புத்தாண்டு 2021

உலகுக்கு 2021 வது
படி ஏறி நின்றிட
இன்று நள்ளிரவு
திறக்கப்படும் கதவு
புத்தாண்டு....

எனது நட்பின்
உறவுகளுக்கு புத்தாண்டின் வரவேற்பு
🙏🙏🙏

வழக்கம் போல
இன்றிரவும்
அதே பன்னிரண்டு மணிதான்

நாளை ஒளிரபோவதும்
பழைய
சூரியன்தான்

நாளைமுதல் புதியதாய்
ஒரு பூமி
சுழலபோவதில்லை

நிலா வானம் நட்சத்திரங்கள்கூட
ஒட்டடைக்கூட
அடிக்கப்படாதவைகள்தான்.

நாமெடுக்கும் சபதங்கள்கூட
மிஞ்சி மிஞ்சி போனால்
ஓரிரு மாதங்களே தாக்குப்பிடிக்கின்றன.

ஆனாலும்
நள்ளிரவு பன்னிரண்டு மணியை
நெருங்க நெருங்க...

முதன்முதலில்
காதலைச்
சொல்லத்துடிக்கும்
இளமையின் தவிப்பைபோலவும்

பன்னிரண்டு மணிக்கு பின்
சொன்ன காதலை
ஏற்றுக்கொண்ட இன்பத்தையும்

நட்பாய் உறவாய்
பரந்து கிடக்கும் மனிதனின்
மனவெளி அடைகிறதே..

அந்த ஒரு
நொடியோ கணமோ நிமிடமோ மணிநேரமோ
அதுதான் நம்பிக்கை.

நம்பிக்கை கொள்வோம்
நல்லோர் வழி செல்வோம்
நல்லதையே சொல்வோம்

மணல் திருடாத மனம்
மரம் வெட்டாத குணம்
மலைகள் மீதான அன்பு

பெருக பெருக பெருகத்தான்
புதிய பூமி உருவாகும்
மனிதம் அதில் கருவாகும்.

நீயும் நானும் விதையாவோம்
நிச்சயம் காலம்
மழையாகும்.

2021 நமக்கான
படிக்கட்டாய்
மெல்லத் திறந்திடும் கதவு
இன்று இரவு
அதை மென்மையான கையாள்வோம்

அன்பை மட்டுமே விதைப்போம்
அன்பை மட்டுமே
அறுவடை செய்வோம்.

வாழ்த்துக்கள்!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (6-Jan-21, 8:52 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 183

மேலே