உரளுருவில் ஓங்கி

இணைக்குறள் ஆசிரியப்பா

அரையில் நீண்ட அரவம் அணிந்தாய்
உரளுருவில் ஓங்கி நின்றாய்
ஆர்க்கங்கை தலையில் தாங்கினாய்
திரிசூலம் கையில் ஏந்தினாய்
திணவின்றி தவத்தினில் மூழ்கினாய்
சுடுஞ்சாம்பல் மேனியில் பூசினாய்
புலித்தோலை கச்சையில் கட்டினாய்
எந்நேரமும் ஏகாந்தமாய் மிதந்தாய்
பரம்பொருள் எனப்படும் பரமனே
பரதேசி உருவநிலை இனிமேல் மாறுமோ.

வேந்தர் பலரின் உள்ளம் நுழைந்தாய்
விரும்பிய வாழ்வைத் தந்தாய்
விண்ணில் கதிராய் இருந்தாய்
பண்ணில் புகுந்து வாழ்ந்தாய்
எண்ணில் எழுத்தில் நடந்தாய்
எழிலாய் கோயில் கொண்டாய்
குரவர்கள் போற்ற மகிழ்ந்தாய்
குண்டலினி அடக்கி நின்றாய்
உயிர்களின் உடைமையாய் திகழ்ந்தாய்
ஊழியின் ஆதியே வணங்கி பணிந்தே
------ நன்னாடன்

இணைக்குறள் ஆசிரியப்பா

எழுதியவர் : நன்னாடன் (25-Jan-21, 8:11 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே