பழைய நண்பனின் மரணம்

இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.

அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.

அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.

காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.

நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.

தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.

சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.

அவன்...
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய...

திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது...
எப்படி கொல்வது ஒருவரை என.


___________________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (30-Jan-21, 2:29 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 500

மேலே