேஷ அழுத்தம் வேறே கொடுப்பா. நாளாக நாளாக, குழந்தைக்கு நித்யார்ச்சனை நடக்க ஆரம்பிச்சுது . ஒவ்வொரு தடவையும் மீனாட்சிங்கற பேரை அழுத்தம் ,திருத்தமா சொல்லாம அர்ச்சனை கிடையாது.

இது ராமுவுக்கு ஒரு மாதிரி ஆனது. மீனாட்சிப் பாட்டிக்கோ கேட்கவே வேண்டாம் . மாலா குழந்தையை வையறது அவங்க காதுலே ரொம்ப நாராசமாப்பட்டது.
“என்னை நேரடியாத் திட்ட முடியாமத்தான் மாலா குழந்தையை அந்த வை வையறா” ன்னு மீனாட்சிப் பாட்டிக்குத் தோண ஆரம்பிச்சுட்டுது. ஒரு நாள் தன் பையனிடம்
“டேய் ராமு. உன் பெண்டாட்டி செய்யறது கொஞ்சம்கூட நல்லா இல்லே. என்னை வையற சாக்குலே குழந்தை ஒண்ணும் செய்யாத போதே குழந்தையைத் திட்டறா. திட்டும்போது ஒவ்வொரு தரமும், மீனாட்சிங்கற பேரை அதிக அழுத்தமா சொல்றா. இதைப்பாத்தா அவ நெஜமாவே குழந்தையைத் திட்டற மாதிரி தெரியல்லே. என்னைத்தான் அந்த மாதிரி திட்டறா. அவளை நீ கண்டிச்சி வை”. என்றாள். ஆனால் அவனோ,
“ அப்படி ஒண்ணும் இல்லே. நீயே கற்பனை பண்ணிக்கிறே” என்று சமாதானப் படுத்தினான்.
இருந்தாலும் அவன் மனசுலே ஒரு மூலையிலே ஒரு சந்தேகம் இருக்கத்தான் செஞ்சுது.

ஆனால் ஒரு நாள் விடாமல் ராமுவை அவன் அம்மா தொந்திரவு செய்யவே ராமு
“நீதானே அம்மா, உன் பேத்திக்கு உன்பேரை வெக்கணும்னு சொன்னே. அதே அவ சொன்ன மாதிரி அவ அம்மா பேரை வெச்சிருந்தா, இந்தப்பிரச்சினையே வந்திருக்காது இல்லையா’’ என்று கேட்டான்.
‘ எனக்கு அப்போ அது தோணலைடா. இப்பத்தான்தெரியறது. வீட்டில் இருக்கிற பெரியவங்க பேரை குழந்தைக்கு வெக்கும்போது கூப்பிடறதுக்கு வேற பேரை ஏன் வெக்கிறாங்கன்னு’
இப்பவாவது புரிஞ்சிகிட்டியே. இப்ப என்ன செய்ய முடியும்?
இனிமே யாரும்தாத்தா பாட்டி பேரை வெக்கவே வேண்டாம் என்றாள் மீனு என்ற மீனாட்சிப் பாட்டி சோகக்குரலில்.

இது ஒரு சின்ன உதாரணம். அதனாலே தான் எனக்குத் தெரிஞ்ச இப்ப எல்லாரும் தாத்தா, பாட்டி பேரை சாஸ்திரத்துக்காக வைத்தாலும் கூப்பிடுவதற்கு தாத்தா, பாட்டியின் பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு புதுப்பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். .
*********
சாமிபேரை வெக்கிறது ஒரு காலத்துலே வழக்கமா இருந்தது. ஆனால் அழகா சாமி பேரை வெச்சா கூப்புடறதுலே பல பிரச்சினைங்க. ஸ்வாமி பேரை வெச்சிட்டி அந்தக்குழந்தையைத்திட்டமுடியாதில்லே. ஏண்டா கிருஷ்ணா, தடிப்பயலே என்றும், தண்டச்சோத்துத்தடிராமா என்று சொன்னா கேக்கறவங்களுக்கு என்னமோ மாதிரி ஆயிடும். கிருஷ்ணஸ்வாமி இல்லே கிருஷ்ணமூர்த்திங்கிற பேரை வெச்சிட்டு எந்த அப்பனாவது அம்மாவாவது அவனை அந்தப்பெயர் முழுசா சொல்லிக் கூப்பிட்டு இருப்பாங்களோ. நான் கடவுள் தலையிலே அடிச்சிச் சொல்றேன் கிடையாது. அந்தப்பேரை சுருக்கி, கிட்டு, கிட்டப்பா, கிட்டான்னு ஆக்கி இருப்பாங்க. வெங்கடராமன், வெங்கி ஆயிருப்பான், சுப்ரமணியன் சுப்பு ஆயிருப்பான். நடராஜன் நட்டு ஆயிருப்பான்,
ராமகிருஷ்ணன் ராம்கி இல்லே ராங்கி ஆயிருப்பான். கிருஷ்ணன், கிருஷ்ணாவாகவும், கண்ணன் கண்ணாவாகவும் ஆகியிருப்பாங்க. இது போல அன்ன பூரணி, அம்மணி ஆயிருப்பா. காந்தாமணி காந்து ஆயிருப்பா. சிந்தாமணி சிந்து ஆயிருப்பா. .ஷெண்பகவள்ளி ஷெண்பு ஆகி இருப்பாள் . கோமளவல்லி, கோமு ஆகி இருப்பாள். சரோஜா சரோ ஆயிருப்பா. ஆனா பூமா, பாமா, பாலா போன்ற பெயர்களை அதை விட சுருக்க முடியாத தாலே அந்தப்பேர்களெல்லாம் தப்பிப்பிழைச்சுடும்.

அப்படிப்பேர்களை வெக்கும்போது இன்னொண்ணை கவனமா பாக்கணும். அந்தப்பேரை நாளாவட்டத்தில் சுருக்கி அவன் அல்லது அவ ஸ்கூல்லே வேறு யாராவது கேலி செய்யறமாதிரியோ, திட்டற மாதிரியோ ஆகிடக் கூடாது. எதுவா இருந்தாலும் சில குழந்தைகள் வளர வளர அவங்க பேரோட முன்னாலே, ஒரு அட்ஜெக்டிவ் சேந்துடும். வாயாடி வனிதா, ஷோக் ஷோபனா, ஒல்லி ஒய்யாரி, குண்டு குணவதி, எலிவால் எலிசபெத், சோணங்கி சுப்பராயன், கருப்பு கண்ணன், திக்குவாய் தியாகு, இப்படிப்பல. வேறு சில பேருக்கு அவர்கள் பெயரே இல்லாமல் அட்ஜெக்டிவ்வே அடையாளமாகிவிடும். ஒன்றறைக்கண், ஒட்டடைக்குச்சி, கொத்தவரங்கா இப்படிப்பல. இதெல்லாம் ரொம்ப அநாகரிகங்கிறதை பசங்க புரிஞ்சிக்கிறது இல்லை. என்ன செய்யறது?

சிலபேர் எதையும் பேசும் போது இரட்டைக்கிளவி ஆக்கிவிடுவார்கள், சுப்பு-மப்பு, சந்தர்- பந்தர், ராஜு- கீஜு, இப்படி . எனவே பெரியவர்கள் குழந்தைக்குப் பேர் வைக்கும்போது அவர்களை மற்றவர்கள் கிண்டலடிக்கும் நிலை ஏற்படக்கூடாது.
ஒரு சினிமாப்படத்துல கூட என்ன பேரு வெக்கலாம், எப்படி வெக்கலாம் னு பாட்டு இருக்கு. ஆக பெயர் குழப்பம் ரொம்ப காலமாகவே உலகத்திலே இருக்கு.

இப்ப எல்லாம் பேர் வெச்சா அது தமிழிலேயும், இங்கிலீஷுலேயும் சரியா எழுதறதுக்கு வாகா இருக்கணும். சுவாமியிலே முடியற பேர் பல குழப்பத்தை உண்டு பண்றது. தமிழிலே சுவாமியா,ஸ்வாமியா, சாமியா என்பது பெரிய குழப்பம். நீங்க உங்க பேரை எந்ந ஸ்பெல்லிங் எழுதினாலும், நம்ம ஊர்லே அதை எல்லாம் கவனிக்கமாட்டாங்க .
அவங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் போடுவாங்க.

இப்படித்தான் நான் என் Ph D பட்டம் வாங்கின போது அந்த டிக்ரி செர்டிஃபிகேட்டில் Gurusami என்று போட்டு இருந்தது. நான் உடனே மதராஸ் யுனிவர்சிடி ரெஜிஸ்ட்ராரை அணுகி என் பெயர் Guruswamy என்பதற்குப்பதிலாக Gurusami என்று போட்டு இருக்கிறது. அதைத் திருத்த வேண்டும் என்றேன். அவரும் அத்தாட்சியாக உங்கள் S.S.L.C. புக்கை கொண்டுவாங்க. அதில் எப்படிப்போட்டிருக்கிறதோ அப்படியே மாற்றி விடலாம் என்றார். நானும் மிகுந்த நம்பிக்கையுடன் வீட்டில் இருந்த என் SSLC புத்தகத்தைப் பிரித்து என்பெயரைப் பார்த்தால் அதில் Guruswami என்று போட்டிருந்தது. என்னுடைய இன்டர்மீடியட் செர்டிஃபிகேட்டிலோ, டிகிரி செர்டிபிகேட்டுகளிலோ ஒன்றில் கூட நான் அப்ளிகேஷனில் எழுதிக்கொடுத்தபடி பெயர் போடவே இல்லை.

என் ரேஷன் கார்டில் குருசாமி என்றும், அதை ஆங்கிலத்தில் Kurusamy என்றும் போட்டிருந்தது. போய்க்கேட்டால் அங்குள்ள அலுவலர்கள்
“அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப் படறீங்க’ ன்னு சொல்லல்லை. ஆனா அதுக்குப்பதிலா ‘ஏன் எங்களைத்தொந்திரவு படுத்துறீங்க. இந்த கார்டைக்காட்டி ரேஷன் கிடைக்கல்லேன்னா அப்ப பாத்துக்கலாம்” என்றனர். இதே குழப்பம் பாங்க் பாஸ் புக்குகளிலும். அதெப்படி நாம் அவர்கள். கேட்டுக்கொண்டபடி அச்சு எழுத்துக்களில்( capital letters) கொட்டை கொட்டையாக எழுதியதைப்பார்க்காமல் அவர்களுக்குத் தோன்றிய ஸ்பெல்லிங்கை போடுகிறார்கள் என்பது இது நாள் வரையிலும் புரியாத புதிராக இருக்கிறது. பாங்க் அதிகாரியிடம் சென்று கம்ப்ளெயின் செய்த போது, அந்த அதிகாரி
‘எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்த மாதிரி சில்லி மிஸ்டேக்கெல்லாம் கண்டு பிடிக்கிற அளவிற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு நேரமில்லை’. என்றார்.
“செக்கில் தவறான ஸ்பெல்லிங் இருந்தால்செக் பாஸாகாது அல்லவா?” என்றதற்கு
“அது பாஸ் ஆகவில்லை என்றால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார். ஆனால் இதுவரையிலும் எனக்கு செக் பாஸாகாத ப்ராப்ளம் வரவே இல்லை.

அமெரிக்காவிற்குப்போகும்போது விஸா வாங்க அப்ளிகேஷன் பூர்த்தி செய்யலாம் என்று பார்த்தால் அதில் முதல் பெயர், இரண்டாம்பெயர், மூன்றாம் பெயர் என்று இருக்கவே ரொம்பவும் குழம்பிப்போனேன். நான் மாத்திரமல்ல. என்னைப்போல எத்தனையோ அப்பாவிகள். நம்ம ஊரிலே நாம் எல்லாம் அப்பாவின் பெயரை இனிஷியலாகப்போட்டு, நம் பெயரை எழுதுவது வழக்கம். இரண்டாவது பெயராக அப்பாவின் பெயரைக் கொடுப்பதா என்ன என்று புரியவில்லை. ( இப்போது மூன்றாவது பெயர் கேட்பதில்லை என்று நினைக்கிறேன்)
விஸா வாங்க அமெரிக்கன் எம்பசிக்குச்சென்ற போது ஆளுக்கு ஒரு டோக்கன் கொடுத்து உட்கார வைத்திருந்தார்கள். ஒவ்வொருவராகப் பெயர் சொல்லிக்கூப்பிட்டார்கள். திடீரென்று ராமச்சந்திரன் என்று கூப்பிட்டார்கள். யாரும் நகரவில்லை. எனவே மறுபடியும் ராமச்சந்திரன் என்ற பெயரை ஏலம்போட்டார்கள். யாரும் எழுந்திருக்கவில்லை. இவ்வளவு பொறுப்பற்று ஒரு நபர் அங்கே இருப்பதை நினைத்து நான் வெட்கப்பட்டேன். யாரும் எழுந்திருக்காததைக்கண்ட அந்தப்பெண்மணி கடைசியாக 54 என்ற டோக்கன் எண்ணைக்கூப்பிட்டார் அதுவரையில் அந்த மறதி ராமச்சந்திரனை சபித்தபடி இருந்த நான் என்கையில் இருந்த டோக்கனைப்பார்த்தவுடன் அது என் நம்பர் என்று தெரிய வரவே அந்தப்பெண்மணியை நோக்கி விரைந்தேன். அந்தப் பெண்மணியோ ஒரு நமுட்டுச்சிரிப்புடன் ‘என்ன உங்கள் பெயரே உங்களுக்கு மறந்து போச்சா? என்று கேட்டார். அப்பொழுதுதான் புரிந்தது நான் ராமச்சந்திரன் என்ற என் அப்பாவின் பெயரை முதற் பெயராகப்போட்டது. ஹி...ஹி என்று ஒரு வித அசட்டுச்சிரிப்பு, சிரித்து சமாளித்துக்கொண்டு விசா கேள்விகளை எதிர் நோக்கி உள்ளே நுழைந்தேன். இன்றும் என் சந்தேகம் என்பெயர் குருசுவாமி ராமச்சந்திரனா இல்லை ராமச்சந்திரன் குருசுவாமியா என்று. இப்படி எனக்கு மாத்திரமல்ல நம்ஊர்ப்பையன்கள் பலருக்கும் குழப்பமோ குழப்பம்.
நம் ஆட்கள் அமெரிக்கா சென்றவுடன் பலரும் முதல் வேலையாக தங்கள் பெயரை அமெரிக்கர்கள் எளிதாக உச்சரிக்கும்படி மாற்றிக்கொள்கிறார்கள். கிருஷ்ணன் என்பவர் கிருஷ் ஆவார். வாசுதேவன் வாஷ் ஆவார். புருஷோத்தமன் புருஷ் ஆவார். அந்தப் பிரச்சினை எனக்கு இல்லை. என்பெயரைச்சொன்னதும் ஒரு அமெரிக்கர் “ oh! That is a good name” என்று சொன்னார். இதில் விசேஷம் என்னவென்றால் அநேகமாக உலகம் முழுவதும் குரு என்ற பெயரும் ஸ்வாமி என்ற பெயரும் பிரபலமாகி இருப்பதுதான். இந்த இரண்டும் ஆங்கில அகராதியிலேயே இருப்பது அதற்கு ஒரு பிளஸ் பாயிண்ட். ஆனால் ஸ்வாமி இங்கிலீஷ் ஸ்பெல்லிங் மைனஸ்பாயிண்ட். ஆனாலும் நான் சபித்துக்கொண்டு இருந்த என் பெயருக்கு ஒரு கௌரவம் அமெரிக்காவில் கிடைத்தது.

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் கனவில் பெரும்பாலான பெற்றோர்கள் இருப்பதால் அமெரிக்கர்களுக்கு எளிதாக புரியும், அல்லது அவர்கள் வாயில் எளிதாக நுழையக்கூடிய பெயர்களையே வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வைக்கும் பெயர்கள் சமயத்தில் இந்தியர்களுக்கு மிகவும் புதிதாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
*******
சில இந்தியர்கள் அமெரிக்காவில் சந்திக்கும் பெயர் பிரச்சினைகள் வருமாறு
என்ன அப்பா, நீங்க எனக்கு வெக்க வேறே பேரே கெடக்கல்லியா உங்களுக்கு?

ஏண்டா, உன்பேருக்கு என்னடா வந்தது. பழனிசாமி நல்ல பேர்தானே. நம்ம குல சாமி வேறே.

இந்த சாமி பேர் வெக்கறது எனக்குப்பிடிக்கல்லே’. என்னைக்கேக்காமலே இந்தப்பேர் வெச்சுட்டே. (இவன் ஒரு பகுத்தறிவுப் பாசறையில் ஊறிப்போன பேர்வழி).
இப்ப அமெரிக்காவுலே ஒரு பய கூட என்பேரை சரியா சொல்லத்தெரியாம, மிஸ்டர் பளச்சாமின்னோ, பலசாமின்னோ சொல்றான். அவனை எவ்வளவு பாடுபட்டாலும் திருத்த முடியல்லே. கடைசியிலே விட்டுட்டேன், இது நம்மாலே முடியாதுன்னு விட்டுட்டேன்.

“வேணும்னா நம்ம ஊர் அரசியல் வாதிகள்போல நீயும் பேரை மாத்தி வெச்சிக்கவேண்டியதுதானே”.

“அந்த மாதிரி பேரை மாத்தி வெச்சிக்கிட்டு உங்களை அவமானப்படுத்த வேண்டாம்னு நெனச்சேன்”.

“நான் ஒண்ணும் தப்பா நெனச்சிக்க மாட்டேன். அப்படி மாத்தினா, என்ன பேரு வெச்சிக்கலாம்னு இருக்கே”.

“தமிழன்பன் னு மாத்திக்கலாம்னு இருக்கேன்”.

“என்னடா பேரு. தமிழன் பன், பிரெட்டுன்னு”

“அப்பா தமிழன் பன், பிரெட்டு இல்லே. தமிழ் அன்பன்”.

“ஏண்டா, பழனிசாமிங்கற பேரே வாயிலே நுழையாத போது இந்த, என்ன சொன்னே, என்ன சொன்னே, ஓ, இந்த தமிழன்பன் மாத்திரம் வாயிலே நொழஞ்சி கிழிச்சிடுமோ?”.

இப்படி பல மாணவர்கள் தங்கள் பெயரில் தங்களுக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். துணிச்சல் உள்ளவர்கள் பெயரை மாற்றிக்கொள்வார்கள். அரசியலில் இது இன்று ரொம்ப சகஜம்

இது வேறே ஒரு கேஸ்
“அப்பா, நீங்க இப்படி ஒரு பேரை வெச்சது எனக்கு எவ்வளவு பெரிய ப்ராப்ளமாப்போயிட்டுது தெரியுமா?”

“ஏன்டா, உன் பேர் நல்லாதானே இருக்கு கணபதி வெங்கடசுப்ரமணியன்னு”.

“நான் இவ்வளவு நீளமான பேர் போதாதுன்னு உங்க பேரையும் சேத்துப் போட்டுக்க வேண்டி இருக்கு லட்சுமி வேங்கடநரசிம்மன்னு. அப்ளிகேஷன்லே பேர் எழுதறதுக்குள்ளே கையெல்லாம் வலிச்சிப் போகுது. முழுப்பேரையும் சொல்றதுக்குள்ளே மூச்சு முட்டுது..

“அப்பா பேரை இனிஷியலாப்போடவேண்டியதுதானே. ஏன் முழுப்பேரையும் எழுதணும்?”

“அமெரிக்காக்காரன் அப்படித்தான் கேக்கறான்”.

“அதுக்கு நான் இப்ப என்ன பண்ணணுங்கறே?”

…இதுலே இங்கிலீஷ்லே நம்ம ஊருலேயே அஞ்சு ஸ்பெல்லிங், தமிழிலே நாலு ஸ்பெல்லிங். இதெல்லாம் நம்ம ஊரிலே ரொம்ப சகஜம். ஆனா அமெரிக்காக்காரன் ஒத்துக்க மாட்டான்.

“உன்னை அமெரிக்காவுக்கு அப்ளை பண்ணச்சொன்னது தப்பாப்போச்சு”.

இப்ப அமெரிக்காவுக்குப்போறவங்களுக்கு வேறே ஒரு பிரச்சினை. அதுதான் பர்த் செர்டிபிகேட். வயதானவங்க கிரீன் கார்டுக்கு அப்ளை பண்ணும் போது
‘உங்களைடைய சரியான பெயர், ஸ்பெல்லிங் ப்ரூ.ஃப், உங்க கல்யாண சர்டிபிகேட், பர்த் செர்டிபிகேட் எல்லாம் கேட்கிறார்கள். என்னை மாதிரி வயதானவங்களுக்கு கல்யாண மற்றும் பர்த் செர்டிபிகேட் நம்ம ஊரில் கிடைக்காது. அதுதான் நாம் பிறந்ததுக்கு அடையாளம் என்றால் நான் அவர்கள் கணக்குப்படி நான் பிறக்கவே இல்லை. அந்த செர்டிபிகேட்டுக்குப் பதிலாக பர்த்செர்டிபிகேட் “நாட் அவைலபிள்”( கிடையாது) என்று ஒரு செர்டிபிகேட் கொடுக்க வேண்டும். ரிஜிஸ்டிராரிடமிருந்து வாங்கிய கல்யாண செர்டிபிகேட் இல்லை என்றால் கல்யாணப் பத்திரிகையை காண்பிக்க வேண்டும். அதிலே வேறு பெயர் இருந்தால் மறுபடியும் குழப்பந்தான். உங்கள் கல்யாணத்தையும், உங்கள் பிறப்பையும் அறிந்த இரண்டு பேர்களிடம் ஒரு அஃபிடவிட் வாங்கி அதை சமர்பிக்கணும். இப்படி எவ்வளவோ குழப்பங்கள். பெண்களாக இருந்தால் க மு பெயர், க.பி பெயர்இது
( அது என்ன க.மு , க.பி.? கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின்)
இரண்டும் ஒருத்தரைத்தான் குறிக்கிறது என்பதற்கு ப்ரூஃப். அதனாலே பெரும்பாலான பெண்கள் கமு பேரையே வெச்சிக்கிறாங்க. அதைக் கல்யாணம் ஆன பின்பும் மாற்றுவதே இல்லை.
இந்தக்குழப்பங்களை எல்லாம் தவிர்க்க சிறந்த வழி அமெரிக்காவுக்குப் போகாம இருக்கிறதுதான்
************
இப்ப எல்லாம் குழந்த பிறப்பதற்கு முன்பே இண்டர்நெட்டைப்பாத்து ஸ்டைலிஷா பேர் வெக்கிறாங்க? இன்னும் சில பேர் நம்ம புராணங்களிலிருந்தும், விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரங்களில் இருந்தும், இது வரையிலும் யாரும் வெக்காத பேரை வெக்கிறாங்க. இந்தப்பேர் வெக்கிறது அந்தக்காலத்துலே பெரியவங்க தான் வெப்பாங்க. ஆனா இன்னிக்கி யாரும் எந்தப்பெரியவங்களையும் கண்டுக்கறதே இல்லை. இவங்க வெக்கிற பேருக்கு அப்பீலும் கிடையாது.

********
இந்தக்காலத்தில் தங்களுக்குக் கல்யாணம் ஆகும் முன்பே, கல்யாணம் ஆன பின் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், என்ன பேர் வைப்பது, பெண்ணானால் என்ன பேர் வைக்கலாம் என்பதை பல பெண்கள் தீர்மானம் செய்துவிடுவார்கள் போல் இருக்கிறது. தமிழ் பற்று மிக்கவர்கள், குழந்தைக்கு, தமிழரசன், தமிழரசி என்ற பேரை வைக்கிறார்கள்.. வேறு சிலர் நாகரிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில விசித்திரமான பேரை வைக்கிறார்கள். இன்னும் சிலர் குழந்தை ஃபாரின் போனால் , அவர்கள் வாயில் எளிதாக நுழையும்படி பேர் வைக்கிறார்கள். நம் கலாசாரத்தைப்பின்பற்றுபவர்கள் நம்முடைய கடவுள்களின் பெயரையே வைக்கின்றனர்.
அதிலேயும் சிலர் விஷ்ணு சகஸ்ர நாமத்திலிருந்து நமக்குப் பரிச்சியமாகாத பெயர்களாக பொறுக்கி எடுத்து வைக்கிறார்கள். மாடர்னாக இருக்கவேண்டும் என்பதற்காக நாகேஷ், மகேஷ், ரமேஷ், சுரேஷ், தினேஷ் என்று பேர்வைக்கிறார்கள்.

ஊர்ஊராக மாற்றல் ஆகும் குடும்பத்தினர் எந்த ஊரில் குழந்தைகள் பிறந்ததோ அந்த ஊர்க்கடவுளின் பெயரை வைப்பதுண்டு. மைலாப்பூரில் இருக்கும்போது பிறந்தால் பையனாக இருந்தால் கபாலி என்றும், பெண்ணாக இருந்தால் கற்பகம் என்றும், சிதம்பரமாக இருந்தால் நடராஜன் என்றும், சிவகாமி என்றும், மதுரையாக இருந்தால் சுந்தரேசன் என்றும், மீனாட்சி என்றும் இப்படிப் பெயர் வைக்கும் பழக்கம் ஒருகாலத்தில் இருந்து வந்தது. ஊர் பேரையே வைப்பது என்பது சில குடும்பங்களில் இருந்தும் வருகிறது. விருத்தாசலம், மதுரை, சிதம்பரம் என்று. ஆனால் டெல்லி என்று ஏன் பெயர் வைக்கிறார்கள் என்பது புரியவில்லை. சிலர் தங்களுக்குப்பிடித்த தலவர்கள் பெயரை வைப்பதைப்பர்க்கிறோம் காந்தி, நேரு, சுபாஷ், இந்திரா, ஜயலலிதா என்று. ஆனால் கணவன் ஒரு கட்சி, மனைவி வேறுகட்சியாக இருந்தால் மறுபடியும் பிரச்சினைதான்.
அப்போது இரு தலைவர்களின் பெயரின் கூட்டுப் பெயராக வைப்பார்களோ என்னவோ மைக்கேல் மதன காமராஜன் மாதிரி?

சில பண்டிகைகளின் போது குழந்தை பிறந்தால் கிருஷ்ணன் என்றோ, கணபதி என்றோ,
சூர்யா என்றோ, வரலட்சுமி என்றோ, சரஸ்வதி என்றோ அந்த நேரத்துக்குத்தகுந்த பெயர் வைப்பார்கள். இந்தக் கொரோனா ஊரடங்குனாலே பிறந்தவங்களுக்கு கொரோனா தேவன் என்றோ , கொரோனா தேவி என்றோ பெயர் வைக்கலாம். அடுத்த வருடம்நாம் நிறைய கொரோனா தேவன்களையும், தேவிகளையும் எதிர்பார்க்கலாம்.

சில பேருக்கு வைத்த பெயர் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடனும் அவர்கள் செய்யும் தொழிலுக்குத்தகுந்தாப்போல் அமைந்து விடுவதுண்டு. உதாரணமாக குருநாதன் ஆசிரியராகவும், வைத்திய நாதன் மருத்துவராகவும், கலை அரசு சிறந்த ஆர்டிஸ்டாகவும்,
நடராஜன் நடன ஆசிரியராகவும், கதிரேசன் ரேசே கதியாக இருப்பவராகவும், சிவகொழுந்து ஒரு சிவ பக்தராகவும் ஆவதுண்டு. அதேபோல பெயருக்கு நேர் மாறாக ஆரோக்கியசாமி ஆயுள்முழுவதும் நோயாளியாகவும், கண்ணன் கண் பார்வைக்கோளாறுடனும், வீரத்திருமகன் ஒரு கோழையாகவும், முடிகொண்டான் வழுக்கைத்தலையுடனும், கர்ணன் ஒரு கருமியாகவும் ஆவதுண்டு.
இன்னும் ஒரு சிலர் இந்த வம்பே வேண்டாமென்று தங்கள் தலைவரின் பெயரையே வைக்கிறார்கள். வேறு ஒருவர் தன் தலைவரின் பட்டப்பெயரையே தன்குழந்தைக்கு மக்கள் திலகம் என்று பெயர் வைத்துவிட்டார். இன்னொருவர் தன் குழந்தைக்கு ஏழை பங்காளன் என்று பெயர் வைத்துவிட்டார். கேட்டால் அப்படிப் பெயர் வைக்கக் கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று எதிர் கேள்வி கேட்டார். என்ன பேச முடியும்?

இப்போது குழந்தைக்குத் தாத்தா பாட்டிகள் பெயர் வைப்பதில்லை ஆயினும், கணவன்மனைவிக்குள்ளேயே குழந்தைக்குப்பெயர் வைப்பதிலிருந்து அது எந்தப் படிப்பு படித்து எந்த வேலைக்குப் போக வேண்டும் என்பதிலிருந்து தகராறு வந்து குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் கல்யாணம் டைவர்சில் முடிந்து விடுகிறது.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (19-Dec-20, 9:21 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 174

மேலே